Saturday, October 5, 2013

மொட்டை மாடியில் ஒரு கொட்டகை

பறவைகள் சிறகுதட்டி ஆர்ப்பரிக்க,
ஆகா ஆகா என்று மரங்கள் எல்லாம்
தலைகள் ஆட்டி ஆடும் மொட்டை மாடியில்,
அவனது ஓலைக் கொட்டகை மாத்ரம்
அவன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம்
சாதிக்கிறது அந்த மௌனத்தை!

அதில் ஒரு குருவிக் குடும்பம்
கூடு கட்ட வேண்டுமென்று,
பூ பத்தி தேங்காய் பழங்களை
ஒயிலாகத் தன்னுள் கொள்ளும்
பூஜைக் குடலை ஒன்றை
அதன் ஒயில் குன்றாது தொங்கவிட்டான்

குருவிக் குடும்பமொன்று
குடியேறி விட்டதாவென்று
அடிக்கடி அவன் பார்த்தான்
பாம்புப் படிக்கட்டின் தலையாகி

பூஜைப் பொருள்களற்ற
பூஜைக் குடலையோடு
பூஜிக்கப் படுவோனும்
பூஜிப்போனுமில்லாது
ஒரு பூஜை நடக்கும்
வெற்றுக் கோயிலாக
மாடிமீது அந்தக் கொட்டகை
இன்னும் அதே மௌனத்தில்!

ஒரு நாள் அது நடந்தே விட்டது.
பந்துக்களோடு வந்து படபடத்து நின்ற
ஒரு குருவிக் குடும்பத்தின் கூச்சல்.
அப்போதும் அந்தக் கொட்டகை
அதே மௌனத்தில்!
பறவைகளின் கூச்சலைப்
பரவசமிக்க ஒரு பாடலாக்கிற்று
அந்த மௌனம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP