Friday, March 15, 2013

மரணச் செய்தி

இரவோ பகலோ எவ்வேளையானாலும்
வானத்தைப் பார்த்துக் காலத்தை கவனித்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
எரிஎண்ணெய் எரிவாயுச் சமையல்
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத
அந்த மனிதன் இறந்துவிட்டான்
காலுக்குத் தவறாது செருப்பணிவதையும்
காய்ச்சலுக்கு டாக்டரை அணுகுவதையும்
அந்நியமாய் உணர்ந்த
அந்த மனிதன் இறந்துவி்ட்டான்
மின்னல் மழைக் காடுகளில்
கருக்கலோடு போய் காளான் சேகரிப்பதற்கும்
நிலா நிறைந்த குளம் குட்டைகளில்
ராவெல்லாம் தூண்டில் போடுவதற்கும்
காடுகள் கொடிகள் படர்ந்து பச்சித்திருக்கையில்
கோவங்காய்கள் சேகரிக்கவுமாய் வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
சேமிப்பை அறியாதவனும்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனுமான
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பூட்டத் தேவையில்லா வீட்டை வைத்திருந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பனிக்கும் மழைக்கும் மட்டுமே
முற்றத்தைவிட்டு வீட்டுக்குள் துயின்ற
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பருவம் தோறும் ஒரு படர்கொடியால்
முற்றத்தில் பந்தலிட்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தான் குளிக்கும் நீர் கொண்டே
தன் முற்றம் குளிரும் ஓர் ஈரவிரிப்பை
நாள்தோறும் நெய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
ஆலைச் சங்கொலியையும்
ஆயிரமாய் விரையும் மனிதர்களையும்
ராட்சஸ இயந்திரங்களையும் கண்டு மிரண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தனது முதல் வணக்கத்தைச்
சூரியனுக்குச் செய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தானே மண் குழைத்துத் தன் கையாலேயே
தன் வீட்டைக் கட்டிக்கொண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தன் பிள்ளைகளின் ’முன்னேற்ற’த்தைக் கண்டே
அஞ்சியவன் போல் ஒதுங்கி வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP