Monday, January 7, 2013

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
வெகுளி மகிழ்ச்சி கொண்டு
விழிவீசிச் சுட்டினாள் என் மனைவி

பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பங்களிலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா

நர்சரிப் பள்ளி போவதற்குமுன்
அவள் எப்படி இருந்தாள் என்பது
அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ
படிப்பில்தான் எத்தனை வேகம் காட்டினாள்!
அரசுத் தேர்வுகளிலும் அரசு வேலைத் தேர்வுக்கும்
போட்டி போட்டுப் படித்தாளே அவள்!
வெற்றிவாகை சூடிய கையோடு
மணாளன் ஒருவனையும்
படக்கென்று கைப்பிடித்தாள்

அந்த பத்தாயிரம் ரூபாய் பட்டுப்புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையிலே கூடுதலாய்
அசுவமேத யாகம் செய்யப் போகிற ஒரு
சக்கரவர்த்தினிப் புன்னகையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பத்திலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
நான் கவனிக்கவில்லையோ என நினைத்து
மீண்டும் உசாவினாள் என் மனைவி.
”பார்த்தேன், பார்த்தேன்.”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP