Saturday, August 17, 2013

இவ்விடம்

சூரியனை விழுங்கக் குவிந்த
தாமரை இதழ்களுக்குள்
வண்டுதான் அகப்படுகிறது.
இங்கே
நகமும் வேண்டியிருக்கிறது,
நக வெட்டியும் வேண்டியிருக்கிறது.
அட, உதறுவதால் உருவாகும்
துணி மடிப்பின் நிழலை
உதறி உதறிப் போக்க முடியுமா?
என்ன சொல்கிறாய் நீ?

”வான் நோக்கி வளர்ந்து அடர்ந்து
நிழல் தரும் மரங்கள் ஏதும் கேட்கவில்லை.
பூமி நோக்கித் தொங்கி அடரும்
கொடியோ பந்தல் கேட்கிறது.
ஏழை நான் என் செய்வேன்?”

புலம்பாதே,
கொடியைத் தூக்கி மரத்திலிடு.
கடைத்தெருவில்
எவ்வளவு இருந்தால் என்ன?
எல்லாப் பொருளையும் விலை விசாரித்துக்கொண்டு
எதையும் வாங்காமலேயே போய்விடலாம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP