Sunday, October 13, 2013

கொசு

மிகப் பிரியமான ஜீவன் அது
பிரியத்தைப் போலவே
அதன்மீது நான் எரிச்சலை உமிழும்
சமயமும் உண்டு
எனது இரத்தமே அதன் உணவாவதில்
பெருத்த ஒரு நியாயம் இருக்கிறது
என்ற அமைதியும் உண்டு என்னிடம்
காரணம்:
எனது குற்றங்களின் சாக்கடையே
அதன் ஜன்மபூமி என்பதுதான்

உங்கள் காதுகளைத் தேடிவந்து
அது பாடும் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?
’யாரறிவார்
பாவப் பிறப்பறுக்கும் அப்பாடலை அது பெற்றவிதம்?’
என வியந்ததுண்டா?
விழிப்பை இறைஞ்சும்
அந்தப் பாடலின் பொருளறிய
நீங்கள் முயற்சித்ததுண்டா?
அப்படியெல்லாம் மெனக்கெடாமல்
’பட்’டென்று
நீங்கள் அதைக் குறிவைத்த அடி
உங்கள் உடம்பின்மீதும் விழுந்ததையாவது
யோசித்தீர்களா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP