Monday, October 14, 2013

நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்

ஆராத்தி எடுக்கப்படுவது போன்ற சலனம்.
வெள்ளத்துப் பூக்களாய் மிதந்துவரும்
மேகங்களைப் பார்வையிடும் சூர்யன்.
உடம்புக்குச் சந்தனம் தடவுவது போன்ற காற்று.
சாரல் என்மீது பன்னீர் தெளிக்கையில்தான்
உணர்ந்தேன், சொர்க்கத்தின்
நுழைவாயிலிலேயே நான் நின்று கொண்டிருப்பதை

’குற்றாலத்தில் நல்ல சீசன்’ என்றான்
உலக அறிவாளி ஒருவன்
இவ்வளவு பக்கத்தில் நின்று
சீசன் தன் கை நீட்டி அழைக்கையில்
விட்டு வைப்பார்களா யாராவது?

பணக்காரர்கள்தான் போகிறார்களா?
தேங்காய் உடைப்பு ஆலைத் தொழிலாளிப் பெண்கள்
துவரை உடைப்பு ஆலை
உப்பு சுமப்போர்
ஒரு பள்ளி ஆசிரியர்கள்
ஓரலுவலகக் கூட்டாளிகள்
ஓர் இயக்கத் தோழர்கள்
எல்லோரும்தான்
கூடிக்கூடிச் செல்கிறார்கள்
குழு குழுவாய்ச் செல்கிறார்கள்

என்னிடம்தான்
போதுமான காசும் இல்லை,
ஆகவே கம்பெனியும் இல்லை
(’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’)
ஆனால்;
அவ்வுலகின் நுழைவாயிலிலேயே நின்றிருந்த நான்
காசும் கம்பெனியும் வேண்டப்பட்டதாலா
உள் நுழையாது நின்றிருந்தேன்?
பன்னீர் தெளித்து வரவேற்ற தோரணையில்
இல்லையே அந்த எதிர்பார்ப்பெல்லாம்!
பின், எப்படி நேர்ந்தது
இப்படி நான்
நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்?

சொர்க்கத்தை
வெறும்
குற்றால சீசனாக்கிவிட்டது;
உலகியலறிவும் பற்றாக்குறையும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP