Saturday, October 19, 2013

எனது வீட்டுத்தோட்டம்

உலகின் பதற்றநிலையிலிருந்து
வெகுதூரம் இல்லை எனது வீடு
வீட்டின் ஜன்னலை உரசிக்கொண்டுதான்
நிற்கிறது எனது தோட்டம் எனினும்
உலகைவிட்டு, இந்த வீட்டைவிட்டு
வெகுதூரம் தள்ளியிருக்கிறது எனது தோட்டம்


நான் விழிப்பதற்கு முன்
என் கனவில் தென்பட்டது?
காடோ? தரிசோ?
விழித்தவுடன் என் கண்ணில்படாது
(ஒரு ரசாயன மாற்றம் பெற்று
மறைந்துகிடக்கும் சக்தியாக மட்டுமே
அது இருக்கலாம்)

மூங்கில்களைத் துளையிடும் வண்டுகளைப் போலவும்
தன் சிறகுகளால் இரும்பு விலங்குகளை
உடைத்துவிடக்கூடிய வண்ணத்துப் பூச்சிகளைப் போலவும்
இன்று மட்டுமே உலாவுகிறது இங்கே
இல்லை;
காய், கனி, பிஞ்சு, கனியுள் விதை என்று
எக்காலமும்
இன்றாக மட்டுமே இருக்கிறது இங்கே

கடிகாரங்களைப் பார்த்து அன்று
பூமியின் பருவகாலங்களைக் கேட்டு
அவை நடக்கின்றன,
ஒரு துறவியின் உள்ளத்தைப் போல,
துறவிக்கும் என் தோட்டத்திற்கும் வீடு
கிடையாது என்று எண்ணியிருந்தேன்; அது தவறு,
தோட்டக்காரனின் பராமரிப்பே
தோட்டத்தின் வீடு
தோட்டப் பராமரிப்பில் இருக்கும் ஒருவனிடம்
ஒரு மதவாதிக்கோ தத்துவவாதிக்கோ
தீர்க்கதரிசிக்கோகூட சொல்வதற்கு ஏதுமில்லை

Read more...

Friday, October 18, 2013

அன்பின் முத்தம்

பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

Read more...

Thursday, October 17, 2013

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு

ஒரு கவிதை எழுதப்படுவதற்கு முன்னும் பின்னும்
நான் எவ்வாறு இருக்கிறேன் தெரியுமா?

இருண்ட கானகத்துள் தொலைந்து போனவன்
அடுத்த அடியை வைக்கும் பாதம் தொடுவது
பெரும் முள்பரப்பா, ஆழ் சகதியா, பள்ளமா தெரியாது
எனது வழியற்ற வழியில் நான் கண்டவர்கள்
குறிக்கோளையும் பாதைகளையும் மிகத் தெளிவாய் அறிந்த
தீர்க்க நடையினர்
நானோ சென்றடைய வேண்டிய இடத்தின்
திக்கோ அடையாளமோ தெரியாதவன்
வழிகாட்டப்படக்கூடும் வாய்ப்பினை இழந்தவன்

பீதியுற்ற குழந்தையாய்
நான் அரண்டு நின்றதும் வெகு நேரம் இல்லை.
கதறி அழுவதையும் விட்டுவிட்டேன். அதன் எதிரொலியாய்
கானகமே அழுவதைக் கண்டு
பிறிதோர் மேன்மைப் பயத்திற்கு ஆட்பட்டு
இப்போது நான் அடிக்கும் சீட்டியொலியும், குரல் தூக்கலும்
பாடல் அல்ல; பயத்தின் பேய்விரட்டல்

அதோ அந்த விண்மீன்களிடமிருந்தா?
இந்தக் குன்றிடமிருந்தா?
இந்த மரங்களிடமிருந்துதானா?
ஏதோ ஒரு மௌனமான
பொறுமைப் பார்வையினின்று வந்த காற்றில்
ஓர் அற்புதம் போல் முகிழ்ந்த ஒரு மலரால்
இக் கானகச் சூழல் எனக்கு அன்யோன்யப்படும்
அந்தக் கணம், எல்லாமே மாறிவிடும்
நானும் புதியதாய்
ஒரு கவிதையை எழுத அல்லது வாழத் தொடங்கியிருப்பேன்

Read more...

Wednesday, October 16, 2013

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு

அடுத்த அறையில் என் மனைவி என் மகளிடம் -
”அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார்?”
”கவிதை...”

நான் அந்தச் சொல்லை எத்தனையோ பேர்
எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்விதமாய்
அர்த்தச் செறிவும் அர்த்தமின்மையும் ஒருங்கிணைந்த
ஓர் அம்ருதத் தன்மையுடன்
ஒரு நாளும் ஒலித்ததில்லை அது.
ஏன்?
அவளுக்குக் கவிதை தெரியும் என்பதாலா?
அல்லது ஏதும் அறியாத சின்னஞ் சிறுமி என்பதாலா?

நான் எழுதி முடித்த கவிதையைத்
தனக்கு வாசித்துக் காட்டியே ஆகவேண்டும் என்பாள் அவள்.
அப்போது அவளுக்குப் புரியுமொரு மொழியில்
மொழிபெயர்ப்பாகும் அக் கவிதை.
நன்றாயிருக்கிறதெனப் பரவசித்து
என் கன்னத்தை
தன் மொட்டுவிரல்களால் எடுத்து முத்தமிடுவாள்

முதல் ரசனையை ஏற்ற
என் கவிதையின் அந்தக் காட்சியை உற்சாகத்தோடு
நான் என் கவிதை ரசிக நண்பரொருவருக்கு
நடித்துக் காட்டுகையில்
அது அக்கவிதையின்
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும்
அதில் ’எனது கன்னம்’ என்பது
’வெளி’ என்றாகியிருக்கும்

அதனாலென்ன?

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புத்தானே
முற்றான கவிதை

Read more...

Tuesday, October 15, 2013

ஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்

தன்னந்தனியே
ஓடோடி வந்து
நான் அந்த இடத்தைக் காண விழைவேன்
சூர்யன் உதித்துவிடும் முன்னே!

ஆனால் அந்தோ
நான் அங்கே வந்த உடனேயே
சூர்யன் உதித்துவிடுகிறது!

சூர்யன் வரும்முன்னே
வந்துவிடும் அதன் மெல்லொளியில்
இருளும் குளிரும்கூட இதமாயிருந்தது

பருவமொட்டின் ஊசிநுனியை
உள்நின்று மோதியது
பிரபஞ்ச விரிவின் பெருக்கு

குன்றை நேசித்தபடியே
அதைப் பிளந்துகொண்டிருந்தது மரம்
அந்தப் பிளவில் தம் பீடமைத்தன பறவைகள்
குன்றை நேசித்தபடியே
அதைக் குடைந்தேன் நான்
குன்றை நேசித்தபடியே
என் கவிதைகளை அதன் மீது
கிறுக்கினேன் நான்

ஓ ஷம்லா குன்றே!
காலை உணவைக் கைவிட்டுவிட்டு உலாவுகிறேன்
அடிவானில்
என் பசியைப் போல்
உதித்து ஏறிக்கொண்டிருக்கும் சூர்யன்முன்
’என்னைப் புசி’ என்னும் ஓர் அற்புத உணவாய்
நான் நின்றேன்
ஓ ஷம்லா குன்றே!
இனி இங்கிருந்து வேறெங்கும் நகர
விரும்பும் வேட்கையெனும் சக்தியற்றுக்
கிடக்கும் ஒரு பெரும் ஏரி நான்
சூர்யவொளியின் தீவிரத்தை எதிர்கொண்டு
என்னிலிருந்து உயர்ந்தெழும்
நீராவியல்லவோ என் கவிதை!
ஏதோவொரு கோணத்தில்
சூர்யனாய்த் தகதகத்தது ஏரியும்.
சூர்யனின் உன்னிப்பான பார்வையில்
பளிங்கு ஏரியில்
பளீரெனத் துலங்கியது
படிந்துள்ள அனைத்தும்

Read more...

Monday, October 14, 2013

நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்

ஆராத்தி எடுக்கப்படுவது போன்ற சலனம்.
வெள்ளத்துப் பூக்களாய் மிதந்துவரும்
மேகங்களைப் பார்வையிடும் சூர்யன்.
உடம்புக்குச் சந்தனம் தடவுவது போன்ற காற்று.
சாரல் என்மீது பன்னீர் தெளிக்கையில்தான்
உணர்ந்தேன், சொர்க்கத்தின்
நுழைவாயிலிலேயே நான் நின்று கொண்டிருப்பதை

’குற்றாலத்தில் நல்ல சீசன்’ என்றான்
உலக அறிவாளி ஒருவன்
இவ்வளவு பக்கத்தில் நின்று
சீசன் தன் கை நீட்டி அழைக்கையில்
விட்டு வைப்பார்களா யாராவது?

பணக்காரர்கள்தான் போகிறார்களா?
தேங்காய் உடைப்பு ஆலைத் தொழிலாளிப் பெண்கள்
துவரை உடைப்பு ஆலை
உப்பு சுமப்போர்
ஒரு பள்ளி ஆசிரியர்கள்
ஓரலுவலகக் கூட்டாளிகள்
ஓர் இயக்கத் தோழர்கள்
எல்லோரும்தான்
கூடிக்கூடிச் செல்கிறார்கள்
குழு குழுவாய்ச் செல்கிறார்கள்

என்னிடம்தான்
போதுமான காசும் இல்லை,
ஆகவே கம்பெனியும் இல்லை
(’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’)
ஆனால்;
அவ்வுலகின் நுழைவாயிலிலேயே நின்றிருந்த நான்
காசும் கம்பெனியும் வேண்டப்பட்டதாலா
உள் நுழையாது நின்றிருந்தேன்?
பன்னீர் தெளித்து வரவேற்ற தோரணையில்
இல்லையே அந்த எதிர்பார்ப்பெல்லாம்!
பின், எப்படி நேர்ந்தது
இப்படி நான்
நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்?

சொர்க்கத்தை
வெறும்
குற்றால சீசனாக்கிவிட்டது;
உலகியலறிவும் பற்றாக்குறையும்

Read more...

Sunday, October 13, 2013

கொசு

மிகப் பிரியமான ஜீவன் அது
பிரியத்தைப் போலவே
அதன்மீது நான் எரிச்சலை உமிழும்
சமயமும் உண்டு
எனது இரத்தமே அதன் உணவாவதில்
பெருத்த ஒரு நியாயம் இருக்கிறது
என்ற அமைதியும் உண்டு என்னிடம்
காரணம்:
எனது குற்றங்களின் சாக்கடையே
அதன் ஜன்மபூமி என்பதுதான்

உங்கள் காதுகளைத் தேடிவந்து
அது பாடும் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?
’யாரறிவார்
பாவப் பிறப்பறுக்கும் அப்பாடலை அது பெற்றவிதம்?’
என வியந்ததுண்டா?
விழிப்பை இறைஞ்சும்
அந்தப் பாடலின் பொருளறிய
நீங்கள் முயற்சித்ததுண்டா?
அப்படியெல்லாம் மெனக்கெடாமல்
’பட்’டென்று
நீங்கள் அதைக் குறிவைத்த அடி
உங்கள் உடம்பின்மீதும் விழுந்ததையாவது
யோசித்தீர்களா?

Read more...

Saturday, October 12, 2013

கடற்கரை நகர்

சின்ன வயதில்
நேராய் கிழக்குநோக்கி நடந்து சென்று
கடலை நான் பார்த்து வருவதுண்டு.
இன்று அந்த இடம், நிலம் விழுங்கி விழுங்கித்
தூரப் போய்விட்டது.
ஏற்கனவே
நலிந்த பகுதியாயிருந்த எமது கடற்கரை
நகரத்தின் சாக்கடை கலந்த ஓர் ஏரி போலானது.
கடலின் பெரும் பெரும் உயிர்களால்
சுத்தமாகி விடாதபடிக்கு தனித்துவிட்டது.
கண்ணெட்டுந் தூரத்திலிருந்த தீவும்
நிலம் தீண்டி தீபகற்பமானது.
கப்பல்கள் வந்து நிற்கத்தகும் கடல் ஆழம் காண
கடலூடே நெடுந்தூரம்
சாலையமைக்க வேண்டியதாயிற்று

இன்று
பொங்கி எழுந்து
நுரை சிலிர்த்து வீசிவரும்
அலைகள் காண,
கால்களை நனைத்து, திரும்பத் திரும்பத்
தன்னுள் என்னை அழைத்துக்கொள்ளும் கடல் காண
இந்த நகருக்குள்ளே பஸ் பிடித்து
இந்நகரைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று
ஆனாலும்
கடலின் இடையறாத பெருங்குரல் மட்டும்
எங்கும் எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

Read more...

Friday, October 11, 2013

எனது குழந்தைகள்

கொலுசுப் பூச்சிகள் ஒலிக்கக்
குறுகுறு என ஓடிவந்து
என் கண்களைப் பொத்தும் நிஷா.
கண்களைத் திறந்துவிட்டு...
பட்சிகள் சப்தம் கை கொட்டிச் சிரிக்க
இலைகளை ஊடுருவி நிற்பாள் உஷா

காலையில் கண்ணைக் கசக்கி எழுகையில்
கையைப் பிடித்து இழுத்துப் போய்
வால் நட்சத்திரங்களாய்ச் சிந்திக் கிடக்கும்
பன்னீர்ப் பூக்களை வியப்பாள்

விழித்தவுடனேயே
ரோஜாப் பதியனின் முகத்தில்
புதுத் தளிர் பார்க்கும்
என்னுடன் அமர்ந்து
பூவை - அதிலே
கனவிக் கனவிக் களிப்பாள்
சூர்யபிரபா
O

என் அல்ப ரூபத்தில்
அடையாளம் காணமுடியாமல்
பள்ளி போகும் தெருவெல்லாம்
பாராமல் போகும் குழந்தைகள்,
ஓடும் பஸ்ஸில்முன் ஸீட்டுப் பெண்ணின்
தோள்வழி எட்டிக்
கண்டுகொள்ளும்;
சிரிக்கும் எனக்கு

முற்றத்து நிழலில்
வீடு கட்டிச்
சீரும் செட்டுமாய்க்
குடும்பம் நடத்திப்
பிள்ளைகள் பெற்றுப்
பெரிய மனுஷர்களாய்
விளையாடும் வாழ்க்கை

Read more...

Thursday, October 10, 2013

புழு

நட்டநடுச் சாலையில் ஒரு புழு

என்னை வியக்கவைத்தது;
பயம் பதற்றமற்ற நிதானமான அதன் நடை
வேட்டையாடாது, வியர்க்காது
இலைகள் தின்று உயிர் வளர்க்கும்
அதன் வாழ்க்கை.
இயற்கை மத்தியில்
தன்னுள் ஆழ்ந்து
தானே ஆகிய கூட்டில்
சிறகு முளைக்கும் வரை புரியும் தியானம்

சிறு குச்சியொன்றைக் கையிலெடுத்து
அதைச் சீண்டுவேன் விளையாட்டாக;
பயம், பதற்றத்தை நான் அதற்கு ஊட்டுவேன்
சிறுவயதில்
அது துன்புறுவதை அறியாத ஆய்வு ஆர்வம்
சிறுவயதினுள் பெருவயதின் குரூரம்

Read more...

Wednesday, October 9, 2013

மொட்டைமாடிக் கொட்டகையும் ஆன்டெனாவும்

சொர்க்கத்தின் கனி பறிக்க
உன்னி எழுந்து வீறிட்ட
ஆன்டெனா விரல்கள்
காற்று உரத்து வீசும் காலம்
ஆன்டெனாக் கம்பம் பொருத்தப்பட்ட
தூண் சரிந்து
ஆட்டங் காண்கிறது,
குருவிக் குடும்பம் ஒன்றுள்ள
என் மொட்டைமாடிக் கொட்டகை

ஆன்டெனாக் கம்பம் அறையும்போதே
அடி கீறி
மாடியோடு தன் பிடிப்பை விட்டுவிட்டது
அத்தூண்
காற்று உரத்து வீச வீச
அசையும் ஆன்டெனாக் கம்பத்தோடு
அசையும் அத்தூண்
தன்னோடு இழுத்துச் சரித்துவிட்டது
தன் பின்னாலுள்ள தூணையும்

வீசும் காற்று
ஆடும் கொட்டகை
சரிந்த தூண்கள் என்றாகிவிட்ட
இன்று,
விருட்சம் ஒன்றிலிருந்து
பாய்ந்துவந்தது ஓர் ஒளிக்கற்றை.
அந்த ஆன்டெனாவைப்
பாய்ந்து பற்றியிருக்கும்
ஜீவனுள்ள ஓர் ஒற்றைக் கம்பி,
அதனால் மட்டுமே
இன்னும் விழாதிருக்கிறது கொட்டகையும்.
ஆன்டெனாவைப் பிடித்திருக்கும்
முத்திசைக் கம்பிகளில்
ஜீவனுள்ள அக்கம்பியே நடுநரம்பாக
இன்றைக் காக்கும் இன்றாக
அனல் பற்க்கக் கிளர்ந்து நிற்கிறது
அசுரபலத்துடன்

Read more...

Tuesday, October 8, 2013

இனி இவள் உன்னுடையவள்

உள்ளங்கைக் குழிவிலிருந்து
இறக்கிவிடு இறக்கிவிடு எனத்
துடிதுடித்தன விதைகள்

நாற்றங்காலில் வளர்ந்தபடி
வீதி வீதி வீதி என அரற்றல்

வீதிக்கு அழைத்து வந்தேன்
விலங்குகள் விலங்குகள் என நடுக்கம்

வேலிக்கெனச் செலவழிக்க இயலாத ஏழை நான்
முள் விளாறுகளை வெட்டி வேலியமைக்கிறேன்
காய்ந்த முள் விளாறுகளை அடுப்பெரிக்க
பிடுங்கிச் செல்லும் ஏழைகள்…
அவர்களை என்ன செய்ய?
நான்தான் என் வழிமுறையை மாற்றிக்கொண்டேன்

விலங்குகள்.. முன்னங்கால்கள் தூக்கி
எக்கி எழுந்து வாய் நீட்டும்
அவற்றின் வாய்க்கு அகப்படாத உயரம்வரை
என் வீட்டிலேயே வளர்க்கிறேன் இவளை

அன்பானவனே!
இப்போது
இடுப்பிற்கு மட்டும் சிறியதாய்
ஒரு முள் ஆடையை அணிவித்திருக்கிறேன்.
பூமி குளிர மழைக்கும் உன் கரங்களில்
இவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டேன்.
இதுவரை இவள் என் மகளாக வளர்ந்தாள்
இனி இவள் உன்னுடையவள்

Read more...

Monday, October 7, 2013

ஜானகியின் அதிகாலை

ஜானகி விழித்தெழுந்தபோது
எதைப் பார்த்திருந்தனவோ நட்சத்ரங்கள்
சொல்ல முடியாத ஒரு வியப்பில் முழித்தன அவை

ஆதரவற்றுத் தன்னந்தனியாக இருந்தது பூமி
சூடான கண்ணீர்த் துளி ஜில் என்று தொடுகையாவது போல்
குளிர்ந்திருந்தது பொழுது
நிலவொளியில் கருகருவென்று மேகங்கள்
பூமியைவிட்டு விலகிச் சென்று கொண்டிருந்தன
பூமியின் மிக மெல்லிதான மூச்சுக் காற்றில்
அதிர்ந்து நடுநடுங்கின
அதன் நாசியில் கூடு கட்டியிருந்த
சிலந்தியின் வலைகள்

மோனத்தைக் கிழித்துப் பயத்தை எழுப்பப் பார்த்தது
தென்னை மரத்தின் மீது துயில் கலைந்து
இடம் மாறிய ஒரு கரிய பறவையின்
ஒற்றைக் குரல் – ’கர்!’

அறியாதவோர் உலகில் நுழைந்து
அறியாதவோர் செயலைச் செய்துவிட்டு
முழிக்கும் சிறுமியைப் போல் ஜானகி
சும்மாவாச்சும் ஆள்காட்டி விரலால் பட்டனை அழுத்தி
இரவு விளக்கை அணைத்தாள்
இரவு முடிந்தது!

தினசரிக் காலண்டரின் மேல்தாளை நீக்கினாள்
நிகழ்ந்தது,
அந்த ஒரே செயலில் ஒரு பேரோசையுடன்
ஒரு நாளின் மரணமும்
பிறிதோர் நாளின் பிறப்பும்!

யாவற்றுக்கும் பின்னாலுள்ளதும்
நட்சத்ரங்கள் பார்த்துக் கொண்டிருந்ததுமான
ஒரு பூதாகரமான வெறுமையைப்போல்
நின்றுகொண்டிருந்தாள் ஜானகி,
ஏதோ ஒன்று அந்த வெறுமையிலிருந்து பொங்கி
அந்த வெறுமைமீதே பொழிவது போல்
திடீரென்று குழாய்நீர் சொரியும் ஓசை

ஒரு குடத்தினுள்ளே அந்நீர் சொரிந்து பெருகுவதுபோல்
கூடிவரும் ஒளி

Read more...

Sunday, October 6, 2013

ஒற்றை மரம்

ஒரு மேற்கத்திய இசை நடத்துநனைப் போல்
உணர்ச்சியுடன் கைகளை அசைத்து அசைத்து
உருகிக்கொண்டிருந்தது தனித்த வேப்பமரம் ஒன்று

வாத்ய கோஷ்டி ஏதும் எதிரே இல்லை!

வியர்த்தம் வியர்த்தம் எனக் கரைந்தது
அதன் கிளைகளூடே ஒரு காகம்

ஆச்சர்யத்துடன் அந்த மரத்தை நெருங்கினேன்
அது எழுப்ப விரும்பும் இசையைக்
கேட்க விரும்பியவன் போல் –

தன்னுள்ளே ஏராளமான வாத்யங்களுடன்
தானே இசைத்துக்கொண்டுமிருந்தது அது!

அந்த இசையைத்தான்
இன்னும் என் செவிகள் எட்டவில்லை
காரணம்?
புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர்!
ஆயினும் என் மனம் குதூகலித்தது
நான் கேளாத அந்த இசைக்கு
அந்த மரத்தின் உறுப்புக்கள் அனைத்தும்
நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு

திடீரென்று ஓர் அமைதி,
அந்தக் கண்ணாடிச் சுவரின் தொடுகை
அதை உடைத்துக்கொண்டு ஒரு வெள்ளம்
என் செவியையே மூழ்கடித்து
அடித்துச் சென்றுவிட்ட இசைவெள்ளம்

Read more...

Saturday, October 5, 2013

மொட்டை மாடியில் ஒரு கொட்டகை

பறவைகள் சிறகுதட்டி ஆர்ப்பரிக்க,
ஆகா ஆகா என்று மரங்கள் எல்லாம்
தலைகள் ஆட்டி ஆடும் மொட்டை மாடியில்,
அவனது ஓலைக் கொட்டகை மாத்ரம்
அவன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம்
சாதிக்கிறது அந்த மௌனத்தை!

அதில் ஒரு குருவிக் குடும்பம்
கூடு கட்ட வேண்டுமென்று,
பூ பத்தி தேங்காய் பழங்களை
ஒயிலாகத் தன்னுள் கொள்ளும்
பூஜைக் குடலை ஒன்றை
அதன் ஒயில் குன்றாது தொங்கவிட்டான்

குருவிக் குடும்பமொன்று
குடியேறி விட்டதாவென்று
அடிக்கடி அவன் பார்த்தான்
பாம்புப் படிக்கட்டின் தலையாகி

பூஜைப் பொருள்களற்ற
பூஜைக் குடலையோடு
பூஜிக்கப் படுவோனும்
பூஜிப்போனுமில்லாது
ஒரு பூஜை நடக்கும்
வெற்றுக் கோயிலாக
மாடிமீது அந்தக் கொட்டகை
இன்னும் அதே மௌனத்தில்!

ஒரு நாள் அது நடந்தே விட்டது.
பந்துக்களோடு வந்து படபடத்து நின்ற
ஒரு குருவிக் குடும்பத்தின் கூச்சல்.
அப்போதும் அந்தக் கொட்டகை
அதே மௌனத்தில்!
பறவைகளின் கூச்சலைப்
பரவசமிக்க ஒரு பாடலாக்கிற்று
அந்த மௌனம்

Read more...

Friday, October 4, 2013

மலைக் கோயில்

அடிவாரத்தில் அமர்ந்து
விலா நோக, விழி குத்த
செதுக்கிச் செதுக்கி என்ன பயன்?
”என்ன பயனா?
பார் அந்தப் புன்னகையை!
கல்லில் அகப்படவில்லையா தெய்வம்?”
என்று முறைக்கிறான் சிற்பி

பாட்டாளித் தலைச் சுமைக்காரனுக்குக்
கல்லென்ன? சிலையென்ன? தெய்வமென்ன?
எல்லாமே கழுத்தை இறுக்கும்

பிரதிஷ்டைக்காக
மலையுச்சியை வந்தடைந்த கல் –
இல்லை, சிலை –
இல்லையில்லை, தெய்வம் –
சிற்பிகள், சுமைகூலிகள் மற்றுமுளோர்
அனைவரையும் திகைப்பிலாழ்த்தியபடி

ஆவியாகிக் கரைந்து மறைந்து
வியாபித்தது எங்கும்

Read more...

Thursday, October 3, 2013

ஆப்பிள் மரம்

என் ஜன்னல் வழியே
வானையும் நட்சத்ரங்களையம் மறைத்து நின்றது
ஒரு நூறு பறவைகளின் ஓசைகளுடன்
இலை செறிந்து அடர்ந்து
இருண்டிருந்த ஒரு மரம்

நான் அறிந்த பறவைகளின் ஓசை கேட்டு
இன்புறுகிறேன்,
அறியாத பறவைகளின்
அறியாத ஓசை கேட்கையில்
அந்த மௌனம் –
காரணமற்றுக் கண்ணீர் மல்கவைக்கும்
அந்த மௌனம்…

அறிந்தும் அறியாததுமான
பறவைகளின் கோஷ்டி கானம்
இலைகள் அமைத்த இருளைக்
கொத்திக் கிழித்துக்கொண்டிருக்கும் வேளை,
அந்த இருளின் ஆழத்துள்ளிலிருந்து
ஏதோ ஒன்று
எனக்கு மிக அருகில்
கதகதக்கும் ஜீவனுடன்

எனது பயத்தின் நரம்புகளைப் பிறாண்டியபடி
எச்சில் கனியுடன் ஓர் அணில்.
சர்வ ஜாக்ரதையுடன் அதிநுட்ப உக்கிரத்துடன்
அங்கும் இங்கும் அசைந்தன அதன் கண்கள்
அதன் இயக்கம் பம்மல், தாவல்
விர்ர்ர்களுடன்

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
என் ஜன்னல் கம்பிகளை முறைத்தபடி
மதில் மீது விர்ர்ரிட்டு ஓடித் தாவி
பறக்கும் வேட்கையில்
சிறகைக் கட்டிக்கொண்டு குதித்தவனைப்போல்
குதித்தது, மண்ணில் விழ விரும்பாது
ஒரு பறவையினுடையதாகி விட்டிருந்தது
அதன் குரல் மட்டுமே

Read more...

Wednesday, October 2, 2013

தனிமை

என் தனிமையைப் போக்கும்
ஒரு மணற்குன்று: விழிமூடிய இமைப் பரப்பு.
நான் போய் அமர்ந்திருந்தேன்:
இமைப்பரப்பைக் குனிந்து
முத்தமிடும் இதழ்வேளை

முத்தமிட்டதை முத்தமிட்டது விலகி நின்று பார்க்கையில்
மெல்ல இமை தூக்கிற்று
ஒரு சுரங்கக் கதவைப்போல் அந்த விழி
உள்ளே: ஒரு மலைப் பிரதேசத்தின்
கிடுகிடு பள்ளத்தாக்கின் அடியில் ஓர் ஓடை
அந்த ஓடையினின்று
என்னை ஈர்க்கும் ஒரு வாசனை
சரிந்து உருண்டு விழுந்துவிடாதபடி
அதீதமான ஓர் ஆர்வம் உந்த
நுண்ணுணர்வு துலங்க வெகு பத்திரமாக
கிடுகிடுவென வந்து சேர்ந்துவிட்டேன்

வந்து சேர்ந்த பின்னும்
குளிராய் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு தயக்கம் –
இன்னும் நான் கடக்க வேண்டிய தூரமாயிற்று
எங்கே அந்த வழி?

மூக்கு நுனியால் சோதித்து நிச்சயித்துக்கொண்டு
காட்டின் ஒளி நிழலை மீட்டியபடி
தேக்குமரச் சருகுகள் அதை உச்சரிக்க
தனது இரையை நோக்கி
தனது இயல்பான பசியின் கம்பீரம் துலங்க
நெருங்கிக்கொண்டிருந்தது ஒரு புலி
ஓடையின் பளிங்கு நீரில் அதன் முகத்தைக்
கண்ட மாத்திரத்தில்
அலறி அடித்துக் கிடுகிடுவென ஏறி
ஓட்டமாய் ஓடித் தப்பி
வெகுதூரம் வந்து திரும்பிப் பார்த்தேன்:

தூரத்தே நின்று என்னை அழைத்து
என் தனிமையைப் போக்கிய ஒரு மணற்குன்று
விழி மூடிய அந்த இமைப்பரப்பு

Read more...

Tuesday, October 1, 2013

வாசனை

மரங்களின் மடியில்போய் அமர்ந்திருந்தது என் வீடு
இந்தக் குளிர்காலக் காலையின்
நகர்ந்துகொண்டிருக்கும் குளிரை
எனக்காக சற்று பிடித்து வைத்திருந்தன மரங்கள்
இதோ வந்துவிட்டேன் என
அதை எட்டிப்பிடிப்பதுபோல்
என் பாதங்கள் ஒலித்து விரைந்தன
மாடிப்படிக்கட்டுகள் மேல்

செவ்வகமானது இந்த மொட்டைமாடி எனினும்
இன்னும் சில தலைமுறைகளையும்
மேலும் சில அறைகளையும் தாங்க
பூமியில் நன்றாய் அஸ்திவாரமிடப்பட்டது எனினும்
எல்லையற்ற வான்வெளி கண்டு
தன்னைத் துறந்துநிற்கும் பேறு கொண்டதுமாகும்

அந்த ஓய்வுநாளில்
மரநிழல் கனிந்த மொட்டைமாடியின்
ஏகாந்தம் – ஒரு பிரபஞ்ச கானம்
நாசிநுனியை பற்பலவிதமான சுகந்தங்களாய்
வருடக்கூடியது அந்த கானம்

இங்கிருந்து என்னைக் கீழே இழுத்துப் போடும்
மனைவியின் குரல் கேட்காது இன்று
(எல்லாம் வாங்கிப் போட்டுவிட்டேன்
ஒரு மாதத்திற்கு கவலையில்லை)
ஒரு தகராறுக்குச் சாட்சியாக
போலீஸ் அழைத்துக்கொண்டிருந்த
தொந்தரவும் ஒருவாறு முடிவு பெற்றுவிட்டது

கவலைகளைப் போலவே
இந்த நிம்மதிகளும் தொலைந்து
அமர்ந்திருக்கிறேன்

மரங்களிடையே திடீரென்று ஒரு பெரும் சலனம்,
மிகுந்த வேதனையுடன் அடிவயிற்றை இறுக்கியபடி
ஆலகால விஷமொன்றை வாரி விழுங்குவதுபோல
நாசிநுனியில் ஒரு துர்கந்தம்
கீழே சுற்றுப்புறத்தில்
ஒரு தொழிற்சாலையின் கழிவுத்தேக்கம்
என் சுவர்களுக்குள் பூக்கள்
(ஒவ்வொரு பூவின் உறுப்புக்கு நலம் தருவதாகும் எனும்
விபரப்பட்டியல் உண்டு என் மனைவியிடம்)

”இந்த வாசனையை இழுத்து முகருங்கள்
உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது இது” என்றபடி
என் நாசி நோக்கி நீண்ட அவள் விரல்களில்
இரத்தச் சிவப்பான ஒரு ரோஜா

என் உயிர் உறிஞ்சப்பட்ட வாசனை
என்னுள் நிறைந்து
என் வியர்வைத் துவாரங்களெங்கும் கமழ்ந்தது
ஆரத் தழுவி நின்றேன் என்னை நானே

Read more...

Monday, September 30, 2013

ஏதும் செய்ய இல்லா நேரம்

1
ரயில் சக்கரங்களால் இணைந்தன
இணையாத தண்டவாளங்கள்.
உக்கிரமானது எனது பிரயாணம்.
ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி ஆசை தீர நடக்கலாம்;
சுவடுகள் பதிக்கலாம்; ஆனால்…
க்ஷணமும் ரயிலை விட்டிறங்க மனசில்லை

2
ஸ்டேஷன்களில் நின்று டீ விற்போனே
சிற்றுண்டி, பழங்கள், பத்திரிகைகள் விற்போனே
இங்கே வா.. நீதான்… வா.
வந்துபோகும் பயணியிடம் கூட
நீ நேர்மையான வியாபாரியாய் இருப்பதற்கு
ரொம்ப ரொம்ப நன்றி! ஆ!
புறப்பட்டுவிட்டது வண்டி!

3
நாம் ஒருவரையொருவர் நோக்குவதென்ன?
நம் நினைப்புகளோ என்றும்
இணையாத தண்டவாளங்கள்
எப்போதும் ரயிலுக்கு முன்னும் பின்னுமாக

எண்ணங்களின் புகை மண்டாமல்
நாம் ஒருவரையொருவர் நோக்கலாகாதா?
அவரவர் ஸ்டேஷன் அவரவர் குறிக்கோளாயிருக்க
உறவின் நிழலாய் வரத்தானே செய்யும் பிரிவு!

ஸ்டேஷனில் இறங்கி
ஏக்கத்தோடு என்னை நோக்கும் பெண்ணே!
நான் இன்னொரு ஸ்டேஷனில்
இறங்க நினைத்திருந்தால்
அதைவிடுத்து உனக்காக
இந்த ஸ்டேஷனிலேயே இறங்குவேன்
தண்டவாளங்கள் இணைய, தண்டவாளங்கள் மேல்
நாம் கைகோர்த்து நடந்து செல்லலாம்.
ஆனால் நானோ எந்த ஸ்டேஷனிலும் இறங்க விரும்பாத
ஒரு விநோதமான பயணி. போய் வா.
எந்த ஸ்டேஷனில் நின்று நீ பயணம் மேற்கொண்டாலும்
அப்போது நாம் சந்திக்கலாமே

Read more...

காதல்

’நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?
உலகிலுள்ள எல்லாவற்றையும்விட
உன்னையே நான் அதிகம் காதலிக்கிறேன்’

’அப்படியானால் உன் பிரக்ஞையில் என்னோடுகூட
எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவே’

அவளுக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன்
’நான் உன்னைக் காதலிப்பது மட்டுமே அறிவேன்’
’அப்படியானால் நல்லது, வா’
’……………………………………’
’வா. ஏன் அப்படியே நின்றுவிட்டாய்?’
’இல்லை. இப்பொழுது
என்னால் உன்பின் வரமுடியாது’
’ஏன்? அதற்குள் என்னாயிற்று உனக்கு?’
’இப்பொழுது
காதல் மட்டுமே என்னிடமுள்ளது.
வெறும் காதல்’

Read more...

Sunday, September 29, 2013

வேட்டை

புலியின் மேலுள்ள கோடுகள்போல்
உடம்பெங்கும் சவுக்கடி
ஓயாத வலி, ஒரு புலி

உனது கண்கள்!
அதற்குள்ளே விநோதமான ஒரு வேல்
உனக்கும் எனக்குமிடையேயுள்ள
தூரம் எவ்வளவாயினும்
அவ்வளவு தூரம் நீண்டு என்னைக் குத்திக் கொளுவி
தன்னகத்தே இழுத்துச் சுருண்டுகொள்ளும் வேல்.

புலிதான் எனினும்
வேட்டைக்காரன் இழுத்துச் செல்லும் இரை நான்
வேலின் கொக்கி இழுப்பில்
மாமிசம் கிழிந்த கருணையால்
நான் விடுபட்டு நிற்கையில்
மீண்டும் பாய்ந்து கொளுவி
இழுத்துச் செல்கின்றன உன் விழிகள்…

தம்மை இழுத்துச் செல்லும் ஜீவநதியில்
நம் உடல்கள் சிலிர்த்த சிலிர்ப்புக்கள்…!

சிருஷ்டியின் கைகளில் பட்டுக் கொள்ளத்தானா
இத்தனையும்?
உன் கண்களுள் உற்றுநோக்குகிறேன்.
அங்கே நான்-
அந்த வேட்டைக்காரனாய்
அவன் கைகளிலிருந்து பெருகும் ஜீவநதியாய்
சிருஷ்டியாய்…

Read more...

Saturday, September 28, 2013

காமம்

உன்னைக் கண்ட முகூர்த்தமே
என்னை உன்னில் இழந்தேனோ?

இழந்த என் ஜீவனைத்தான்
உன் இதழில் என் இதழ் பொருத்தி
மீட்க முயல்கின்றேனோ?

மீண்ட என் ஜீவனோ – ’அநியாயமாய்’ –
என்னையே எரிக்க
என்னை
உன்னிலே வடித்துவிட்டு

சதா
கட்டை போலிருக்கவே முயல்கின்றேனோ?

Read more...

கோவணம்

வளர்ச்சியினைக் கண்டு மதனி சிரிக்க,
எனக்குள்ளே ’ஆண்மை’ எரிய, என்னை
கைக்குள்ளிருக்கும் சிசுவாகவே கண்டு
அம்மா அவள் பாட்டுக்குத் தேய்த்துக் குளிப்பாட்ட
கூடப் படிக்கிற பையன் ஒரு நாள் பார்த்துவிட்டுப்
பள்ளியெங்கும் ’வெட்கம்’ பரப்ப…
தீர்மானமாய் எடுத்து அணிந்து கொள்ளவிடாதபடி
ஏதேதோ தயங்க வைக்க,
ஒரு நாள்
அம்மாவின் அசப்பில்
மதனியைக் கண்டபோதோ
வெடுக்கென அணிந்து கொண்டேன்?
ஒரு நாள்
மதனியின் அசப்பில்
அம்மாவைக் கண்ட போதோ
மீண்டும் இந்த அம்மணங் காத்தேன்?

Read more...

Friday, September 27, 2013

மரத்தடியில்

மரத்தில் கட்டப்பட்ட தூளியில் துயிலும் குழந்தையைத்
தாலாட்டுகிறது
யாதுமாகி நின்ற பிரபஞ்சம்

அந்த மரத்தடியில் போயமர்ந்து
தியானிக்கலாம்
கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம்
குழந்தை அழுது காலுதைக்காதவரை

Read more...

கன்னி

உடல் கூசி, பரபரத்து ஒரு கூரைநோக்கி
ஓடி ஒண்டிய +2 தாவணியே!
பொட்டென்று விழுந்த ஒரு மழைத்துளி
வீதியில் வைத்து
திடுமென்று உன்னைப் பற்றி இட்ட முத்தம்

வெளியெங்கும்
ஆவேசமாய்ப் பெய்யத் தொடங்கிய மழையை
ஓயும்வரை பார்த்துக்கொண்டு நின்றாய்

இட்ட அடிகள் தழுவி
எடுத்த அடிகளுக்கு ஏங்கியுமாய்
பாதம் பற்றிய மழைநீர் கெஞ்ச
நிற்கிறாய் சற்று; ஆனால்
அப்படியே நின்றுவிட முடியவில்லை

பார்க்குமிடமெல்லாம் பளிச்சென்று
நனைந்து நின்றன மரங்கள், பறவைகள்.
பன்றிகளோடு பூமி.
நீ மட்டும் ஏக்கந் ததும்பும் முகத்தோடு
பத்திரமாய் வீடு வந்து சேர்கிறாய்

Read more...

Thursday, September 26, 2013

கீரைப்பாத்தி நடுவே ஒரு ரோஜா

யூனியன் போராட்டம், சினிமா விளம்பரம்,
ஃபேமிலி எய்டு போன்ற
எல்லா நோட்டீஸ் தாள்களிலும் கிடைக்கிற
வெற்றிடங்களை
கவிதை எழுதப் பயன்படுத்துகிறேன்
கீரைப் பாத்தி நடுவே
ரோஜாவும் வைத்திருக்கிறேன்

வேலியற்ற என் வீட்டுக் கீரைப்பாத்திகளை
அண்டைவீட்டு விலங்குகள் மேய்ந்துவிடுகின்றன
(வேலியிடப் போகிறேன் அதற்கு)
விலங்குகளையும் முந்திக் கொண்டு
என் ரோஜாவைத் திருடுவது மட்டும்
யார் என்று அறிகிலேன்!

கொடுப்பதற்கு மறுக்காத என்னிடம்
தன்முகம் மறைத்துக் கொள்ளவோ திருட்டு?

Read more...

Wednesday, September 25, 2013

நாடகக் கொட்டகை

எல்லா வேஷங்களுமே
எனக்குப் பொருந்தாமலே
கழிந்துகொண்டிருக்கிறது
ஒப்பனை அறைக்குள் உட்கார்ந்து அழுகிறேன்
பலபலவென்று கைதட்டல்…
என் கழிவிரக்கமும், ஒரு நடிப்பென அறிந்தவேளை
நடிப்புக் கோலத்தில் நடிப்பைத் துறந்தவனானேன்
ஆனால், விடுவார்களா என்னை
என் சக நடிகர்கள், ரசிகர்கள்?
பார்வையாளர்களிடமிருந்து ஒரே கூச்சல்!
ப்ராம்டர் பல்லைக் கடித்தபடி
வசனம் எடுத்துக் கொடுக்கிறார்

நான் சுதாரித்து என் திறமைகளை அணிந்துகொண்டு
பொய்ப்பல் கண்ணடிக்கச் சிரித்து
ஒப்பனை முலைகளை அசைத்தும்
அடிக்கடி கள்ளப்பார்வை நீட்டியும்
எவ்வளவு அசிங்கமாகவெலாம் ஆரம்பித்தாகிவிட்டது!

இக் கேவல வாழ்வுக்கிடையிலும்
கைதட்டலுக்காய் ஆசைக்கண் நீட்டியபோது-

பார்வையாளரே இல்லாத கொட்டகை!
யாரோ ஏளனமாய்ச் சிரிக்கும்
சிரிப்புமட்டும் கேட்கிறது

Read more...

Tuesday, September 24, 2013

ரயிலில் சந்தித்தவன்

ஏறியது தெரியும்
இறங்கியது தெரியும்
வேறொன்றம் தெரிந்திலேன்
நீண்ட பயணம்தான் அது எனினும்
இரவு அது;
உறக்கம் கொண்டுவிட்ட இரவு

ஓர் அந்திப்பொழுதின் அழகைச்
சிதறடித்துக் கொண்டு ஓடிவந்து
வண்டியைப் பிடித்தேன்
ஆசுவாசம் கொண்டு சகமனிதர்களை
நேசத்துடன் நோக்கத் துவங்குகையில்-
என்ன பரிதாபம்-
விழிகளை உறக்கம் கவ்விக்கொண்டது

யார் யாரையெல்லாமோ சந்தித்தது
உறவாடியது; பேசிச் சிரித்தது; விவாதித்தது;
நிற்கும் ஸ்டேஷன்களில் நின்று
உணவு விற்போரைக் கண்டது; வாங்கி உண்டது
எல்லாம் உறக்க மயக்கத்தின் போதையில்
வந்து போன பிம்பங்களாய்க் கழிந்தன

இன்று,
என் கதவைத் தட்டி அறைக்குள் வந்து நிற்கிறாய்
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு.
நீ கூறும் என் பயண நாட்களை வைத்து
சரிதான் என்று ஊர்ஜிதம் செய்கிறேன்

என் உறக்கத்தின்
போதை இருளிலிருந்து வந்திருக்கிறாய்.
மேலும், நான் தூங்கியபோது விழித்திருந்து
என்னைக் கண்டவன் நீ
ஆ!
உன்னைச் சந்திக்கிறதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

Read more...

Monday, September 23, 2013

இரவின் அமைதி

சாந்தி!
இன்னும் சில வாரங்களில் நான் உன்னை
அழைத்துக் கொள்ள முடியுமென நினைக்கிறேன்

அடுத்த அறையில் நமது அச்சு இயந்திரங்கள்
அவற்றின் இரைச்சல்.
நம் போஜனத்துக்கான இது
தவிர்க்க முடியாதது. அதே சமயம்
அதன் ஓசை கொடியது… முக்கியமாக இரவில்

இரவில், இரவின் குளிர்ச்சி உள்ளது
நக்ஷத்ரங்கள் உள்ளன; நிலவும் இருக்கிறது
இரவின் அமைதியை நாம் இழந்ததால்
அனைத்தையும் இழந்தவர்களாகி விட்டோம்

இதில் நீ தப்பிக்க உனக்குத் தாய் வீடிருந்தும்
என்னோடு சேர்ந்து
உன் அமைதியை தப்பிக்க விட்டுவிட்டாய்

பேறு காலம் உனக்குத் தாய்வீட்டையும்
இங்கு உனக்கு அடிக்கடி கிட்டாது போய்விடுகிற
இரவின் அமைதியையும்
நல்கியிருக்கிறது. எனக்கு சந்தோஷமே

குழந்தை எப்படி இருக்கிறது?
அது முகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது
என்று எழுதியிருந்தாய். அதன் புலன்கள் எல்லாம்
இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்குமாமே

இரவின் அமைதியில் அது துயில்கொள்ளும்;
கனாக் காணும்; கவிதை காணும்; சங்கீதம் கேட்கும்.
இரவின் அமைதியில் அது ஆனந்தம் கொள்ளும்;
அழகைப் பருகும்; எல்லாவற்றையும் பார்க்கும்.
இரவின் அமைதியில் அது சிரிக்கும்.

இயந்திரங்களின் அகோரக் கூந்தல்
வளரும் அதன் புலன்களைக் கெடுத்துவி்ட்டால்…
என்ற அச்சம்.. உனக்கும் எனக்கும்!
டாக்டரும் கூட அப்படியே பயமுறுத்துகிறார்.
கர்ப்பவாசம்போல்
எவ்வளவு ஆறுதலாயிருக்க வேண்டும் இரவு!

Read more...

Sunday, September 22, 2013

அஸ்தமனமற்ற பகல்

வார விடுமுறை
ஓடிப்போய்க்கொண்டிருந்தேன்
என் காதலியைச் சந்திக்க

மேலைத் தொடுவான் நோக்கி
இறங்கிக் கொண்டிருந்தது
முழுநிலவு போன்ற மாலைச் சூரியன்
நான் நன்றாக ஏறெடுத்துப் பார்க்கமுடியும் படியாய்
இந்த மாலையில்தான் இந்தச் சூரியன்

முன் நின்று என்னையும் என் பஸ்ஸையும்
ஈர்த்துச் சென்றுகொண்டிருந்தது அது.
எல்லாம் அழகு பெற்றன அதன் ஒளியில் –
தரிசுகள், வயல்கள், தொடுவான் வரை விரிந்த
நிலப்பரப்புடைய ஆகாயம், தூய காற்று எல்லாம்…

ஆனால்; தொடுவானில் அல்ல;
சூரியன் இறங்கியது
எல்லாவற்றையும் தாண்டி
இந்த நகரத்தில்தான். அப்போது
மலர்ந்து மணம் வீசின மின்விளக்குப் பூக்கள்
பஸ் விட்டிறங்கி நடந்து ஒரு வீட்டையடைந்தேன்
அங்கேதான் என் சூர்யன் இறங்கியிருந்தது
ஈரம் பேணி நான் கொண்டுவந்த ரோஜா ஒன்று
என் ப்ரிஃப்கேஸிலிருந்து பூத்தது

Read more...

Saturday, September 21, 2013

பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்

ஒரு நாள் – என் மாடியெங்கும் –
பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்!
என்ன விதைகள் அவை என்று தெரிந்தாலும்
பெயர் தெரிவதில்லை
அவற்றை நான் உரைப்பதற்கு!

அனைத்தையும் சேகரித்துக் கீழே வந்தேன்
மனைவியிடம் ஒன்று; குழந்தையிடம் ஒன்று;
வந்த நண்பர்களிடமெல்லாம் ஒன்று ஒன்று
அன்றாடம் நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும்
மறக்காமல் ஒவ்வொன்று
ஆர்வமாய்க் கொடுத்து வந்தேன்

ஒருவர் அதை என் கண்முன்னே
வாயில் போட்டரைத்து நன்றாயிருக்குதென்றார்
இன்னொருவர், ’நேற்று நீங்கள் தந்த பருப்பைச்
சுட்டுத் தின்றோம். ரொம்ப அருமை!
ஒரு கிலோ வேண்டும்’ என
வீட்டிற்கு வந்துவிட்டார்

ஒவ்வொரு நாளும் மாடிக்குச் சென்று
நான் சேகரித்து வந்தேன் நிறைய விதைகள்
விரிந்த பரப்பிற்குத தாங்கள் சொந்தமென்று
என்னை ஏய்த்து வாங்கிச் சென்றார்
வறுத்தும் அவித்தும் தின்றுவிட்டதறிந்தேன்.

எனக்கு என் வீடுபோக எஞ்சியிருந்த சிறுஇடத்தில்
ஊன்றியிருந்த ஒரு விதை தவிர
நான் சேகரித்தவை ஏதும்
பயனுற்றதாய்த் தெரியவில்லை

Read more...

Friday, September 20, 2013

கூழாங்கற்கள்

இக் கூழாங்கற்கள் உண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன் முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
’ஐயோ… இதைப் போய்…’ என ஏளனம் செய்து
ஏமாற்றத்துள் என்னைச் சரித்துவிட்டாய்1

சொல்லொணாத
அந்த மலை வாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கும்
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அனைத்தையும் கொண்டு படைத்த
ஓர் உன்னத சிருஷ்டி

நிறத்தில் நம் மாம்சத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

Read more...

Thursday, September 19, 2013

சித்தார்த்த ராத்திரி

ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ
சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்?
திரைகளனைத்தும் நீங்கி
நிர்வாணம் காணவேண்டிய அரங்கில்
ஒரு பேண்டேஜ் கட்டாய் உன் பிரா!

தரிசனம் தந்த அதிர்ச்சியா?
ஏன் ஏன் என்னவாயிற்று உனக்கு என
என்னை உலுக்குகிறாய் நீ
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறேன்
இல்லை ஏதோ இருக்கிறது…
என்றாலும் நீ
எதுவும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை

அரவணைந்தன உன் கைகள் என்னை

அரவணைப்பைத் துய்க்காது
விலகி ஓடி அழலாமோ இதயம்?
சற்று நேரம் அல்லது 2500 ஆண்டுகள் கழிந்து
மீண்டு திரும்பியவன் காண்கிறேன்:
என் மாம்ச உடம்பின்மீது உன் கரம்
ஒரு சிகிச்சைக் கட்டாய்த் தழுவியிருப்பதை

Read more...

Wednesday, September 18, 2013

அம்மு குட்டி

எழுதவிடுவதில்லை என் குழந்தை அம்மு
அதன் கர்ப்பவாசம் முதல்
’அவள்’ தாய்வீட்டில் இருந்த காலம் வரை
ஒரு நாவல் ஒரு கட்டுரை சில கவிதைகள் என
எழுதிக் குவித்திருந்தேன். இப்போது
எழுத விடுவதில்லை என் குழந்தை

தாத்தா பாட்டி வேலைக்காரி போன்ற
உறவுகள் ஏதுமில்லை எங்களுடன்
நாங்கள் மூவர்
நான் குழந்தையை கவனித்துக் கொள்கையிலும்
அது தூங்குகையிலும்
அவள், வீட்டு வேலைகளில் இயங்குகிறாள்
அவள் எங்கள் அம்முவைக் கவனித்துக்கொள்ள
எனக்குக் கிடைக்கிற சிறுபொழுதில்
அப்படி ஒன்றும் பெரியதாய்
எழுதிவிட முடியவில்லை

உயிரின் சுபாவம் ஆனந்தம் என்பதை
என் குழந்தையிடமிருந்தே நான் கற்றேன்
மேலும்
ஆனந்தம், அழுகை என்னும்
ஒரு ’பைனரி’ பாஷையில்
அனைத்தையும் அது சாதித்துக்
கொண்டதையும் கண்டேன்

இந்தக் கோடை விடுமுறையில்
ஒரு கை பார்க்க வேண்டும் எழுத்தை எனத்
திட்டங்கள் வைத்திருந்தேன்.
திட்டங்கள் தவிடுபொடி, அம்முவின் சிரிப்பில்
(கவலைகள் உட்பட)

Read more...

Tuesday, September 17, 2013

சில நாள்

தொடர்ந்து பெய்த மழைகளால்
நனைந்து குளிர்ந்திருந்தது பூமி
தொழிற்சாலைகளின் ஓசைகளடங்கிய
ஓய்வுநாளின் அமைதி
மேகங்களைப் போர்த்திக்கொண்ட நக்ஷத்ரங்கள்
கம்பளி போர்த்திய நிலா
எனக்குப் பிரியமான குளிர்காற்று

ஆனால், தொட்டிலில் தூங்கும் குழந்தைக்காகக்
கதவைச் சாத்துகிறேன். அவளுக்காகவும்.
(என் உடம்புக்கும் ஆகாதென்கிறாள்)
சுகமாய் விரிக்கப்பட்டிருக்கிறது எங்கள் படுக்கை
சாயுங்காலம் மொட்டுக்களாயிருந்த மல்லிகைச்சரம்
விரிந்து மணம் வீசிக்கொண்டிருந்தது அவள் கூந்தலில்
காற்று வெளியெங்கும் நிறைந்துள்ள குளிரில்
அந்த மணம் நகராது ஆசைகொண்டு தங்கியிருந்தது
அவள் இரவு உணவுத் தயாரிப்பிலிருந்தாள்

எங்கும் துக்கத்தின் சுவடுகளற்ற சாந்தி
அப்போதுதான் அந்த உணர்வு தோன்றியது எனக்கு
திடீரென இங்கு வந்து சேர்ந்தவளே இவள்
மிக அன்யோன்யமாய் இங்கு உலவுகிறாள்

அந்த காஸ் ஸ்டவ் நான் வாங்கியதுதான்
மிக விரும்பி அவள் உடுத்தியிருக்கும் அந்தப் புடவை…
இதோ இந்த பீரோ… மற்றும்…
வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுமே,
இந்த வீடே என் உழைப்பால் கட்டப்பட்டதுதான்.
கட்டும்போது நானும் ஒரு தொழிலாளியாய்
நின்று உழைத்திருக்கிறேன்.
இதோ, அவள் கூந்தலிலுள்ள அந்த மல்லிகைகளும்
அவற்றைக் கோர்த்த பண்படுத்திய எனது மண்ணில்
எனது கவனிப்பில் மலர்ந்தவைதான். ஆனால்,

இவள்தான் என்றும் இங்கே இருக்கிறவள் போலவும்
நான் இங்கு சிலநாள் தங்கிப்போக வந்தவனே போலவும்
ஒரு உணர்வு

Read more...

Monday, September 16, 2013

புள்ளிக் குயில்

எங்கள் வீட்டு முருங்கை மரத்தில்
அதனைக் கண்டேன்
(மரங்கள் செழிக்கும் மழைக் காலங்களில் மட்டுமே
இங்கே அபூர்வமான பறவைகள் வருகின்றன)

அதன் பெயர் தெரியவில்லை எனினும்
அதை நான் நன்கு தெரிந்தவனாகவே இருந்தேன்
நான் எதையோ பார்த்து நிற்பதைக்கண்ட வேலையாள்
வந்து பார்த்து, ’புள்ளிக்குயில்’ என்றான்
’சரி’ என்ற நான் ஓசைப்படாமல் பின் நகர்ந்து
பொம்மையோடு விளையாடிக்கொண்டிருந்த
என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு
அடுக்களையில் கைச்சோலியை போட்டுவிட்டு வரும்படி
மனைவியையும் அழைத்துக்கொண்டு…
பூமி அதிராது வந்து அம் மரத்தடியில் ஒண்டினோம்
எங்களுக்காகவோ புள்ளிக் குயில்
அதுவரையும் பறந்து செல்லாதிருந்தது?

என் வேலையாள் கையில் கவண்கல்லோடு வந்தான்
அதுவரையம் அது பறக்காதிருந்தது
குறிபார்த்து கவண் ரப்பரை இழுத்த அவன்மீது
வெறுப்பை உமிழ்ந்த என் மனைவியின் பார்வையை
வேண்டாம் வேண்டாம் எனத் தடுத்தது
துயரம் தோய்ந்த எனது புன்னகை

அதற்கு உதவவேண்டுமென்றும்
எனக்குத் தோன்றவில்லை
ஆனால்
கவண்கல் பாயும் போதும்,
கவண்ரப்பர் இழுபடும்போதும்
துடித்தது எங்கள் உயிர்

அவன் இன்னொரு கல்லை எய்தான்
இறக்கையில் சிலும்பலாய் அடிபட்டு நகர்ந்து
இன்னும் எங்கள் பார்வையில் விலகாதிருந்தது அது

அவன் இன்னொரு கல்லை எய்தான்
திடுக்கிடல் ஏதுமில்லை
’போதும்’ என நினைத்ததுபோல்
சிறகடித்துப் பறந்தோடிற்று அது

Read more...

Sunday, September 15, 2013

உனது சட்டை

உனது சித்து உடம்பிற்கு
எப்போதும் பெரிதாகவே இருக்கிறது
உனது போஷகனுடைய சட்டை

அது பளபளப்பு குறையவில்லை
கிழிந்து காலாவதியாகி விடவில்லைதான்
வேறு எந்தக் குறையுமில்லைதான்
ஆனாலும் அதன் சைஸ்… அந்த ஒன்றுதான்…

உன் உடற்கட்டு பிரமாதம் அல்லதான் என்றாலும்
உனக்கே உனக்கென்றிருக்கும் உடல்!
அதற்கென்றும் ஒரு அழகு இருக்கிறதே!
அதை ஒரேயடியாய் புறக்கணிக்கலாமா?

ஏழைதான் நீ என்றாலும்
விடாதே
கொஞ்சக் காசையாவது செலவழி
அந்தச் சட்டையையே உன் சட்டைக்கான
மூலப்பொருளாக்கி விடு

Read more...

Saturday, September 14, 2013

பறிக்கப்படாத பூக்கள்

ரோஜாப் பூக்களின் மத்தியில் உன் முகம் –
அதுவும் ஒரு பூ என்றிருந்தேன்.
ஆனால்
பூக்கள் பூக்களைக் கொய்வதில்லையே!

தன் பூந்தோட்டத்தில் நின்று
பூப்பறிக்கும் பூக்காரி ஒருத்தி
சின்ன மீன்களை விழுங்கிக்கொண்டு நகரும்
ஒரு ராக்ஷஸ மீனைப்போல் தோன்றுகிறாள்.
அந்தப் பூந்தோட்டத்தைப் போல
இது வியாபாரத்துக்காய்ப் போட்டதல்ல!
வெறும் அழகுக்கு

என்னை முட்டாள் என்று ஏசு
பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்
எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்.
என் ரோஜாத் தோட்டத்துள் புகுந்து
என்னைப் பரிதாபமாய் நோக்கும் பெண்ணே!
என்னை மன்னித்துவிடு! விலகு!
உன் ஆசை தன்னை உணராதது
சரி, போகட்டும்.
ஒன்றே ஒன்றைமட்டும்
பறித்துக்கொள் – உன் ஆசைக்கு.
மற்றனைத்தையும் விட்டுவிடு – அந்த அழகுக்கு.
ஆனால் இதைத் தெரிந்து கொள்:
உன் விரல்களுக்கு மட்டுமல்ல,
ரோஜாவின் மென்மையும் மணமும்
போட்டோவுக்குக்கூட
அகப்படமாட்டேனென்கிறது
மட்டுமல்ல; இதற்கெல்லாம் மேலே ஒரு உண்மை:

பறிக்காத இப்பூக்களின் வெறும் அழகில்தான்
காய்க்கிறது
என் பசி தணித்து உயிர் வளர்க்கும் கனி

Read more...

Friday, September 13, 2013

வறட்சி

1.
நெருப்பென விரிந்த இந்த வெயிலில்
பறிக்காத ஒரு தாமரை மலர்போல்
நீ காணுவதெங்ஙனம்?
எந்தவொரு ஊற்றில்
வேர்கொண்டுள்ளது நின் உயிர்?

2.
விழிகளில் நீர்;
கைகளில் வெற்றுக்குடம்.
வெற்றுக்குடம்
கனக்கிறது

3.
தவியாய்த் தவிக்கிறது,
தண்ணீர்ப்பானையைச் சுற்றி வெயில்
கைகளில்லாத மண்பானை
கசிகிறது
கைகளில்லாத வெயில்
நக்குகிறது

4.
நெருப்புக் கால்தடங்கள் கேட்டதும்
நடுங்குகின்றன – மண்ணுள் பதுங்கிய
வேர் பெற்றிராத வித்துக்கள்
ஆழ வேர் பெற்றுள்ளவை
வெயிலை எதிர்த்து வெல்கின்றன
நீர் கேட்டுத் தவிக்கும் மண்ணுக்கு
நிழலைக் கொட்டுகின்றன, மரங்கள்

6.
மரங்கள்!
ஆ! மரங்களல்லவா கோடையை
வசந்தமாய் மாற்றுகின்றன!
கோடைவெயிற் கொடுமையை
நீ எப்படி வெல்கிறாய்?
மரத்த தோலும் பழுதுற்ற நின் பார்வையும்
வசந்தத்தை எதிர்க்கும் கவசங்களாயினவோ?

Read more...

Thursday, September 12, 2013

டிசம்பர்

இரவைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான்
இரவுக் காவலன் ஒருவன்
காவலனின் கண்களில்
உறக்கத்தைத் தூவுகிறது
பகலுடன் கலக்க நினைத்த இரவு
வாசல்களெங்கும்
மலர்களுக்குமுன் மலர்ந்திருந்த
மார்கழி மாதக் கோலப் பெண்கள் –
உதயச் சிசுவை அள்ளித் தத்தம்
வீட்டுள் எடுத்துச் சென்றனர்

2.
விடிகாலைப் பனியும்
விடிகாலைச் சூரியனும்
காதலர்கள்
விடிந்த காலையில்
தன் இயல்பினாலேயே
தன் காதலியை இழந்த
தனிமையில் நின்றான் சூரியன்
பனியின் சுவடுகளை
எங்கும் தாங்கியிருந்த
இயற்கையில் களித்து ஏகாங்கியானான்

3.
இளமையின் விழிகளை முத்தமிடுகிறது பனி
நடுங்கி அழுகிறது என் முதுமை
என்னைவிட முதிர்ந்த என் தோட்டமோ
தளிரும் பூவும் கனியும் பறவைகளுமாய்ச் சிரிக்கிறது
ஒரு மூலையில்
சுள்ளியும் சருகும் நெருப்பும் தந்து
என்னைத் தன்னோடணைத்துச் சேர்த்துக்கொள்கிறது
நெருப்பை என் விரலிடுக்கில்
ஒழுகவிட்டதால் எழுந்த புகை –
பனி வேடமிட்ட பாவி –
காற்றில் ஏறித் தோட்டமெங்கும் திரிந்து
கண்ணைக் கரிக்கிறது
கருகுகின்றன மலர்மொக்குகள்

Read more...

Wednesday, September 11, 2013

எனக்குத்தான் நீச்சல் தெரியுமே!

ஆற்றில் பிடித்துத் தள்ளினாய்
பிழைத்துக் கொண்டேன்
குளத்தில் பிடித்துத் தள்ளினாய்
பிழைத்துக் கொண்டேன்
கிணற்றிலே தள்ளி விட்டாய்
பிழைத்துக் கொண்டேன்
இன்று கடலிலே தள்ளி விட்டாயே!
தவிக்கிறேன் நான்

ஆனால் கடல் ஓர் அற்புதம்!
ஓர் அலை என்னை மூழ்கடிக்கும்;
மற்றோரலை வந்து கைதூக்கிவிடும்

Read more...

Tuesday, September 10, 2013

மூட்டைப்பூச்சியாய்…

ஏவுகணையாய்
ஒரு விரல் எனது வானில்
வெட்ட விரிந்த வெளியில்
அதன் பார்வைக்குத் தப்ப வழியேயில்லை.
மூட்டைப்பூச்சியாய் பதறி ஓடுகிறேன்.
இருள் ஒதுங்கும் பள்ளங்கள்,
பதுங்கல் குழிகள் நிறைந்த
என் ராஜ்யத்தில் போய் ஒளிந்துகொள்ள

ஆனால், என்னை அது
எங்கும் தொடர்கிறது,
வெளிக்கு இழுத்து, அல்லது
அந்த ஸ்தலத்திலேயே நசுக்கித் தீர்த்துவிட,
வந்து நிற்கும் அதன் நிழலில்
உயிரைப் பற்றிக்கொண்டு நடுநடுங்குகிறேன்

பயத்தின்
உக்கிரத் தணல் எரியும் மண்டபம் ஒன்றில்
ரத்தக் களறியின்றி மரணமுமின்றி
அந்தர்யாமியாகத் தவிக்கிறேன்.
ஆனால் அது என்மேலே நின்று
என்னை நசுக்கிவிடக் –
கூடும் பொழுதுக்குள் நான் மறையவேண்டும்
இல்லையேல் அந்த வெள்ளைவெளியில்
விரல் நச்சிய இரத்தக் கரையாவேன் – ஆகி
உயிர் பெருக்கித் தொடர்ந்தலைவேன்

Read more...

மொட்டைமாடிக் காற்றும் புத்தகமும்

குண்டடி பட்டதாய்
இறக்கையடித்துத் துடிக்கிறது
மொட்டைமாடிக் காற்றில், மறந்து
நான் தரையில் விட்ட புத்தகம்;
படிக்கையில் வானில் தடம் பதிக்காது
பறந்துசெல்லும் பறவை அது
குனிந்து எடுத்தேன்
ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் –
ஆவியோடணைத்து முத்தமிட்டேன்

என்னை மறக்கச் செய்யும் காற்று
உன் சிறகுகளை ஒடிக்குமா?
ஒடிக்காது.
’என்னைப் படி’ என்று
உன்னை இறைஞ்ச வைக்கிறதோ காற்று?
நான் துடித்து, உன்னைக்
கையிலெடுத்து முத்தமிடுகையில் – நீ
அமைதி கொள்வதன் அர்த்தமென்ன?

Read more...

Monday, September 9, 2013

காதலர் பாதை

என்ன கூறுகிறது,
இடையறாத கடலின் பெருங்குரல்?
கரையோரம் ஒரு சிறு படகு
எதற்குக் காத்திருக்கிறது?
படகின் நிழலில் ஒரு ஜோடி
மண்ணில் புரண்டு
புணர்ச்சியில் ஆழ்ந்துபோனதென்ன?

2.
புணர்ந்தெழுந்தவர் தளர்ந்து நடந்தனர்.
மணல்மேட்டில் உதிதது ஒருவன் வந்தான்
வாசித்தான் தன் கவிதை ஒன்றை.
இன்பத்தின் பிடரி சிலிர்க்க,
அவள் இவனைப் பாய்ந்து தழுவினாள்
இருவரும் சரிந்தனர் அவன் நிழலில்

உவர்ப்பைக் கடந்து
சுவையற்ற பெருஞ்சுவையை ருசித்து
முத்தம் பெயர்கையில்
அவன், படகை எடுத்துக் கடலில்
மீன்பிடி வலைகளுடன்…

3.
அவர்கள் நடந்தார்கள்.
எத்தனை மண்புயல் கடந்தார்கள்?
அவை புரட்டிக் காட்டிய
எத்தனை சவஎலும்புகள் கண்டார்கள்?

கண்டுமென்ன?
யாவற்றையும் திரை போர்த்தியது
பசி, சோர்வு, பயம் எனும் பைசாசங்கள்

மணல்மேட்டில் ஒரு புது உதயம்.
பழங்களும் மீனும் விறகும் நிறைந்த ஒரு
கூடைப் பரிதி; கூடைக் கிரீடம்
அதன் இடுப்பில் ஒரு பெரிய பட்டாக்கத்தி
முகத்தில் கொம்பு மீசை
பசியாறும் பெண்ணுடம்பைப்
புசித்துக் கொண்டிருந்தன கூடைக்காரனின்
காமப்பேய்க் கண்கள்

திடுக்கிட்டு மிரண்டவளைப் பார்த்து இளித்தவன்
கையையும் பிடித்திழுக்கத் துணிந்தான்
இவன் அவனைத் தடுக்க – கைகலப்பு
அவள் பதறிக் குறுக்கிட – சிக்கல்
இவனைக் கெஞ்சித் தடுத்து, அவள்
கூடைக்காரனுக்கு இணங்கிப் படுத்தாள்

புத்துணர்வொன்று தோள்மேல் துள்ள
புகுந்தான் இவன்
தன் கோடரியைக் கையிலெடுத்துக்
காட்டுக்குள்ளே

4.
இருவரும் நடந்தனர்
எங்கும் ஒரு வேதனை, அவமானம்
கிளறிக் கிளறிக் காட்டும் மண்புயல்கள்
மூடவும் செய்வது ஏன்?
மணல்மேட்டில் இப்போது
ஒரு பெரிய கூடை
முகத்தில் அதே கொம்பு மீசை
இடுப்பில் மிகப்பெரியதோர் பட்டாக்கத்தி
அக் கூடைக்காரன் – இவள்
இருவர் கண்களிலுமே காமாந்தகாரம்!
இவள் அவளைப் பிடித்து இழுக்கவே
கொம்பு மீசைகள் கோபம்!
பட்டாக் கத்திகள் மோதல்!
கொட்டிக் கவிழ்ந்த கலயம் போல்
இரத்தக் குழம்பினில் பழையவன்!

பிணத்து நிழலில்
புணர்ந்தெழுந்து நடந்தனர் ’காதலர்’

5.
ஓடிப்போய் அவர்கள் முன்
என் கவிதையை வாசித்தேன்.
’பைத்யம் பைத்யம்’ எனச் சிரித்தது ஜோடி
திடுக்கிட்டுச் சோர்ந்து திரும்பினேன்
பிறகு –
எனது பாறை நோக்கிப் போய்விட்டேன்
ஆற்றின் அழகையெல்லாம்
அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க

6.
’காதலர்கள்’ நடந்துகொண்டிருந்தார்கள்
மூடிமூடிப் புதையுண்டிருந்தவைகளை
மண்புயல்கள் அடிக்கடி
கிளறிக் கிளறிக் காட்டத்தான் செய்தன

கடலின் இடையறாத பெருங்குரல்
கேட்டு கொண்டேயிருக்கிறது
கரையோரம் ஒரு சிறு படகு
காத்துக் கொண்டேயிருக்கிறது
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
நம் ’காதலர்கள்’?

Read more...

Sunday, September 8, 2013

கைக்கோல்கள்

கால்கள் நொய்ந்தாலும்
கைகள் இருக்கின்றன
கைகள் நொய்ந்தாலும்
வயிறு இருக்கிறது

கால்கள் நொய்ந்தன என
கழிகளைப் பற்றுவோனே!
கால்கள் நொய்ந்தனவோ
கழிகள் கொண்டு ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொல்கையில்?

கழியைப் பற்றாதே!
பற்றுவோனைப் பற்றிக் கொல்ல
கழியில் இருக்கிறது, நாகம்!

கண்மூடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கையில்
கடவுளர் படத்தைக்
கரையான் தின்றுகொண்டிருக்கிறது
சுயம்வரம் நடப்பதாய் ஒருவரை ஒருவர்
வாரிக்கொண்டிருக்கும் மேடையில்
அத்தனை பேருக்குமாய்
அத்தனை எண்ணிக்கையில்
வருகிறாள் அவள்!

Read more...

பக்ஷி ஜோஸ்யம்

’இத்தனை அழகான கவிதைகளை
எப்படி எழுதுகிறாய் நண்பா?’

சும்மா ஒரு பக்ஷி ஜோஸ்யம்தான்
இதிலே, உன் பெயருக்கு, அவன் பெயருக்கு
ஊர் பெயருக்கு என்பதெல்லாம்
ஒரு சாக்குதான்.
உண்மையில் என் கிளி
ஒன்றும் அறியாதது
பச்சைக் குழந்தைமாதிரி.
ஒரு சீட்டெடுத்துத் தரும்.
தன் உயிரை ஈர்த்ததையெல்லாம்
வரைந்துவைத்த சீட்டுக்களினின்று ஒன்று.
அதுக்குத் தக
சேகரித்து வைத்த குறிப்புகளைப் புரட்டிக்
கரைவிடுவேன். அவ்வளவுதான்

Read more...

Saturday, September 7, 2013

போஸ்ட் மார்ட்டம்

1.
பைத்தியம் பிடித்துப்
புலம்பித் திரிந்துகொண்டிருந்தது
டிஃபன் பொட்டலம் கட்டிக்காத்த ஒரு காகிதம்.
எச்சிலையைத் தின்கிறது
புல்வெளியை விட்டு வந்த மாடு.
பழங்களனைத்தையும் இழந்துவிட்ட வாழைத்தார்
கடைக்காரனால், நடுரோட்டில், பஸ்கள் மிதிக்க
நார் நாராய் செத்துக்கொண்டிருந்தது,
எரிந்து முடிந்து புகைந்து கொண்டிருந்தான்
பெட்டிக் கடைமுன் சிகரெட் பிடிக்கும் ஒருவன்.
நடைபாதையில் டீ குடித்துக்கொண்டிருப்போர்
தொப் தொப்பென்று இறந்து விழுகின்றனர்.
குதியாளமிடுகிறது டீக்கடையில் பாட்டு.
கடைத்தெருக்களில் கிடந்த பிணங்கள்
திடீரென்று எழுந்து ஆர்ப்பாட்டம்.
போலீஸ்வேன் ஓடிவந்து
பிணங்களை அடுக்கி எடுத்துக்கொண்டு போனது

2.
பிணங்கள் கூடி பிழையுண்ட ஓர் உயிரை
போஸ்ட் மார்ட்டத்துக்குத் தள்ளின.
குளோரோபாமற்று
நாலைந்து பிணங்கள்
அமுக்கிப் பிடித்துக்கொண்டன.
ஒரு பிணம் அறுக்க
வெதுவெதுப்பான குருதி பீரிட, அலறி,
துடிதுடிக்கும் உயிர்தான்
தான் இன்னும் பிழைத்திருக்குங்
காரணம் என்ன என வியந்தது

3.
ஓ, டாக்டர்!
இந்த மரணத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்க
நீர் பிணங்களை அறுத்துப் பார்ப்பதென்ன?
குளோரோபாரமின்றி
துடிதுடிக்கும் உயிரோடு
கதறலோடு
பீரிடும் குருதியோடு
தன்னை அறுத்துப் பாரும்

Read more...

Friday, September 6, 2013

மழை

மழை மீது
(மழையின் சவக்கோலமான
மழைத் தண்ணீர் மீது)
மழை விழுந்து
மழை உயிர்த்தெழும்பும்
சிலிர்த்துக்கொண்டு.
ஒவ்வொரு துளியிலும்
ஒரு மையம் உடைகிறது
அதன் வட்டம் மழை முழுக்க பரவுகிறது
ஒரு கோடி மையங்கள்!
ஒரு கோடி வட்டங்கள்!
மழையின் கரையோரம் நான் நடந்தேன்
மழை உயிர்த்து கரை பொய்த்து
என் காலடியில் சரிந்தது
கரை சரிந்து கரை முழுகி
வெள்ளத்தில்
சதா பொய்த்துக்கொண்டிருந்தது
கரை முழுசுமே பொய்யென உணர்ந்தேன்-
தொடுவானம் போல்
மழையின் கரை ஒரு பொய்
துளியின் வட்டம்
கரையற்ற மழையில்
காண முடியாத
இருக்க முடியாத ஒன்று
புலன்களின் வாயில்களை அடைத்து
உள்ளே நோக்குகிறேன்-
திசையற்ற மனவெளியில்
மழை எங்குமிருந்து
ஒரு புள்ளியை
அல்ல, ஏதோ ஒரு புள்ளியிலிருந்து
எங்கும் பாய்கிறது
ஒரு புள்ளியை நோக்கிப் பாய்கிறது-
அல்ல, இரண்டுமே.
மழைத் தாரை
சக்திமிக்க மின்கம்பிகளாய் வீறிட்டு
இருபக்கமும் பாய்ந்து
சூரியனாய் எரிகிறது; ப்ரகாசிக்கிறது.
இப்போது மழை மீது மழை.
ஒரு பரிதி; நெருப்புக் கோளம்

Read more...

Thursday, September 5, 2013

வேகம்

ஓடு
ஒரே தாவலாய் ஏறி
உன் ’பைக்’கை எடுத்து
உன் லட்சியத்துக்கு குறுக்கே
நீ கற்பித்துள்ள கால தூரத்தை
ஒரே விழுங்கில் விழுங்கிப்
பால்யத்தில்
நீ அங்கே ஐக்யமுற்றிருந்த
அந்த நடனத்தைக் காண,
முந்தானை பற்றி நின்ற
அரை ட்ரௌசர் பையனாய்
அமர்ந்து காணப் போ…

இன்னும் சற்று நேரமேயிருக்கிறது
வேகமாய்ப் போனால்
இந்தக் கணம் முடிவதற்குள்
போய்விடலாம்

போகிற வேகத்தில்
பின் இருக்கையில் அமர்ந்து
உன்னைத் தொடர்கிற இலட்சியத்தையும்
வழியிலே உருட்டிவிட்டுத்
தன்னந்தனியாய்ப் போ!

சாலையின் இரு கரைக் காட்சிகளும்
வெள்ளையடிக்கும் மட்டையின்
ஒற்றை இழுப்பில் மறைகிற
சுவர்ச் சித்திரங்களாய்ப் பரிணமிக்க,
பால் வெளியில் சிறகு விரித்த
ஒரு கறுத்த பறவையாய்
நீ மாத்ரம் ஜனிக்க
கூட்டு உன் வேகத்தை இன்னும்…

பொந்து போலும்
ஒரு ஊற்றுக் கண்ணினின்றும்
பொங்கிக் குழைந்து அபிநயித்து
ஆடியபடி
காற்றில் இறக்கை விரித்து வரும்
ஒரு சங்கீதம்
அடிபட்ட கிரௌஞ்ச பக்ஷியாய்
கத்திச் சாக,
எதிர்ப்படும்
மாபாரதச் சோகங்களையெல்லாம்
ஒரே தள்ளாய் விலக்கிக்கொண்டு
போ…

இனி நிற்றல் என்பதே கூடாதபடி
நிறுத்தல் பற்றின நினைவே
அற்றுப்போம்படி
போ… போ

அங்கே நிருத்தம் காணக்
கூடியிருக்கும் தலைக் கடல்களை
தார்ச் சாலையாய்த் தேய்த்துக் கடந்து
உன் நிருத்த ஸெந்தரியையும்
நீ விழுங்கப் போகையில்
நிறுத்திவிட முடியாது.
போ
போய்க் கொண்டேயிரு
நீயே மறைந்து போகும்வரை

Read more...

Wednesday, September 4, 2013

ஆதார மையம்

இந்த கோளில்
எத்தனை கோணங்களில்
என் பார்வைக் கத்தி விழுந்து
இதழ் இதழாய்
கண்கள் எரிந்து குளமாக,
உரிக்க உரிய,
உதிர்ந்து போவதில்லை எதுவும்

எத்தனை கோணத்தில்
எத்தனை பார்வைக்
கத்திகள் வீழினும்
என் மனவெளிக் கோளில்
ஆச்சரியமாய்
அவைபற்றி இருந்து வரும்
ஆதார மையமொன்றுண்டு
என்ன அது?
கேட்காதே
கேட்டும் சொல்லியுமா
புரிந்துவிடப் போகிறது?

ஞாயிற்றுக் கிழமைகளில்
மனைவிக்கு ஒத்தாசையாய்
சமையல் கட்டில்
கண்ணீர் பொங்க
வெங்காயம் அரிகிறாய்

நடைபாதைச் சாப்பாட்டுக்
கடைக்காரி முன்
உணவு முடிக்கும்
கூலித் தொழிலாளியாய்,
மாம்பழத்தை
முழுசாய் நறுக்கிச்
சிதையாமல் இலையில் வைத்துத் தர
சிதையாமல் காத்திக்கிறாய்

கற்போடு
மனைவியை அமர்த்தித் தூங்க வைத்துப்
பின்
மேஜையில் காத்து நிற்கும்
வெள்ளைக் காகிதங்களைத்
தள்ளி வைத்து
துண்டம் துண்டமாய்க்
காணும் அலமாரிப் புத்தகங்களை
ஒரே பார்வையில் கூட்டி ஒதுக்கிவிட்டு
ஒரு தனிப்
பூவின் மகரந்தங்களெனக் காணும்
நட்சத்திரங்கள் மேல்
பன்னீர்ப்பூ உதிர்ந்து கிடக்கும் முற்றத்தில்
நீ பாய் விரித்துப் படுக்கிறாய்

அப்போதெல்லாம்
அப்போதெல்லாம்
உன்னால் ஸ்பரிச்சிக்கப்படுகிறதே
அதுதான்; அதுதான்.

Read more...

Tuesday, September 3, 2013

நானல்ல

குறுக்கிடும் பாதைவழி வந்து
என் முன் நடந்தாள் அவள்

சமூக பயத்துக்கு ஆட்பட்டு
நான் என் நடையைச் சுருக்காததால்
நான் அவளைப் பின் துரத்துவதாய்
காட்சியளித்திருக்கிறது அது

எங்களைக் கண்காணித்தவாறு
எங்களை ஒட்டி
உடன் வந்து கொண்டிருந்தது வேலி

வேறு யாருமற்று
அனாதையான அந்த இடத்தில்
முந்தானை பிடித்து இழுக்கப்பட்டு
இரத்தம் அதிரத் திரும்பினாள் அவள்
நானும் நின்றேன் சில வினாடிகள்
குற்றக் கூண்டுக் கைதியென

நானல்ல குற்றவாளி,
வேலியே
தனக்கு எதிர்சாட்சி

Read more...

யுத்தத்தில்

நிராயுதபாணியாய் நின்றான்
ஒரு போர் வீரன்

தன் உடல் கிழிக்கும் ஆயுதங்கள்
அத்தனையையும் கௌரவித்து ஏற்றுக்
குருதிக் கண்ணீர் வடித்து நின்றது
பகைவனின் அறியாமை கண்ட
அவன் உடல்

உயிரோ,
குருதி வடிக்காத ஒரு ’பின்-குஷன்’

Read more...

Monday, September 2, 2013

திருமாங்கல்யம்

கடலில் உப்பாக
மையம்
எங்குமிருந்தது;
எங்கும் இல்லாதிருந்தது
அதன் வட்டம்

ஒரு தலையை மையம் கொண்ட
ஒரு திருமாங்கல்யம்
நான் வரித்த உலகம்

பிரபஞ்சவெளியின் முடிவின்மையெனும்
கொள்ளைச் செல்வத்தை
மொத்த சுதந்திரத்தை
ஒரு சிறு படிவமாக்கி
தன் கழுத்திலணிந்து கொள்ளும் ஆசை

Read more...

அந்த பஸ்

பஸ் ஸ்டாப்பில், ஒரு பஸ்
சக்கரங்கள் சுழலாமல்
என்ஜின் மட்டும் இயங்கித்
தடதடத்துக் கொண்டிருக்க
அடித்துப் புரண்டு ஓடிவந்து
ஏறி அமர்ந்தேன்
(அப்படி ஓடி வந்திருக்கவே வேண்டாம்)

அந்த பஸ்
என்றும்
அப்படியேதான் இருந்தது எனினும்
பயணம் செய்கிறேன்
என்றே உணர்ந்தேன்

Read more...

Sunday, September 1, 2013

அறுத்து எறியப்படாத முலைகள்

பிரியதமே!
ஓடும்போது குலுங்கி
வேகத் தடை செய்யும்
உன் முலைகளாம் தசைத் திரள்கள்
தம் சிறுமுகம் தூக்கி
என்னை உறுத்து விழித்துச்
சொல்லும் பொருள்?

வெகு முன்னேற்பாடாய்
உன் சதைப்பரப்பில் நீ ஏற்றிருக்கும்
இந்தக் களஞ்சியங்களிரண்டும்
அருவருப்பாய்க் கனக்கவில்லையா
உன் நெஞ்சில்?

கணந்தோறும் எரியும்
வாழ்வின் உக்கிர நெருப்பில்
நின்று தியானிக்க இயலாத புருஷர்கள்
காலக் குகைகளிற் பதுங்கி
அங்கே தங்களுக்கு முன்னேயே
வந்து பதுங்கியிருக்கும்
உன் முலைகளாற் கவரப்பட்டு
சதா உன் முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சையாயினரே!

என் உடன் வந்துகொண்டிருந்த
வேக நடையை விட்டு
கால்களை மடக்கி அமர்ந்து
பசித்தழும் சிசுவுக்கு
நீ கச்சையவிழ்க்கிறாய்!

நீ அவிழ்த்து விலக்கிய
காற்றின் தீண்டல் படாத
கச்சையின் உள் பரப்பு
புழுங்கி நாறும் குரல்
உனக்குக் கேட்கவில்லையா?
கச்சை நாண்களை ஏற்றி ஏற்றி
உன் முலையம்புகளால்
புருஷர்களை வீழ்த்தி
அவர்களை நீ
உன் முலைக் கச்சைகளாக்கிவிடும் நோக்கில்
உன் ஆதிக் குணம்தானே
விசாலித்துள்ளது!
முலைகளைப் பிடுங்கவும்
மூண்ட காலாதீதப் பெருநெருப்பில்
அநீதி நாறத் தொடங்கிய
மதுரையை எரித்துவிட்டு
மலையுச்சி ஏகி மறைந்த
கண்ணகியின் கதை தெரியாதா உனக்கு?
இனி என்று நீ வீறுகொண்டு
முலைகளை அறுத்தெறிந்துவிட்டு
என் வேக நடையோடு
வந்துசேரப் போகிறாய்
சொல்!

ஸ்திரீ சொல்கிறாள்:
புருஷ!
என் தாய்ப் பிரகிருதியால்
சீதனமாய்க் கொடுக்கப்பட்ட இத் தனங்கள்
கால நோய் பிடித்த கட்டிகளல்ல!
அன்னவளின் கருணாமிர்தம் ஊறும்
அவ்வக் கண ஊற்று

ஓடும்போது குலுங்கி
வேகத் தடைசெய்யும்
இக் கருணாமிர்தக் கருவிகள்
தம் ஸ்ரீமுகம் தூக்கிச்
சொல்லும் பொருள் கேள்:

அறிவாயோ நீ
எங்கிருந்து புறப்பட்டது
உன் வேக நடையென்று?

முலை பருகாது
முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சைகள்
முலை நுனியினின்று
முதுகு நோக்கி ஓடிச் சிறுத்து
புண்கட்டும் துணிகளாய் நாறின பார்!
எனவே ஓடும்கால்களை மடக்கு-
உடன்
உன்னில் சுரக்கத் தொடங்கும்
முலைகள் முன்
நீயே சிசுவாய்
பருகுவாய்

Read more...

Saturday, August 31, 2013

சுய குறிப்புகள்

ஆணா? பெண்ணா?
அர்த்தநாரீஸ்வரன்

Blood Group: O

பிடித்த அழகுசாதனம்: தோளில்
கனத்து விடாது தொங்கும்
இந்த பிரயாணப் பை

பிடித்தமான இடம்:
இந்த நெடுஞ்சாலை

பிடித்தமான காரியம்:
இந்தப் பிரயாணம்

உடற் களைப்பு நீங்க
சற்று ஓய்வு கொள்ளவும்
உணவு கொள்ளவும்
பிடித்த இடம்:
’அன்றன்றைக்குள்ள ஆகாரத்தை
அன்றன்றைக்கே தருகிற’
ஆரோக்கிய விலாஸ்
போர்டிங் அன்ட் லாட்ஜிங்.
(எங்கும் கிளைகள் திறக்கப்பட்டுள்ள
ஒரே நிறுவனம்.)

பிடித்தமான உறவு:
நான் நீ யென்றாதல்

Read more...

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்குநோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்கமுடிந்ததா?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தேன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொரு காலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய்க் காய்த்து
இருட்டில் செய்வதறியாது
கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப்போல்
சூர்யன் என்னைத் தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய்ப் பரவ
மெய் சிலிர்த்து நின்றது அந்த மரம்

Read more...

Friday, August 30, 2013

சட்டை

என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)

எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது

நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்

தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?

அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்

Read more...

Thursday, August 29, 2013

டிராஃபிக் கான்ஸ்டபிள்

பால்யத்தில்
மந்தை அணைத்துக் கூட்டிவரும்
மேய்ப்பனைவிட
ஆயிரக்கணக்கானோர்க்கு
வழிகாட்டுவான் போல்
மேடையேறி முழங்குகிறவனைவிட
இவனே ஆதர்ஸமாய் நின்றதைக்
காலமற்றுப் பார்த்தபடி
வெறித்து நின்ற என்னை உலுக்கி
மெல்லச் சிரித்தது
ஆடோமாடிக் சிக்னல் இயந்திரம்
மஞ்சள் ஒளிகாட்டி, அடுத்து
பச்சை வரப் புறப்பட்டேன்.
இவ்விதமாய்ச் சென்று
இன்று திகைக்கிறேன்
முடிவில்லாப் பாதை ஒன்றில்


II
மக்கள் மக்கள்
மக்களேயாய்க் கசங்குகிற
அவசரமான சாலைகளில்
நொந்துபோய் நின்றுவிடுகிற
நண்பா!

அவர்கள் எத்தனையோ
அத்தனை கூறுகளாய்
உடைந்து துன்புறும் உன் உளளத்தில்
என்று நிகழப் போகிறது
அந்த மாபெரும் ஒருமிப்பு?
பரிச்சயப்பட்டவர்களோடு எல்லாம்
உறவாடிப் பார்த்ததில்
கை குலுக்கி விசாரித்த அக்கறைகளில்
குற்றவுணர்வுகளில்
எதிரொளிக்கும் புன்னகைகளில்
காபி ஹவுஸ்களில் நம்மை இணைக்கிற
டேபிள்களில்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
நம் கதைகளை விண்ணில்
கிறுக்கிப் பறக்கிற ஈக்களில்
ஒரே படுக்கை சமைத்து
உடலையும் வருத்திப் பார்த்த
தாம்பத்யங்களில் – என்று
எப்போதோ கிடைத்த
ஒரு கணச் சந்திப்பை
நீட்டிக்க அவாவுகிற
உன் எல்லாப் பிரயத்தனங்களிலும்
லபிக்காத அம் மாபெரும் சந்திப்புக்காய்
என்ன செய்யப் போகிறாய்?
இனி என்ன செய்யப் போகிறாய்?

நிறுத்து!
நிறுத்து! என்றான்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
அன்று முதல்
என் எல்லாப் பிரயத்தனங்களும்
ஒழிந்து
குறியற்றது எனது பயணம்

III
சலவைசெய் துணியாய்
முன்னும் பின்னும்
போவோர் வருவோர் என
கசங்கிக் கசங்கி
நீ உன் அழுக்கைக் கக்குகிற
இந் நீள் சாலையில்
ஒவ்வொரு முகமும்
தன் நிழல் வீசி
உன்னைக் கடந்து செல்ல
நீ அவற்றைக் கடந்து செல்ல
என்றைக்கு நீ
இவ்வேதனையைக் கடந்து செல்லப் போகிறாய்?

என்றாலும்
என்ன ஆச்சர்யம்!
உன் வழியே நீ செல்லும்
இவ்வுறுதியை உனக்கு யார் தந்தது?
அவர்களை அவரவர் வழி விட்டுவிட
யார் உனக்குக் கற்றுக் கொடுத்தது?
இதுதான் அம் மாபெரும் சந்திப்புக்கான
ஒருமிப்புக்கான
பாதையாயிருக்குமென
யார் உனக்குக் காட்டித்தந்தது?

தார்ச் சாலையில் உதிர்ந்த பூவை
மிதித்துவிடாமல் விலகியபடியே
அண்ணாந்த விழிகளால்
உயரே மொட்டை மாடியில்
கூந்தலுலர்த்தும் பெண்ணை
(புணர்ச்சியின் பவித்ரத்துக்கான தூய்மை)
காற்றாகித் தழுவியபடியே
முன் நடக்கும் தோள்க் குழந்தையின்
பூஞ்சிரிப்பில் கரைந்தபடி
எங்கேயும் மோதிக்கொண்டுவிடாமல்
அற்புதமாய்
சைக்கிள் விடப் பழகியிருக்கிறேன்.
அடிக்கடி குறுக்கிடும்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
சமிக்ஞையின் முன்
ஒரே கணத்தில்
அலறாமல் அதிசயிக்காமல்
மரித்து உயிர்த்து
செல்லும் வாகனங்களிலே
என் குருதி ஓட்டத்திலே
ஓர் ஒழுங்கியலைத் தரிசித்திருக்கிறேன்

Read more...

Wednesday, August 28, 2013

சிறகடித்து பாயும் அம்புகள்

ஏக்கத்தைத் தூண்டும்படி
வானளாவிப்
பறந்து சென்றுகொண்டிருந்த கொக்குகள்
இறங்கி வந்து நின்றன
பச்சையும் ஈரமும் ததும்பிய பூமியில்

சகதிக்குள் கால் மாற்றி மாற்றி நடக்கும்
கச்சிதமான அழகுடைய
வெண்ணிறப் பறவைகள்
துளியும் தன் தூய்மை கெடாதவை

ஒற்றைக் காலில் நின்ற கொக்குகளால்
கொத்திச் செல்லப்பட்ட மீன்களுக்குத்
துயர் ஏதும் தெரியுமா
கொக்குகளின் அலகில் அது துடிக்கும்போதும்?
அந்த மீன்களின் ஆனந்தத்தையும் அறியாது மீறிய
அற்புத உணர்ச்சி
பறவைகளின் வயிற்றில் உதித்து இயங்கும் பசி


II

”ரொம்பக் கெட்டுவிட்டது பூமி” என வெறுப்புடன்
என்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டு
வேகமாய் ஓடின கொக்குகள்
இன்னொரு கிரகத்தை நோக்கி
”அங்கும் இப்படியானால்”
என்று தன் ஓட்டத்தையும் கசந்தபடி
பறந்து சென்றன கொக்குகள்.
நெடுங்கால்கள் பின் நீள
கூர் அலகு முன் நீட்டிச்
சிறகடித்துப் பாயும் அம்புகள்
காற்றில் புகுந்து
விண்ணில் புகுந்து
என்னில் புகுந்து அவை சென்றன


III

பூமியை விட்டு வெகு உயரே
நான் இல்லாத அந்த அகண்ட வெளியில்
வெறுமே
சதா
சிறகடித்துக் கொண்டிருக்கும் இந்த அம்புகள்
ஒரு மின்னலைப் போல்
சற்று நேரமே தோன்றிமறைவதால்
’அற்புதமான காட்சி!’


IV

எங்கிருந்து அவை எங்கே செல்கின்றன?

ஓராயிரம் சுகதுக்க முரண்கள் குமுறும் கடல் நான்
என்னை அவை கடந்து செல்கின்றன
என்பது மட்டும் தெரியும்

தெரிந்தவை குறித்த சந்தோஷமும்
தெரியாதவை குறித்த துக்கமும் இல்லை
அப்போதைய அனுபவம் என்பதிலுள்ள ஆனந்தத்தில்
ஆதலால் ரொம்ப அறிந்தவன் போல்
நான் இப்போது எழுதியதும் உண்மையில்லை

ஆனந்தமாய் அவை பறந்து சென்றுகொண்டிருந்தன
ஆனந்தமாய் நான் அவற்றைப் பார்க்க முடிந்ததால்


V

அப்போது என்னில் சுகதுக்கம் குமுறும் நான் இல்லை
நான் இல்லாததால் அதில் ஒன்றுமேயில்லை
ஒன்றுமேயில்லாததால் அது ஆனந்தமாயிருந்தது

நான் இல்லாததால் அதில் எல்லாமேயிருந்தது
எல்லாமேயிருந்ததால் அது ஆனந்தமாயிருந்தது

ஒன்றுமேயில்லாததில் எல்லாமேயிருந்தது
எல்லாமேயிருந்ததில் ஒன்றுமேயில்லை

ஒன்றுமேயில்லாததில் காலமுமில்லையாதலால்
எப்போதும் அவை ஆனந்தமாய்ப் பறந்துகொண்டிருக்கின்றன
எப்போதும் அவை ஆனந்தமாய்ப் பறந்து கொண்டிருப்பதால்
எல்லையற்றது வானம்; எல்லையற்றது ஆனந்தம்
எல்லையற்றது இயக்கம்

எல்லையற்றதால் சுதந்திரம்; சுதந்திரம் ஆனந்தம்
ஆனந்தத்தில் ஒன்றுமேயில்லை

ஒன்றுமேயில்லாததில் இடமுமில்லையாதலால்
எங்கிருந்து அவை எங்கு செல்லக்கூடும்?
இன்மையிலிருந்து இன்மைக்கு
அல்லது எல்லாவற்றிலிருந்தும் எல்லாவற்றிற்கும்
அல்லது சுதந்திரத்திலிருந்து சுதந்திரத்திற்கு
அல்லது ஆனந்தத்திலிருந்து ஆனந்தத்திற்கு

Read more...

Tuesday, August 27, 2013

சின்னஞ் சிறிய சோகம்

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம் முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே

விழித்திருந்தலே
என்னை வெளிப்படுத்துகிறது

இரவின் மயான அமைதி
என் தனிமையைப் போக்கும் புத்தகங்கள்
கடிகாரத்தின் டிக்டிக்கில்
காலக் குழந்தையின் தேம்பல்

ஆனால்
என் முன் வந்து
குறும்புடன்
(என்னை விழித்தவாறே கனவுகாண்பவனாக்கியபடி)
என் விழிப்பையே வேடிக்கை பார்க்கும் மௌனம்

அந்த மௌனத்தோடு
நான் மௌனமாய் இணைகையில்
வெளிப்பதுவது; மௌனம் மற்றும்
அதில் ஒரு பேருயிராய்க் ததும்பும் இறவாமை

படுக்கையில் எனது குழந்தை நெளிந்தது
இறவாமை(அம்ருதா) என்பது அதன் பெயர்
ஒரு கொசு அவள் மேலிருந்து எழுந்து விலகி
அவளைச் சுற்றி வட்டமிடுகிறது
அதன் ரீங்காரத்தில்
வெறிமிகுந்த ஒரு போர் விமானம்.
கையிலுள்ள புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு
அக் கொசுவை அடிக்க முயலுகிறேன்
தோற்றுத் தோற்று அலைகிறேன்
பத்து விரல்களும் கூடிய எனது கைகளால்
அதை அடித்துக் கொல்ல

இதுவே எனது வேலை எனும்படி முழுக்கவனமாக
கடைசிவரை அதை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்
துயிலும் எனது குடும்பத்தின் நடுவே

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே

Read more...

Monday, August 26, 2013

பொந்துகளிலிருந்து…

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
உலவும் அணிலுக்கு
பெருச்சாளிகளைப்போல் தோன்றினர் மனிதர்கள்

மெய்யான கனிகளையோ
அதன் வேரையோ
காண இயலாத பெருச்சாளிகள்
அணில்களைக்
’குதித்தோடும் பழங்கள்’ என்றே
கவிதையில் எழுதின
கடித்துத் தின்னவும் தின்றன

மரங்களை
’பெயர்க்க இயலாப் பெரும்வேதனை’ என்றும்
’நகர இயலாத நொண்டி’ என்றும் எழுதின

பிசகாய் கக்கூஸ் கோப்பைக்குள் விழுந்துவிட்ட
ஒரு பெருச்சாளிக் குஞ்சு
கரையேற முடியாது வழுக்கி வழுக்கி விழ
முயற்சியைக் கைவிட்டு
மலத்தின் பெருமைகளை எழுதத் தொடங்கிற்று

எப்போதும்
பொந்துகளிலிருந்து பொந்துகளை நோக்கியே
வாகனாதிகளில் விரைந்த பெருச்சாளிகள்
சூர்யனைக் காணப் பயந்தவை

இருளில் சுறுசுறுப்பாயலையும் இப்பெருச்சாளிகள்
பகலில் கருப்புப் போர்வையணிந்து கொண்டே
கதிரொளியில் விளைந்த தீனி பொறுக்கும்
விதியின் கேலியை
நினைத்து நினைத்துச் சிரிக்கும் அணில்

சூர்யவொளியில் நனைந்தபடி
மரக்கிளை மீது
ஆனந்தமாய் குதித்தோடும் அணில்,
சூர்யனைக் காண அஞ்சும்
பெருச்சாளிகளைக் கண்டு அஞ்சுவதே
விந்தைகளிலெல்லாம் பெரிய விந்தை
சோகங்களிலெல்லாம் பெரிய சோகம்

Read more...

Sunday, August 25, 2013

குப்பைத் தொட்டி

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவிஞன் அவன்
ஆகவே மிகப்பெரிய கவிதையும் அவனே

மனிதர்களின், உபயோகித்துக் கழிக்கப்பட்ட
பல்வேறு பொருள்களையும், அதன் மூலம்
பல்துறை அறிவுகளையும் அவன் ஏற்கிறான்,
யாதொரு உணர்ச்சியுமற்று
(மனித உணர்ச்சிகளின் அபத்தம் அவனுக்குத் தெரியும்!)

நவீன உலகைப்பற்றிய
ஒரு புத்தம் புதிய கொலாஜ் கவிதையை
அவன் ’தன்னியல்பா’கவே சமைக்கிறான்
(மூக்கைத் துளைக்கவில்லையா அதன் வாசனை?)
அவன் செய்ததெல்லாம் என்ன?
மனிதப் பிரயத்தனத்தின் அபத்தத்தை அறிந்து
ஒரு குப்பைத் தொட்டியாக மாறி நின்றது ஒன்றுதான்

ஆனால் அந்த நிகழ்வின் அசாதாரணம்
அவனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவியாக்குகிறது

’என்னைப் பயன்படுத்திக்கொள்’ என்று
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
ஒரு பெருங் கருங்குழியாக்கிக் கொண்டு
திறந்து நின்ற அந்த முதல் நாளை
அதன்பிறகு ஒரு நாளும் அதற்குத் தெரியாது.

அது தான் உட்கொண்ட பொருளை
ஜீரணிப்பதுமில்லை; வாந்தியெடுப்பதுமில்லை.
(இரண்டுமே ஆரோக்யம் சம்பந்தப்பட்டவையல்லவா?)
மனிதார்த்தத்தை மீறிய
மனிதனைப் பற்றிய, உன்னத கவிதை அது

தரித்திரத்தோடு, இவ்வுலகப் பொருள்கள் மீதே
வெறிமிகுந்த பஞ்சைகளும் பரதேசிகளும்
அக் குப்பைத் தொட்டியில் பாய்ந்து
முக்குளித்து எழுகிறார்கள்.
குப்பைத் தொட்டியின் மூர்த்திகரத்தைப் புரிந்துகொண்ட
பாக்யவான் விமர்சகர்கள் அவர்கள்

Read more...

Saturday, August 24, 2013

பச்சைப் பாம்பு

பாம்பு தன் நிறத்தை மாற்றிக்கொண்டு
மரத்துடன் அது செய்துகொண்ட இணக்கம் என்ன?
ஒன்றுமேயில்லாத அன்பு

அதன் கூரிய நாக்கு
உன் கண்களைப் பார்த்தே கொத்திவிடும்;
காலத்தின் கருவளையமிட்ட உன் கண்களை
உன் கண்களைப் பாதுகாத்தபடியே
இடுக்கிவிட முடியுமா நீ அதன் தலையை?

இடுக்கியபடியே இன்னொரு கையால் காமத்துடன்
அதன் உடலைத் தழுவி உருவுகிறாய்
அந்த உடலின் உக்கிரநெளிவில்
காண்கிறாய்;
ஒரு நீண்ட நதி மற்றும்
ஒரு சவுக்கு

Read more...

துயரங்கள் பற்றி

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைப்பது எது?
வேறு வேறாய்ப் பிரிப்பது எது?

லோடு லாரிகள் போகும்போதெல்லாம்
வலித்து இழுத்து இம்சித்துவிட்டுப் போகின்றன
இம்சைப்படுவது எது?

தறிக்கப்பட்டுத் தரையில் கிடந்த கிளை –
அலைக்கழியும் எனது உடலா?
இல்லை
துயருறும் எனது ஆன்மாவா?
இல்லை;

துயர்

அரிவாளுடன் நான் மரத்தைவிட்டு இறங்கும்போது
”இறங்காதே” என்றது,

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைத்ததும்
என் கேள்விகளுக்குப் பதிலாகி
என் கேள்விகளை விழுங்கியதுமாகிய

ஏதோ ஒன்று

Read more...

Friday, August 23, 2013

உச்சிவெயிலின் போது

இந்த வீதியைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதோ ஓர் உணர்வு
என்னை அறுக்கிறது

உச்சிவெயிலில் ஒருவன் நடக்கிறான்
அவனைப்பற்றி நீ ஏதும் சொல்வதில்லை.
அவன் நிழலை நோக்கி நடந்துகொண்டிருக்கிறான்
என்று நீ அறிவாய்.
உச்சிவெயிலின் போது எல்லோருமே
தங்கள் பொந்துகளிலும் நிழல்களிலும்
ஒதுங்கிக்கொள்கிறார்கள்
படுகொலைகள் நடக்கின்றன வீதியில்
அகால மரணமடைகின்றன இளநீர்க்காய்கள்

உச்சிவெயிலில் ஒருவன் நிற்கிறான்
நீ வியக்கிறாய்
அவனைக் கிறுக்கன் என்கிறாய்
(மரங்கள் கிறுக்குப் பிடித்தவையே)

உச்சிவெயிலில் அவன் அயராமல் நிற்கிறான்
ஒரு பனித்தூண் போல

சற்று நேரத்தில் அவனைக் காணோம்
அவன் ஓர் அடி எடுத்து நகரவும் இல்லையே


ஆனால் அப்போது இருந்தது அந்த இடத்தில்
கழிவிரக்கம் மற்றும் எவ்வகைத் துக்கமும் அற்ற
எனது கண்ணீரின் ஈரம்

Read more...

Thursday, August 22, 2013

காதலிக்கு

விவாஹம் கொள்ளாமல் விவாகரத்தும் செய்துள்ளோம்
உன் அலுவலகம் நோக்கி நீ
என் அலுவலகம் நோக்கி நான்
செல்லும் வழியில் நாம் புன்னகைத்துக் கொள்கிறோம்

’குட்மானிங்’ – நாம் பரிமாறிக்கொள்ளும் ஒரே ஒரு வார்த்தை
ஒரு சிலநாள் ஒருவரை ஒருவர் காணவில்லையெனில்
ஊகித்துக்கொள்கிறோம். என்றாவது ஒரு நாள்தான்
அதன் சுக-துக்கம் குறித்து
சிக்கனமான சில வார்த்தைகளில் பேசிக்கொள்கிறோம்

ஒவ்வொரு நாளும் உன்னைக் காணுகிற உற்சாகத்தில்தான்
காலைப் பொழுதில் மலரும் என் புத்துணர்வு
தளர்வுறாமல் தொடர்கிறது

இன்று ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டேன்
படுக்கையிலிருக்கிறேன்
நீ வீதியில் வராத சில நாட்களில்
எனக்கு நிகழ்வது போலவே
உனக்கும் ஒரு வெறுமை தோன்றும் இன்று
மீண்டும் நாம் சந்தித்தபடி ஒருவரையொருவர்
சிரமமின்றிக் கடந்து செல்வோம்
ஆனால் வாரம் ஒன்றாகிவிட்டது
உடல் தேறவில்லை
மருத்துவ விடுப்பும் கொடுத்துவிட்டேன்
இப்போது உடல் … மிக மோசமாகத்தான் ஆகிவிட்டது
தொடர்ந்து என்னைக் காணாதது கண்டு
நீ கலவரமாட்டாய்

இன்று என் ஸ்வவ்வை நானே பற்ற வைப்பது
இயலாது போகிறது
உன் கைகள் கிடைத்தால் தேவலாம் போலிருக்கிறது
என் முனகல் கேட்டு வந்தன அக்கம்பக்கத்துக் கைகள்
நான் மரிக்கும்போது
இந்தக் கைகளுக்குள்ள முகங்கள் துக்கிக்கும்;
நீ அழவும்
மரித்த பொருள், என்று உனக்குச் சொந்தமென்று இருந்தது?
என்றாலும், கவனி:
நான் உன் பாதையை அலங்கரித்திருக்கிறேன் –
உன் தலையிலிருக்கும் ஒரு ரோஜாவைப் போல

இந்தப் பத்து வருடங்களில்
தொலைந்துபோன ரேஷன் கார்டுக்காக;
பொருள்கள் களவு போன ஒரு நாள்
அதைப் போலீஸில் எழுதி வைக்க வேண்டி; என்று
இரண்டே இரண்டு முறைதான்
நான் உனக்குத் தேவைப்பட்டிருக்கிறேன்

நான், கொத்தமல்லித் துவையலுக்கும்
பித்தான் அறுந்து குண்டூசி மாட்டியிருக்கும்
என் சட்டைக்குமாக
உன்னை அணுக முடியுமா?

ஒரு விடுமுறை நாளில் நீ சமைக்கையில்
அல்லது
உன் சீதா மரத்தில் கனிகள் பறிக்கையில்
என் ஞாபகம் உனக்கு வந்திருக்கும்
அதற்காக, மறுநாள் பார்க்கையில்
அந்தக் கனிகளுடன் என்னை நீ நெருங்கவில்லை
என் மிகச்சிறிய தோட்டத்து ரோஜாப்புதரில்
அபூர்வச் சிரிப்புடன் என்னை வியக்க வைக்கும்
ரோஜாவைப் பார்க்கையில் எனக்கு உன் ஞாபகம் வரும்
அவரவர் ரோஜாவை அவரவர்தான்
பறித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதி
அன்று அதைப் பறித்துக்கொண்டு உன்னை அணுகும்
அற்பச் செயலில் என்னை ஈடுபடுத்தாது தடுக்கும்.
இந்த அனுபவத்திலிருந்துதான்
நானும் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
உன் படுக்கையில் நீ என் துணையை வேட்கிற
ஒரு இரவை நீ கண்டிருக்கலாம் எனினும்
காலையில் அந்த நோக்கத்துடன் நீ
என்னிடம் என்றும் புன்னகைப்பதில்லை
நான் அறிவேன் ஜானகி, உன் புன்னகை
நூற்றுக்கு நூறு அஸெக்சுவலானது;
உயிரின் ஆனந்தத்தைப் பிரதிபலிப்பது;
தெருப் பொறுக்கிகளால் இனம் காண முடியாதது;
மலினப்படுத்த முடியாதது

Read more...

Wednesday, August 21, 2013

திரை

1.
அவரை பீர்க்கு புடலை பிடிக்க
வேட்டைச் சிலந்தி வலையாய்ப் பந்தல்
அதில் நிலா விழுந்து சிரிக்குது
கொடிவீசத் தொடங்கியுள்ள புடலை
மஞ்சத்து ராணியைப் போல் தலை தூக்கி
ஒய்யாரமாய்ப் பார்க்குது

மதில் கதவின் தாழ்ப்பாள் நீங்குகிற ஒலியில்
திடுக்கிட்டு எழுந்தாள் ஜானகி
தன் கணவரை வரவேற்க; அப்பொழுதே
வலைவிட்டுக் குதித்து உயரத் தனித்தது நிலா
வயிறுகொண்டு ஊரும் ஜந்துவாயிற்று புடலை
திரையாகக் கணவன் முன் போய் நின்றாள் அவள்

2.
குளித்து அழுக்கு நீங்கி நிற்கின்றன தாவரங்கள்
மேகம் நீங்கி ஓடிவந்து
கண்ணாடி ஜன்னலைத் தழுவிய குளிரைக்
கொஞ்சுகிறது வெயில்
உள்ளே ஜானகி
அவள் கணவன் இன்னும் வரவில்லை
கண்ணாடி ஜன்னல் காட்டுகிறது;
சிட் சிட்டென்று
வெளியை முத்தமிடுகின்றன குருவிகள்

Read more...

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னைச் சூழ…
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது

Read more...

சருகுகள்

விலங்கு அடித்துப் போட்டிருந்தது
அவனை.
ஜீவனற்ற விரல்களிலிருந்து
விலகி ஓடிற்று பேனா
சருகுகள் உதிர்ந்துக் கிடக்கிற காட்டைக்
காடு உற்றுப்பார்க்கிறது
விலங்கின் காலடிகளை
சப்தித்துக் காட்டுகின்றன சருகுகள்

Read more...

Tuesday, August 20, 2013

ஓர் அந்திப்பொழுதில்

இளமைக்கும் செழுமைக்கும்
மெருகு ஏற்றிக் கொண்டிருந்தது
மஞ்சள் வெயில்.
புல்தரையின் ஒரு பூம்பாத்தியில்
வாடி உதிர்ந்துள்ள மலரிதழ்கள்
குருவி ஒன்று அவன் விழியைக்
கொத்தித் தின்னுவதைப்
பார்த்துக்கொண்டிருந்தது
விழியற்ற வானம்
குருட்டு உடல் வண்ணத்துப் பூச்சி தவித்து
ரோஜாவின் முள் குத்திக் கிழிந்தது
இரண்டு பிரம்பு நாற்காலிகளின் கீழ்
காலியான இரண்டு தேநீர்க் கோப்பைகள்
நிரம்பி வழிந்தன ஏதுமற்று

Read more...

காற்றடிக் காலம்

1.
தும்பிழுத்துக் கதறும் கன்றாய்
பறக்கத் துடித்தன மரங்கள்
பறக்கத் துடிக்கும் கூண்டுப் பறவையாய்
சுவர் ஜன்னலும் படபடக்கிறது
பறக்க இயலாத சோகத்தில்
முறிந்து விழுந்து அழுதது முருங்கைமரம்
விளையாடப் போன தம்பி
வெகுநேரமாய்த் திரும்பாததில் பயந்து
தேடிக்கொண்டு வந்து
நையப் புடைத்தாள் அம்மா
தானும் பறக்கத் தவிக்கும் கூரையைக்
கஷ்டமாய் பார்க்கிறான் குடிசைக்காரன்

2.
ரூபமற்ற சாரமற்ற இங்கிதமற்ற காற்று
எதிரே வருபவர்களையெல்லாம் வீதியில் வைத்து
வெறிகொண்டு தழுவுகிறது
முகஞ்சுளித்துப் பழித்துப்போனாள்
வயசுப்பெண் ஒருத்தி
வெகு உயரத்தில் திரிந்த பறவைகள்
இறக்கைகள் களைத்து, மரக்கிளை
புல்வெளிகளில் இளைப்பாறி நிற்கின்றன.
காற்றில் சுழித்து
மரக்கிளையில் குத்திக்கொண்ட பட்டம்,
நூலில் இழுபட்டுக் கிழிய
கைவிட்டு ஓடிப்போன குழந்தைகள்
நவ்வா மரத்தடியில் பழம் பொறுக்குகின்றன
ஓலை கிழித்துச் செய்த காற்றாடி வட்டங்களில்
காற்று திணறியது
காலம் மறந்தது; வேதனை மறந்தது;
மகிழ்ச்சி விளைந்தது பிள்ளை முகங்களில்
சுழலாது பிணக்கும் காற்றாடி இறக்கையைத் திருகி
’மந்திரம்’ சொல்லிச் சுழல வைப்பான்
அண்ணக்காரச் சிறுவன் தன் தம்பிக்கு

3.
வேரூன்றவே தவிக்கும் விழுதாக
மரக்கிளையில் நாண்டு தொங்கிய
அனாதை ஒருவன்.
ஊன்றி வலுத்த மரத்தடியில்
காற்றடிக்க அடிக்கச்
சுற்றிச் சுற்றிவந்து
கனிகள் பொறுக்கும் குழந்தைகள்

Read more...

Monday, August 19, 2013

கடலின் பெருங்குரல்

கடலின் பெருங்குரல் இடையறாது
நிலத்தை நோக்கிச் சொல்வதென்ன?
புரியவில்லை. மண்புயல்
பூமியைப் புரட்டிப் புரட்டித் தேடியது.
திடீரென மலையின் ஊற்றுத் திறந்து
ஓடிவந்தது கடலை நோக்கி
வழியெல்லாம் மண்புயல் அடங்கியது
பூமியின் புதையல்கள் மேலெழும்பி மலர்ந்தன
கடல் ஆரவாரித்து ஊக்குவித்தது பூமியை

Read more...

தண்டவாளத்து ஆட்டுக்குட்டி

இணையாத தண்டவாளங்களின் நடுவே
நின்று அழுதது
தனித்ததொரு நிலவு.
இரு கண்ணீர்க் கோடுகளென
தண்டவாளங்கள் மேல் விழுந்த
அழுகை
நிலவு நோக்கி மீண்டு திரும்பி
இணைந்தது. உடன்
உட்கிரகித்து ஓடிவந்தது
நிலவைத் தன் தலையில் சூடியிருந்த
ரயில்.
பயந்து எழுந்து விலகி ஓடிற்று
தண்டவாளத்து நடுவே நின்ற
ஒரு ஆட்டுக்குட்டி. ரயில்
கையசைத்துச் சென்றது தன்போக்கில்.
உயிர் பிழைத்து வாழ்வை இழந்த
ஏக்கத்துடன் பார்த்து நின்றது
ஆட்டுக்குட்டி.
சங்கல்பத்துடன் மீண்டும்
தண்டவாளத்தில் போய் அமர்ந்தது.
இணையாத தண்டவாளம் கண்டு
அழுதது தனித்த அதன் நிலவு

Read more...

Sunday, August 18, 2013

இருண்ட கானகத்தினூடே

1.
ஒருவன் செல்லுமிடமெல்லாம்
கருணை கொண்டு வழிகாட்டியவாறு
ஒரு ஒளியும் செல்வதெங்ஙனம்?
ஒளிரும் விளக்கொன்று
அவன் கையோடு இருக்கிறது

2.
முன்செல்வோனின் பாதம்பட்டு
முட்களற்று பூத்த பூமியே!
வியந்து பின்தொடர்ந்து
பின் தொடர்வோரின்
சுக பாதையான பூமியே!
நீ, பின்தொடர்வோனை வெறுத்தென்ன
தன்னை உணராமல்!

தன்னை உணர்ந்த பூமி
அந்த அம்மணப் பாதங்களை ஒற்றி ஒற்றி
அவனுடன் நகரும்
வெறும் பாதையாய் மீள்கிறது

Read more...

கவிதை விவகாரம்

மல்லாந்து விரிந்த உன் மாம்சமுலைகள்
மணல் தேரிகள்
வேட்கையால் விடைத்த இமை மயிர்கள்
கரும் பனைகள்.
உன் காமாக்னி முகம்
செஞ்சூர்ய வானம்.
கொந்தளிக்கும் காமம்
சிறகடித்தெழும் வைகறைப் பறவைகள்.
மேனித் தழலில் உருகி உருகி மென்காற்றாகி
என்னை வருடுகிறது உன் மேலாடைக் காற்று.
என்னையே நோக்கும் உன் ஓடைவிழிப் பார்வைகள்
உன்னையே நோக்கும் என் நிழல்தான்.
விடைத்து நிற்கும் என் குறி
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி.
அடியே!
பீரிடும் எனது இந்திரியமடி இந்தக் கவிதை!

Read more...

Saturday, August 17, 2013

இவ்விடம்

சூரியனை விழுங்கக் குவிந்த
தாமரை இதழ்களுக்குள்
வண்டுதான் அகப்படுகிறது.
இங்கே
நகமும் வேண்டியிருக்கிறது,
நக வெட்டியும் வேண்டியிருக்கிறது.
அட, உதறுவதால் உருவாகும்
துணி மடிப்பின் நிழலை
உதறி உதறிப் போக்க முடியுமா?
என்ன சொல்கிறாய் நீ?

”வான் நோக்கி வளர்ந்து அடர்ந்து
நிழல் தரும் மரங்கள் ஏதும் கேட்கவில்லை.
பூமி நோக்கித் தொங்கி அடரும்
கொடியோ பந்தல் கேட்கிறது.
ஏழை நான் என் செய்வேன்?”

புலம்பாதே,
கொடியைத் தூக்கி மரத்திலிடு.
கடைத்தெருவில்
எவ்வளவு இருந்தால் என்ன?
எல்லாப் பொருளையும் விலை விசாரித்துக்கொண்டு
எதையும் வாங்காமலேயே போய்விடலாம்

Read more...

விருட்சம்

கைகளை ஏற்றி
மார்பில் கட்டிக்கொண்டு
கண்கள் மாத்ரம் சுழன்றன

பார்வைக்குள் புகுந்த கனல்
கைகளை அவிழ்த்தது

கட்டு பிரிந்து விழுந்த
கைகள் இரண்டும்
மண்ணைத் தொட்டுத் துளைக்கும்
உயிர்ப்பு மிகுந்த விழுதுகளாயின

கால்களோ உயரே எவ்வி
வெளியை எட்டி உதைத்தன.
எட்டாது விலகி ஓடிற்று வெளி

கால் விரல்கள் கிளைத்து இலைத்து
விலகி ஓடும் வெளியை
இடையறாது விரட்டிற்று

பூமியிலிருந்து பூமியை
உதறி எழுந்த மேகங்கள்
இடையறாது வெளியை விரட்டும்
இலைகளைப் போஷிக்க
எழுந்து எழுந்து பொழிந்தன

Read more...

Friday, August 16, 2013

ஓவியம்

அவள் அழகாயிருந்தாள்
அதன் காரணமாய்த்தான்
அவளை என் ஸ்டுடியோவுக்கு
அழைத்துச் சென்றேன்
பயந்து
சுற்றி முளைத்துள்ள
புலன் கதவுகள் வழியாய்
ஓட நினைத்தாள் அவள்
கதவுகளைச் சாத்தினேன்

அவளை உள்ளே போக்கி
மூடிய அறை
ஒரு தூரிகையாயிற்று
பயத்தில் இருண்டு
விகாரமாயிற்று அவள் அழகு

உள் விளக்கைப் போட்டு
ஒளியை அவள் மேல் பாய்ச்சி
அவள் அழகை மீட்டேன்

குவிந்து நின்ற
தூரிகையின் கதவுகள் திறந்து
திரைவெளியில் குதித்து
என்னை விட்டோடினாள் அவள்
தன் வழியைப் பார்த்துக்கொண்டு

Read more...

உதிர்தல்

தயக்கமின்றி நேராய்த்
தரைக்கு வந்துசேரும் பழம்

தரையெங்கும் உதிர்ந்த இலைகளிலும்
(உருண்டு புலம்பாது
சாந்தி மேற்கொண்டவை மட்டும்)
கனியின் நிறம்

Read more...

Thursday, August 15, 2013

கண்டவை

எனது அறையின் கீழே
ஒரு பலசரக்கு மளிகை.
ஆதலால் எலி நடமாட்டம்
தாராளம் உண்டு

நான் ஒழிந்த வேளைகளில்
என் அறைக்குள்ளே நிகழும்
அந்தப் பேரானந்தப் பெருங்கூத்து
எனக்குத் தெரியும்; ஆனால்
கதவு திறந்து நான் தோன்றுகையில்
அலங்கோலமாய்த்தான் கிடக்குது
என் அறை
O

வாசற்படியில் அமர்ந்து
தலை வாரும் ஒரு பெண்

வெளிப் பார்வையிழந்த விழிகள்,
சீப்பு பற்றிய விரல்களில்
சக்தியின் துடிப்பு, சிரசின்
கூந்தல் சிடுக்குகள் இளகி இளகி
விழுந்த மடியில் விழித்த ஒரு சிசு-
மடிவிட்டுத் தவழ்ந்து
முற்றத்து மையத்தில்
கண்டுவிட்டது தனது இடத்தை!
வியப்பில் எழுந்து நின்று
கைகொட்டிச் சிரித்தது
O

உரத்த காற்றில்
கொடியிலாடும் ஆடைகள்
உடல்கள் வேண்டி
ஆர்ப்பரிக்கும் விகாரங்களா?
அல்ல,
உடல்கள் துறந்த பரவசங்கள்!

ஆடை கழற்றி
வேறுவேறு ஆடை அணிந்துகொள்ளும்
மனிதனை நோக்கி
நிர்வாணம் கூறும் ஞானக்குரல்கள்!

அம்மணமான சிலரும்
தம் தோலையே தடித்து மரக்கவிட்டு
ஆடையாக்கிக் கொண்டது கண்டு
வீசும் எதிர்ப்புக் குரல்கள்!
O

மலர் மேய்தல் விட்டு
இணை துரத்தியது
ஒரு வண்ணத்துப் பூச்சி.
மலர் மொய்க்கச் சென்ற
இணைமேல் ஏறித்
தரையில் உருண்டன இரண்டும்

உருண்ட வேகத்தில்
மலர் அதிர்ந்தது
தரையில் சிந்திற்று ஒரு துளித் தேன்
உடன் எழுந்து பறந்தன இரண்டும்
அதனதன் மலர் தேடி

மண்ணில் சிந்திய தேன் நினைவு உறுத்தும்
ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு மாத்ரம்
மலரெல்லாம் நாறிற்று
தேனெல்லாம் புளித்தது
O

ஜுவாலை வி்ட்டு எரிந்தது செங்கொடி…
சாலை தடை ஆகி
பழுது பார்க்கப்பட்டது

பாடுபடும் பாட்டாளிகள் பாடு முடிந்தது…
எங்கே போச்சு செங்கொடி?
குருதியில் கலந்து போச்சு!
O

கூட்டிக் குவித்த சருகுகள்
எதிரே-
ஒரு குவிலென்ஸ்

பார்வை தரும் வெளிச்சம்
எனினும்
வீரியமற்றுப் பரந்திருந்த
சூர்யக் கதிர்கள் அவை-
குவியவும்
தோன்றுகிறது அந்த நெருப்பு
O

Read more...

பாய்

பாய் விரித்தேன்
படுக்குமிடம் குறுகிப் போச்சு

என்னை மீட்க வேண்டி
அகண்ட வெளி
காலத்தை அனுப்பி
அபகரிக்க முயன்றது
என் பாயை

விட மறுத்தேன்
பிய்ந்து போச்சு

புதுப்புது பாய்கள் விரித்தேன்
வாழுமிடம் குறுகியதால்
வதைக்கும் சிறையாச்சு

ஒரு கண விழிப்பு
வெளியின் அழைப்பு
பாயைத் தூர எறிந்தேன்

Read more...

Wednesday, August 14, 2013

வீடும் மரத்தடியும்

ஒரு பாலையில் போய் குடியிருக்கிறேன்.
காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில்
தங்கிக்கொள்கிறேன்; மாலையில் கிழக்கில்.
வீட்டிற்குள் எனது கற்புடைய மனைவி.
வெப்பம் தாளாத உச்சி வேளை
வீட்டுள் போய் புணர்ந்து பெற்ற குழந்தைகள்
வெளியே நிழல்தேடி அலைகின்றன

விதைகள் சேகரித்து வந்தன, குழந்தைகள்
பாலையெல்லாம் சோலையாக்கத்
துடிதுடிக்கும் விதைகள்

இன்று
வீட்டின் முன்னே ஊமையாய் வளர்கிற மரத்துக்குக்
காற்று, பேசக் கற்றுக்கொடுத்துவிட்டது
பேசக் கற்றுவிட்ட மரம்
அனைவரையும் தன்னகத்தே அழைக்கிறது
மனைவியும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்
வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்
மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்

Read more...

Tuesday, August 13, 2013

புகுதல்

நிறை ஜாடியருகே
ஒரு வெற்றுக் குவளை

ஜாடிக்குள் புகுந்துவிட்டது
ஜாடி சரித்து
குவளையை நிரப்பிய
வெற்றுக்குவளையின் தாகமும் வெறுமையும்

Read more...

சோப்புக்குமிழிகள்

மலைப் பிரசங்கமோ
அண்டத்தில் ஆயிரம் கோள்களைச்
சுழல விடும் வித்தையோ
ஜீவதாதுவினின்று உயிர்கள்
ஜனித்து உலவும் காட்சியோ
கூரை மேலமர்ந்து கொண்டு இச்சிறுவன்
விடும் சோப்புக் குமிழிகள்?

எல்லோரும் காணும்படிக்கு
தனது நீண்ட தொண்டைக் குழாயில்
காலம் கட்டி நின்ற அறிவுக்கரைசலை
உந்தியது
மெசாயா ஒருவரது
சுவாச கோசத்திலிருந்து மேலெழுந்த காற்று
அச்சு – வளையாய்க் குவிந்த
அவரது உதடுகள் வழியாய்
குமிழ் குமிழாய் வெளியேறிற்று
அவரின் அறிவுக் கரைசல்
அவரின் அச்சு – வளை உதடுகள்
குற்றமற்ற சூன்யவளையமாய் இருந்ததனால்
ஒளியின் ஏழு வண்ணங்களையும்
சற்றுநேரம் தாங்கியபடி
அழகழகாய் வானில் அலைந்தன
அவரது சொற்கள்!
சீக்கிரமே ஒளி தன் வெப்பத்தால் அவைகளை
உடைத்து உடைத்து முழுங்கிற்று
ஆ! அந்த ஒளிதான் என்றும்
பார்வைக்குக் கிட்டி
சொல்லில் அகப்படாதேயல்லவா இருக்கிறது!

Read more...

Monday, August 12, 2013

மழைத் துளிகள்

இலைகளிற் தொங்கியபடி
யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே!

யோசனைகளாற் பயனென்ன?

கனம் கொண்டீரேல்
மண்ணின் தாகம் தீர்க்கிறீர்
இல்லையெனில்
கதிரவன் கொய்து உண்ணும்
கனிகளாகிறீர்

Read more...

சாலையும் மரங்களும் செருப்பும்

வெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை
பெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்
வரிசை மரங்கினூடே அச்சாலை
மெதுவாய் நகர்ந்துகொண்டிந்தது
நானோ,
மெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து
திகைத்து நின்றுவிட்டேன்.
மனிதர்களுக்கு இடைஞ்சலிக்காது
சாலையோரங்களில் மரங்களின் ஊர்வலம்
கானகத்தில் மரங்களின் மாநாடு
மரங்களின் ஒரே கோஷம்:
”மழை வேண்டும்!”
மழை வேண்டி வேண்டி
வானத்தைப் பிராண்டின கிளைகள்
நீர் வேண்டி வேண்டி
பூமியைப் பிராண்டின வேர்கள்
வெள்ளமாய்ப் பெய்த மழையில்
மரங்களும் சாலையும் நானும்
நனைந்தோம்
முளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்
நனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு

Read more...

Sunday, August 11, 2013

அபூர்வ கனி

நீர்க்கரை மரக்கிளையில் முழுநிலா
அபூர்வமான ஒரு கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன்
உனக்கென நான் அதை
அள்ளிவரத்தான் முடியவில்லை!

Read more...

பூந்தொட்டியும் காற்றும்

ஒரே ஒரு பூமி – அதில்
ஒரே ஒரு விருட்சம்
நானோ அந்த பூமிக்கு வெளியே
ஆகவே, அந்த பூமியின்
அந்த விருட்சத்தின்
கடவுள் நான்

தாய் பூமியின் ஈர்ப்பு மடியில்
இந்த பூமி அமர்ந்திருக்கிறது
அங்கிருந்து இதற்கு
உணவும் நீரும் எடுத்துக் கொடுப்பது நான்தான்.
கடவுளல்லவா?

இவ்வளவும் எதுக்கு?
விருட்சம் தரும் ஒரே ஒரு பூவுக்கு

ஒரே ஒரு விருட்சத்தின்
வேர் முழுக்கத் தாங்கிய
ஒரே ஒரு பூமியின்
ஒரே ஒரு பரிசு இந்தப் பூ!

பூவின் சுகந்தமோ
பேரண்டமெங்குமிருக்கும்
எல்லாக் கோள்களையும்
கிளுகிளுக்கச் செய்கிறது

மாலையில் பூ மடிகிறது
கடவுளும் மடிந்து விடுகிறான்
இன்னொரு பூ மலரும்போது
கடவுள் உயிர்த்தெழுகிறான்
பூவின் சுகந்தமோ மடிகிறதேயில்லை
அவன் அடிக்கடி இதை மறந்து விடுகிறான்
அப்போதெல்லாம் மரிக்கிறான்

ஏதோ ஒரு ஆனந்தத்தின் சிலிர்ப்பில்
சலனத்துக்காளான வெளியின் வஸ்துகள்…
ஹே! இந்த சுகந்தத்தைக் கூடியும் கூட
அதைப் பொருட்படுத்தாது போவதெங்கே?

ஓடிப்போய்ப் பார்த்தேன்:

வாயிலும் ஜன்னல்களும் வரவேற்றன
நுழைந்தது காற்று. நுழைந்த கணமே
விரட்டுகின்றன வாயிலும் ஜன்னல்களும்

என் வீடு விரும்புவதென்ன?

உறைந்து நிற்கும் அம்மாவின்
புகைப்படத்தையும் மேஜை மீதிருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
ஒரே கோட்டில் இணைத்தவாறு
தொட்டு விசாரமின்றிச் செல்கிற காற்றில்
இருவரும் புன்னகைத்து நிற்கின்றனர்!

காற்று சதா கடந்து செல்கிறது

தனது நிச்சலன முற்பிறப்பைத் தேடியா அது போகிறது?
அல்ல அல்ல
தன்னை உயிர்ப்பித்த ஆனந்தத்தின் சிலிர்ப்பை
எங்கும் உண்டாக்கியபடி
ஆனந்தமாய்ச் சென்றுகொண்டிருக்கிறது

Read more...

Saturday, August 10, 2013

புயல் குருவிகள்

1.
வீதியைத் தாண்டித்தான் வெளியே வரவேண்டியுள்ளது
உள்ளே புக வேண்டுமானாலும் வீதியைத் தாண்டித்தான்

வெளிக்காற்றுக்காய் ஜன்னலைத் திறந்தால்
வேலையின்றிக் கறுத்த அவன் முகம்

காற்றைக் கோபப்படுத்துகிறது
ஜன்னல் மூடிய அறையுள் விசிறி

வெளியிலிருந்து வரும் காற்று
எவ்வாறு உலவுகிறது
வீதியில்?

காபி ப்ரேக்கில் வீதிக்கு வந்தவன்
கண்டான், காபி சாப்பிட அழைத்தான்

வேலை கிடைத்தவன் – வேலை கிடைக்காதவன்
இருவர் காபியிலும்
பருகி முடியும் வரை
ஒரே ருசி ஒரே சூடு

2.
தோழ,
தன் போக்கில் பூப்பெய்தியுள்ளவை நமது சுவாசகோசங்கள்.
தோழமைப் புணர்ச்சியில் புயல் கருக்கொள்கிறது.
ஆபிஸ் கட்டடம், மரக்கிளை எங்கும்
புயலை அடைகாக்கிறது குருவி. ஆனால்
புயல் கருக்களிலிருந்து பிறப்பதோ –
தோழ, நீ எதிர்நோக்கும் புயல் அல்ல;
புயல் குருவிகள் காண்!

Read more...

Friday, August 9, 2013

ஒரு புதிய கருவி

ஆப்பின் தலையில் விழுந்தது சம்மட்டி அடி
ஆப்பின் நுனி மரத்தைப் பிளந்தது
சம்மட்டியையும் ஆப்பையும் தூர வைத்துவிட்டு
கோடரியை எடுத்துப் பிளந்தேன் மரத்தை
கோடரி: சம்மட்டியும் ஆப்பும் இணைந்த
ஒரு புதிய கருவி
சில கணங்கள்
கோடரியையும் தூர வைத்துவிட்டு
பார்த்து நின்றேன் அம்மரத்தை
என்னுள்ளே அம்மரம் சப்தமின்றிப் பிளந்து விழுந்தது

Read more...

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா

Read more...

அடையாளங்கள்

முகம் காணத்
தோளைத் தொடும் ஒரு மச்சம்
முறுவலிக்கும் இதழருகே
நெருங்க முடியாது உறைந்துவிட்ட
ஒரு மச்சம்
சிரிக்கும்போது
கன்னத்தில் தோன்றும் ஒரு ‘Black hole’

Read more...

Thursday, August 8, 2013

தேரோட்டம்

உண்மையிலேயே மகாகொடூரமான நாள்தான் இது
வீதியெல்லாம் அலைந்த
இவளின் கைக்குழந்தைக்குக் கிட்டாத
கவளம் சோறாய்க்
கொல்லும் வெயில்; அதனைத்
தீர்க்கிறேன் பேச்சாய், முழக்கமாய்
ஐஸ் விற்கிற மணி ஒலி
பலூன்களுக்காய் முரண்டும் குழந்தைகள்
சாமி பார்க்க எக்கும் விழிகள்
வாணமாய் உயர்ந்து (நட்சத்ரப்) பூ விரிக்கும் விண்ணில்
என் வாழ்வோ
சூறைவிட்ட நோட்டிஸ்களாய்
வெறுமைமீது
மோதிச் சிதறி
கீழே விழுந்து
வியர்வையாய் சதையாய்
மயக்கும் முலைகளாய்
கூந்தலிலிருந்து உதிரும் மலர்களாய்
கால்களே கால்களை மிதித்துத் துன்புறும் கால்களாய்
அலைமோதி
நெரிபட்ட குழந்தையொன்றில் அழத் தொடங்கும்;
சறுக்கு, தடி, சம்மட்டிகளுடன் உழைப்பாளி வர்க்கமொன்றாய்த்
தேரை உருட்டும்;
நேர்ந்துகொண்ட கடன் நெஞ்சோடு
வடம் பிடித்து இழுக்க;
சற்றே நெகிழ்ந்து கொடுக்கும் மனதாய்
அசைந்து கொண்டு
நடக்கத் தொடங்கும்;
துயர்க் கடல் வீதியாய்
கருப்பு அலைவீசுகிற தலைகளுக்கு உயரே
தேர் தேர் தேர் என்று
அண்ணாந்த முகங்களுடன்
நெருக்கியடித்துக் கொள்ளும்
கூட்டம்

Read more...

Wednesday, August 7, 2013

எனது கிராமம்

பேருந்துகளாய் முழக்கும் பட்டணத்து வீட்டுக்கு
கால் நடையாய் லோல்படுகிறது கிராமம்,
தன் பிள்ளை முகம் எப்போதும்
வாடிவிடக் கூடாரே என்று;
”கட்டிக் கொடுத்த பிறகும்
எங் கஷ்டம் தீரலியே ஐயா” என்று

தினந்தோறும் சீதனமாய் புல்லுக்கட்டுத் தலைச் சுமைகள்,
அவள் ’அண்ணன்மார்’ இழுத்துவரும்
வைக்கோல் வண்டிகள் காய்கறிகள் பிறவும்

வீட்டுக்கு
வெளியில்
நடைபாதைகளில் நிறுத்திவைத்துப்
பேரம் பேசும் அவமானங்கள்;
”எல்லாம் பொறுத்துத்தானே ஆவணும்
பொண்ணைப் பெத்தவ!”

மடிகரந்து கன்றை விளிக்கும் கொட்டில் பசுக்களுக்கு
எப்போதும் தாய்வீட்டு நினைவுதான்;
புல்மேயப் பரந்த வெளிகள்
விரிந்த விரிந்த வானப் பரப்பில்
எதை மேயும் வெண்மேகங்கள்?
சொல்லும் சுகம் மேவும் காற்று
நினைவு அறுந்து
தூரே………….
சூலுற்ற மௌனத்தின் ஒரு விளைவாய்
பட்டணத்து வருகையாய்
ஊர்ந்து வரும் பஸ்ஸைப் பார்த்தபடி
உயிர்க்கும் வாழ்க்கை

Read more...

Tuesday, August 6, 2013

கைதவறியே தொலைகிற கைக்குட்டைகள்

உலகியல் அவசரமும் ஒரு கனல்தர
நீ நிறுத்தம் இல்லாத இடத்தில்
பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸில் ஏறியதை
பிடித்துக் கொள்ளாது விட்டுவிட்டாயே-
அதுதான்!
நீ கைதவறவிட்ட கைக்குட்டையை
எடுத்துக் கொடுக்கிற உறவில்தான்
நான் இதை எழுதுகிறேன்

பஸ்ஸில் ஏறிக்கொண்டதும்
உன்னைத் தொற்றிக்கொண்ட சமாதானம்,
சக பயணிகள் மீது பொழிய
உன்னில் முகிழ்க்கும் தோழமை, பயமின்மை…

ஓட்டுநரும் நடத்துநரும் ஏற்றுக்கொண்ட
உன் பயணத்தின் உத்தரவாதத்தின் மீது
கவலைகள் துறந்து பின்னோட
பஸ் ஜன்னல்கள் தரும் அற்புதங்கள் காண
குழந்தையாகும் உன் மனசு…

உனக்கு அந்த பஸ்ஸை விட்டும்
இறங்க மனவு வராது போனதை
மறந்தே போய்விட்டாய் இல்லையா?


விருந்தினரை வாங்கிக்கொள்ள முடியாத
வீட்டுக் குறுகலில் புழுங்கும் நண்பனைக் காண
விடியட்டும் என்று
கடைசிவேளை உணவை
உணவகத்தில் முடித்துக்கொண்டு
விடுதி அறையில் தங்கியபோது
உணவகமும் விடுதியறையும் தந்த
நிம்மதி வெளிச்சத்தில்
அந்த இரவு
எதையுமே படிக்காமலா தூங்கிப்போனாய்?

சரி
இங்கே, இந்நகரத்தில்தான் இருக்கிற
நீ சேர வேண்டித் தேடுகிற இடத்துக்கு
எதிர்ப்படும் முகமெல்லாம் ’தான்’ ஆக
வழி கேட்டு தடக்கையில்
பரிவுடனே வழி சொல்லி அனுப்புகிறவன் முன்பு
குழப்பத்தில் மனசிலாகாது போயினும்
வழியெல்லாம் கேட்டுக்கேட்டே
வந்து சேர்ந்துவிடவில்லையா நீ?

Read more...

Monday, August 5, 2013

அதர பானம்

எச்சிலென விழுந்தபின்
நக்குவதல்ல
முத்தம்

சொல்லூறும் வாய்
ஒரு கிணறு
கேட்கும் காது
வாய்விரித்த ஒரு வெற்றுவாளி
கிணற்றின் நீர்
வாளியின் வெற்றுவெளியைத் தீண்ட
வாளியின் வெறுமை
கிணற்றின் ஊற்றுநீரைத் தீண்ட
கேட்டல் – ஒரு பரிவர்த்தனை

கேட்டல்
குழாய் நீர் ஒழுக்கல்ல;
ஆனதனால்
நீர் எடுப்பதற்கு
கயிறும் வாளியும் மட்டும் போதாது
தசை நார் வலு வேண்டும்

Read more...

Sunday, August 4, 2013

உறவுகள்

புரிந்தவை சொந்தங்கள்
புரியாதவை அந்நியங்கள்
இரண்டுக்கும் நாயகனான
அனுபவமோ
பகைகளற்ற ஏகாங்கி

Read more...

நடத்தல்

எங்கிருந்து தொடங்குவதா?
நிற்குமிடம் அறி
அங்கிருந்தன்றி வேறெங்கிருந்து முடியும் தொடங்க?

காலடியில் உறைந்துபோன நதி
கக்கத்தில் செருகியிருந்த நடை
நடக்கத் தொலையாது விரிந்திருந்த பூமி
எட்டாது போய் நின்ற வானம்

நடையை எடுத்துக் கால்களில் அணிந்துகொண்டேன்

பாதம் ஊன்றிய புள்ளிக்கு
பாய்ந்து வந்தது
பூமியின் எல்லாச் சாரமும்

சுட்டுப் பொசுக்க
கால் தரிக்க மாட்டாது தவிக்கிறேன்
இட்ட அடி மண்தொட எடுத்த அடி விண்தொடும்
நிறுத்தலற்றுப் பாய்ந்தோடும் வாழ்வில்
நட
நடத்தலே வாழ்வு, விதி, போர்!
ஆனால்
நடையின் திவ்யம் கண்டு
என் ஆறு உருகி ஓடத் தொடங்கவும்
நடையைக் கழற்றிக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டனவே கால்கள்

Read more...

Saturday, August 3, 2013

சிலுவைப் பிரயாணம்

பாதத்திலொரு முள் தைத்து
முள் இல்லாப் பாதையெல்லாம்
முள்ளாய்க் குத்தும்
வழியை வலி தடுக்கும்
பெருமூச்சு விட்டு நிற்க – விடாது
உன் அகங்கரிக்கப்பட்ட முற்பகல்களெல்லாம்
உன்னைச் சாட்டையிட்டு நடத்தும்
எதிர்ப்படும் முகமெல்லாம்
வலிக்கு ஒத்தடமிடும் ஆனாலும்
நின்றுவிட முடியாது

Read more...

தையல்

நேற்று இன்று நாளை எனக்
கிழிந்து போயிற்று என்
சட்டைத்துணி
இன்று என்பது
நேற்றும் நாளையும்
தையல்கோர்த்துச் சூழ்ந்த ஒரு தீவு
இடைவெளி சூன்யம்
ஜீவன் ஆடிக் களிக்கும் மேடை
நேற்றையும் நாளையையும்
துறக்கமுடியாத என் ஜீவிதத்தில்
நானோ ஆடைகொண்டு
அம்மணம் மூடி
ஆடும் அற்பன்

இங்கே கவனி என்று அழைத்துச் சொன்னது
அம்மாவின் கைத்தையல் – அது முதல்
நான் என் ஊசித் துவாரத்தில்
நூல் மாட்டிக்கொண்டேன்
நேற்றையும் நாளையையும் இணைக்கும் நான்
நூல் நுழைந்த ஒரு
தையலூசி

Read more...

Friday, August 2, 2013

துடிப்பு

வியந்து வியந்து கண்டதெல்லாம்
ஒரே வெளியாய்
விரிந்து நின்றது கண்ணெதிரே
ஒரு மைதானத்தில்

சலிப்புற்று, காதல் குறும்பாய்
ஜனித்தன விளையாடல்கள்

விளையாட்டே வினையாயிற்று
மனவெழுச்சி மிருகமாக
விதிமுறைகள் குதிரையேற
விளையாட்டே வினையாயிற்று

நான் நீ என்று கட்சிகள் ஒரே வெளியில்
எத்தனை பிளவ, தாக்குதல், தட்டல்களையும்
அயராமல் ஏற்று அங்கிங்கெங்குமலையும்
முன்னர் வியந்து கண்ட பரம்பொருள்
தன் முழுமை உடையாத பந்து

அதில் அவரவர் வாழ்வுக்காய்
நாம் தெறிக்கும் தாக்குதல்கள்தான்
நம் ஒவ்வோர் இதயத்திலும்
நான் நான் என்று துடிக்குது

Read more...

செடி

அறியாது
ஒரு சிறு செடியை மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன்
திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்
அது மரமாகிவிட்டது என் கையில்
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்
பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி
கொலைக் கரத்தின் பிடிதகர்த்து
மேல்நோக்கிப் பாய்ந்தது புது ரத்தம்
கழுத்தில்பட்ட தழும்புடனே
பாடின தலைகள்

Read more...

Thursday, August 1, 2013

கிழியாத வானிற்கப்பால்

நிற்கிறது மழைக்கூட்டம்
கிழித்தெரியும் கரங்களும் நகங்களும்
மலைகளும் மரங்களும்
நின்றுபோயின கிட்டாத தூரத்தில் அழுதபடி

அழுத்தம் தாளாது பறவைகளும் மடங்கித் திரும்பின
தாகத்தால் வெடித்த பூமிக்கு
கண்ணீர்த்துளிகள் போதவில்லை
தானாக வானைக் கிழித்துப் பெய்யும் வழக்கமுமில்லை
மழைக் கூட்டத்திற்கு
மழை வேண்டுமெனில் இருப்பது ஒரே வழிதான்
பூமியின் ஆகர்ஷ்ணப் பெண்மைக்குள் சிக்காது
உன்னை நீயே பூட்டி அம்பாகப் பாய்ந்து கிழி வானை
ஒரு பொட்டு கிழித்துவிடு போதும்

Read more...

பாதை

உயிரின் தீண்டல்பட்டு
மரணத்தை உதறி உதறி ஓடிற்று பாதை
பாதங்களின் மந்தத்தனத்தை எள்ளிற்று
வானக வீச்சில் உயிர்கொண்ட
கணநேரப் புழுதி
முள்பயம் மட்டுமே அறிந்த பாதங்கள்
சின்னச் சின்ன பள்ளங்களை மறந்தன
பெருக்கெடுத்தோடும் வாகனங்களால்
சாலையின் லட்சணம் புலனாயிற்று
மேட்டை இடித்தன
பள்ளத்துள் வீழ்ந்த சக்கரங்கள்
சாலையெங்கும் அகலிகைக் கற்கள்
போவார் வருவார் கால்களை இடற
மனிதன் அலறுகிறான் ராமனைத் தேடி – ராமன்
கல்லுக்குள் அகலிகையாய்க் கனன்று கொண்டிருக்கிறான்
களைத்து தன்மேல் அமரப்போனவனை
இளைப்பாற விடாது எழுந்து நடந்தது அந்தக் கல்

Read more...

Wednesday, July 31, 2013

விஷம்

பாற்குடத்தில்
விழுந்துவிட்டது
விஷம்
வேர் பிடித்துப் பரவுமுன்
அள்ளி எடுத்துவிட
தவிக்கும் கைகள்
எல்லாமே விஷ அழுக்குக் கைகளானால்?


தீண்டிவிட்டது சர்ப்பம்
புண்ணில்லாத வாய்கொண்டு
கடித்துத் துப்பு உடனே
ஏனெனில்
குடலுடம்பு ஒரு புண்

காலங்காலமாய்
நான் விசுவாசத்தோடு
தொழுது வந்த தெய்வம்
ஒரு விஷ சர்ப்பம்
(பின்னால்தான் இது தெரிந்தது)
ஒரு நாள் என்னைக் கொன்று
இட்டுச் சென்றது ஓர் அமுதவெளிக்கு
இன்று அமுதவெளி முன்
ஒரு சர்ப்பம் நான்
பாற்குடத்தில் விழுந்துவிட்ட
துளி விஷம்

தெய்வத்தைக் கொன்று
பட்டத்தை அபகரித்துச் சூடிக்கொள்
இல்லையேல்
தெய்வம் உன்னைக் கொல்லவிடு
ஆள்பவள் ஒருவனுக்கே இது இடம்

Read more...

Tuesday, July 30, 2013

தராசு முள்

என் தராசு முள்
தன் அலைவுப் பிரதேசத்திற்குள்
தடுமாறியது
இருந்தும் –
நடக்கும் கால்கள் நகர்ப்புற இருட்டில்
இடையறாது தன் நிழல்களுடன்
பொருது வென்றபடி வர
கையோடு வரும் அரிக்கேன் விளக்காய்
ஒளி எப்போதும்
என் உடன் வந்துகொண்டுதானிருக்கிறது
நான் புசிப்பதற்காக
தன் உடலை மாத்ரம்
என் பாத்திரத்தில் மீனாகப் போட்டுவிட்டு
வானில் பறந்தது தராசுமுள்
மீண்டும்
மீன்கொத்தியாய் தாழ வந்தது
கடல் தன் அலைகளை இழந்து
மீனாய் நிறைந்தது
வானோ தன் வெறுமையை இழந்து
பறவையாய் நிறைந்தது

Read more...

புசித்தல்

கைக்கெட்டின ரொட்டி
வாய்க்கெட்டப் போகிற சமயம்
நிறுத்து
என விழும் தினசரித்தாள்
ஜன்னல் வழியாய்
பேப்பர்ப் பையனைப் பின்தொடர்ந்து
சாவாய் உறைந்து நின்றுவிடும்
செய்தித்தாளின் எழுத்துக்கள்
மறுகணம், அதே கணம்
அச் செய்தித்தாள் தளத்தை விட்டு
இரை தேடி உறுமியபடி
அவனை நோக்கிவரும் எழுத்துக்கள்

மழை தண்ணியின்றி
எரி்ந்துபோன ஒரு கிராமத்தைவிட்டு
வெளியேறும் கிராமத்து ஜனம்…

’கிறிஸ்துவே!
நீர் இரண்டு அப்பத்தை
ஆயிரக்கணக்கானோர்க்குப்
பெருக்கிப் பகிர்ந்த
அற்புதம் மட்டும்
எனக்கு வரவில்லையே!’
என்று இரங்கிவிட்டு
உண்ண முடியாமல் விட்டுப்போன ரொட்டியை
பசி அழைக்க திரும்பி வந்து பார்க்கையில்
ஆயிரக்கணக்கான உயிர்கள் பசியாறி
கொண்டாடும் திருவிழாத் தேராக்கியிருந்ததை
கண்டு ’கண்டேன்’ என்கிறான்
கொண்டாடிக் குதியாளமிடுகிற
எறும்புகளை உதறித் தள்ளி
எடுத்துப் புசிக்கிறான்
அந்த சத்தியத்தை – ரொட்டித்துண்டை!

Read more...

Monday, July 29, 2013

காட்சி

மண் சுவரில்
காரை உதிர் ஓவியங்கள் உயிர் பெற
அவை நடுவே
முன்னங்கால்களில் தலை சாய்த்து
துயிலும் நாய் ஒன்றின்
மார்புக்குழி உள்ளிருந்து
ஒரு மூட்டைப்பூச்சி
மெல்ல எழுந்து வெளியே நகர
நாயின் துயில்
துயிலல்ல
மரணம்!
……………
சுற்றிக்
குருசேத்ரமாய் வதையும் உலகம்
இதைக் கண்ணுற்ற காட்சியால்
திகைத்து
சித்திரங்களாகும் இம் மண்சுவரில்

Read more...

பூக்காடு

1.
எத்தனை முறை மழை பெய்தும் என்ன
பூக்காது காய்க்காது பழுக்காது
புல் புல்லாகவே தளிர்க்கிறது

2.
புல் நுனியில் ஒரு பூ காணும் ஆவல்
மேனியினின்று உயிரைப் பிரிக்கிறது.
உயிர்
வாழ்வின் புதுத்தேன் அருந்த மலர்தேடி அலைகிறது
உடன்
காமாக்னி பட்டுக் கருகாத
புல் நுனிகளில் மலர்கள் பூக்கத் தொடங்குகின்றன

3.
என்னைப் பின்தொடரும் என் நிழல்
என் மாம்சம்
என் இணை
தன் ஆசை நகங்கள் கிள்ளிய பூ
வாடி மரிக்கிறது அவள் தலையில்
மறுநாள் பிணவாடை போக ரகசியமாய்
அவள் மேனி குளித்தெழுந்தும்
மேனியின் வாடையே பிணவாடை
எனத் திடுக்கிட எழுந்து நகைக்கும்
உயிர்

4.
காலத்தின் அற்பத் தேவைக்கும்
சுயலாபக் கடவுளுக்கும்
காமக் கூந்தலுக்கும் பலியாகாமல்
விடுபட்ட மலர் ஒன்று
கால, சுயலாப, காம
இதழுதிர்ந்து காய்க்கிறது;
அப்படியே கனிகிறது.
கனியுள்ளே கோடி பெறும் வித்துக்கள்
நாளையொரு பூக்காடு விரிப்பதற்கு

Read more...

Sunday, July 28, 2013

மும்முனைக் காதல்

இறங்கினதும்தான் தெரிந்தது
’கடலுக்கு எப்போதுமே
கரைகள் மீதுதான் காதல்’

கோபத்துடன் வெளியேறும் தோணியை
கடல்
வழிமறித்து மல்லுக்கட்டும்
இடையைப் பிடித்துக் கெஞ்சும்
உதறி மீண்டும்
தோணியின் பக்கங்களையும்
கரையையும்
மாறிமாறித் தொட்டு
அலைமோதி அலைமோதிப் புலம்பும்

தோணிக்கு
ஈரம் சொட்டச் சொட்டக்
கரையேறி நிற்கையில்தான் புரியும்
உடனே பிணக்கைக் களைந்து
இறங்கும் மீண்டும்

கடல்
அதனை அணைத்தபடி
கரைக்கு வந்தே குலவிக்கொண்டிருக்கும்
அந்தக் கரையேற்ற வெளியில்
தோணியும் கடலுடன் குலவும்

Read more...

இலட்சியவாதிகளுக்கு

ஒரு மானஸ சட்டத்தில்
கைகளை விரித்து
தன்னைத் தானே அறைந்துகொண்ட
சிலுவைமரமாக்கிக் கொண்டு
சிறுவன் ஒருவன்
பாறைமேல் நிற்கிறான்.
அவன் காலடி உயிர்ப்பில்
உலகம் இரண்டாய்ப் பிளந்து
அவனுக்கு இருபுறமும் ஆகிறது
அவனை எகிறி வீழ்த்த
உறுமுகின்றன
பிளவுபட்ட பாறை முரடுகள்
அவனோ
சாவைத் தின்று
ஜனித்த பிறப்பின்
அண்டத்தை உலுக்குகிற பலம் திரட்டி
-பின்னர் அதெல்லாம் வியர்த்தமாவதறியாமல் –
அறிந்து
தன் மூர்க்கம் விட்டுக் கசிந்துபோன
பாறைப் பிளவின் ஈரத்தில்
தன் மூர்க்க குணம் விடாது
வேரூன்றி வளர்ந்து
சாதுவான பாறையைப்
பிளந்து தீர்த்து
விருட்சமாகிறான்.

ஓ…விருட்ச! அங்கே
வெகு ஆழத்தில் சென்று நீ கண்டதென்ன?
அதைச் சொல்!

இன்று
உன் வேர் நூல்களால்
நீயே ஏற்படுத்திய பாறைப் பிளவுகளைத்
தைத்து இணைத்துக்கொண்டு
கந்தல் கோலத்துடன்
கல்பகோடி வாய்களுடன்
என்னைத் தடுத்து நிறுத்தியபடி
நீ சொல்வதுதான் என்ன?

Read more...

Saturday, July 27, 2013

உறி வெண்ணெய்

குடிசையின் கந்தல் ரூபங்கொண்டது
ஒளிவெளி

சூரியனாய் நக்ஷத்ரங்களாய்
உட்சுடரும் பால்வெளி
குடிசையின்
கந்தல்கள் வழியாய் மாத்ரம்

அந்த சூர்ய நக்ஷத்ரங்கள் வழியாய்
பிரவஹிக்கும் பால்வெளி வெள்ளம்
உள் நிரம்பி
தன் அலைக் கரங்களால்
என் படுக்கையை ஏந்தித்
தாலாட்டத் தொடங்கிற்று

நான் என் தூக்கத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து
கதவைத் திறந்து
-இதுவரை சரிதான்
புறம் வந்தால் – அதுதான் தப்பு

கறைபட்டுப் புரளும் வெளி
கண், உதடுகளிலே
ஒளி வெண்ணெய் சிரிக்கும்
திருட்டுக் கண்ணனாக
முழிக்கும் உலகம்

பெருநிலை நோக்கிக்
கனன்றசையும் உறி வெண்ணெயாக
என்னுள் தொங்கும் ஒரு சுடர் ஒளி

Read more...

அறிவிப்பு

உங்கள் வரவு நல்வரவாகுக
அன்றன்றைக்குள்ள ஆகாரத்தை
அன்றன்றைக்கே
உங்களுக்குத் தருகிறோம்
தயவுசெய்து
கடன் சொல்லாதீர்கள்
கடன்
உணவை விஷமாக்கும்
இன்றைய கணக்கை
இன்றே தீர்த்துவிடுங்கள்
நேற்றைய பாக்கிகள்
நேற்றைய ருசிகள்
ஆரோக்யத்தைக் கெடுத்துவிடும்
நாளைய திட்டங்களும் கூட
நாம் ஒவ்வொரு தடவையும்
உணர்வின் சூட்டுடன்
புதிதாகவே சந்திப்போம்

Read more...

Friday, July 26, 2013

வியர்த்த போதம்

விழாது உருட்டிச் செல்லக் கிடைத்த
சைக்கிள் வீல் வளையம் ஒன்றை
ஒரேவீச்சாய்த் தள்ளிவிட்டுப்
பார்த்து நின்றேன்:
ஓயும் முன்
ஒரு வட்டமடித்துவிடப் பார்த்து
விழுந்தது
துடிதுடித்து

Read more...

’எனது ராஜ்யம் பரலோகத்திலிருக்கிறது’

வானிலிருந்துதான் வருகிறது மழை
அதனை ஏந்தி உபயோகித்து
நகரம் வெளிப்படுத்துவதோ
நாறும் சாக்கடை

வானத்திலிருக்கிற சூரியன்
சாக்கடை நீரை ஆவியாக்குகிறது

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP