Friday, October 4, 2013

மலைக் கோயில்

அடிவாரத்தில் அமர்ந்து
விலா நோக, விழி குத்த
செதுக்கிச் செதுக்கி என்ன பயன்?
”என்ன பயனா?
பார் அந்தப் புன்னகையை!
கல்லில் அகப்படவில்லையா தெய்வம்?”
என்று முறைக்கிறான் சிற்பி

பாட்டாளித் தலைச் சுமைக்காரனுக்குக்
கல்லென்ன? சிலையென்ன? தெய்வமென்ன?
எல்லாமே கழுத்தை இறுக்கும்

பிரதிஷ்டைக்காக
மலையுச்சியை வந்தடைந்த கல் –
இல்லை, சிலை –
இல்லையில்லை, தெய்வம் –
சிற்பிகள், சுமைகூலிகள் மற்றுமுளோர்
அனைவரையும் திகைப்பிலாழ்த்தியபடி

ஆவியாகிக் கரைந்து மறைந்து
வியாபித்தது எங்கும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP