Friday, November 30, 2012

கருத்தரங்கம்: நவ.16, 2002

இந்த மேடை நாற்காலியில் வந்து
அமர்ந்திருக்கையில்
நான் ஒன்றை
மிக எளிதாகத் தெரிந்துகொண்டேன்;
யார் யார் எங்கெங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பதே அது

நான் எழுந்து பேசத் தொடங்கும்போது
ஒவ்வொருவரையும் அழைத்துவந்து
இந்த நாற்காலியில் அமர்த்தவே விரும்பினேன்

பார்வையாளராய் வந்தமர்ந்திருக்கும் அன்ப!
அறியாது
என்னை உன் வியப்புகளால் அலங்கரிக்கவோ
கேள்விகளால் துளைத்தெடுக்கவோ எண்ணி
நீ எழுந்து நிற்குமுன்...
நீ அமர்ந்திருக்கும் இடத்தைக் கவனி

மேடையிலிருப்பவர்களை மட்டுமே உனக்குத் தெரிகிறது
முன் அமர்ந்திருப்பவர்களின்
முதுகுகள் மட்டுமே தெரிகின்றன
பின் அமர்ந்திருப்பவர்களையோ
நீ காண இயலாது
ஓரம்சாரம் நிற்பவர்களையும் நீ காண்பதில்லை
சில வேளை, சிறுசிறு இடைவேளைகளின்போது
இவர்களையும்
உன் அக்கம்பக்கம் அமர்ந்திருப்பவர்களையும்
தலை திருப்பிக்
காண்கிறாய் எனினும்
இதழ்களில் முகிழ்க்கும் புன்னகை சொல்லிவிடவில்லையா,
அவர்களும் உன்னதைப் போன்ற ஓரிடத்தில்தான்
அமர்ந்திருக்கிறார்கள் என்று?
(ஆகா! என்னே சகமனித நேச பாச சல்லாபங்கள்!)

நான் உன்னை இக்கூட்டத்தில் இனம் கண்டு
கைகூப்பி அழைப்பது உனக்குத் தெரியவில்லையா?
கிட்டுவதும் குட்டுவதும் மட்டும்தான் உனக்குத் தெரிகிறதா?

Read more...

நோய்த் தொற்று

என்னையும் மீறி என் குரல் நடுங்கிற்று
”டாக்டர், அவர் ஒரு கவிஞர்!
சிறப்பு அக்கறை எடுத்துக் கவனிக்கவேண்டும் நீங்கள்!”

ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்சர் என வேகமாய் வந்து
படுக்கையில் துவண்டு கிடந்தார் நண்பர்!
முதல் உதவியெல்லாம் முடிந்து
பெரிய டாக்டருக்காய்க் காத்திருந்த இடைவேளையில்
சற்றுத் தெளிந்து கண் விழித்த நண்பர்
சுற்றுமுற்றும் பார்த்து மூக்கைப் பொத்தியமை கண்டு விழித்தோம்.
இடையறா அருவியின் அடித்தளம் போலன்றோ
தூய்மை கனன்றுகொண்டிருந்தது அறை!

பெரிய டாக்டர் வந்து பரிசோதனைகள் முடித்து நிமிர்ந்தார்.
கவலையும் ஆவலும் கேள்விகளுமாய்த்
துடித்துக் கொண்டிருந்த செவிகளை நோக்கி, குனிந்து,
தனது வெண்ணிறக் கையுறையணிந்த கையொன்றால்
அழுக்கேறிய பூணூலைச் சன்னமாய்த் தூக்கிக்காட்டியபடி
”இதனாலும் நோய்த் தொற்று ஆகியிருக்கலாம்” என்றார்

Read more...

Thursday, November 29, 2012

புத்த பூர்ணிமா

கண்முன்னே
இருட்பெருங்கருங் கடலின் ஓயாத பேரொலி,
எங்கும் தன் இருள் பூசி விட்டபின்
அமைதியான வேளை...

வானத்து ஒளியும்
தூரத்து மின்விளக்குகளும் மட்டுமே
ஒளிவீசிக்கொண்டிருந்தன. ஆனால்
ஒளி பற்றிய அக்கறையோ
இருள் பற்றிய கவலையோ சிறிதுமின்றி
அக்கடற்கரைப் பூங்காவின் ஒதுங்கிய ஒரு மூலையில்
அசையாத ஒரு கற்சிலைபோல் அமர்ந்திருந்தான் அவன்

அவன் இதயத்திலிருந்துதான் இப்பிரபஞ்சமே தோன்றி
அவன் கண்ணெதிரே
இத் துயர் உருக்கொண்டு இறைஞ்சுகிறதோ?

அவன்தான் கடவுளா?
அல்லது

இப்பொழுதும், இப்பொழுதின்
சாந்நித்தியமுமா?

திடீரென்று
கண்ணெதிரே தோன்றி நிற்கும்
இவ்வகண்ட பொருள்தான் என்ன?

உதிக்கும் இப் பூர்ணிமை நிலவின்
விந்தை?

அட!
இருள் தன் சுவடற்றுப்
போனவிடம்தான் எங்கே?
போனவிதம்தான் என்ன?

Read more...

கருநீலப் பூ

கரிய நதியொன்று
அகண்ட காவேரியாய்ப் பாய்ந்து
குரூரங்கள் செழித்த இப் பூமியில்-
பிழைக்கத் தெரிந்துகொண்ட மனிதர்களாலானதோ
இவ்வுலகம்?

பட்டினி போடப்பட்ட சிங்கத்துடன்
அடிமை ஒருவனைஅடைத்துக் களிக்கும்
அரங்குக் கலாரசனையின்
அதே வண்ண மாறுபாடுகள்தாமோ
நம் வாழ்வும் கலையும்?

இந்நதிமூலம் தேடிப் போய்த்
தன் கண்ணாறக் கண்டு வந்ததைத்தான்
அவன் உரைத்தான்,
’சகமனிதனைவிட தான் ஒசத்தி
எனும் குறுகிய இடத்திலிருந்து உற்பத்தியாகியதே
அந்தக் கரிய நதி’ என்று!

அப்பாவியாய்க் கண்ணோட்டிக் கிடக்கும் இந்நதியோரம்
நெஞ்சைப் பிழியும் வேதனையே
ஒரு கருநீலப் பூவாய்
தான் பூத்ததன்றி வேறொரு நோக்கமின்றிப்
பூத்து நிற்கிறது, அழகின் ஒரு செயல்பாடாக

Read more...

Wednesday, November 28, 2012

புத்த பூர்ணிமா

ஒரு புல்லின் உதவிகொண்டு அவனும்
ஒற்றை வைக்கோல் கொண்டு அவரும்
ஒரு குண்டூசி (அ) கொண்டையூசிகொண்டு அவளும்
இவ்வுலகை மாற்றிவிட முடியுமென்பதை உணர்ந்த
மகா ஞானிகளாய் மவுனமாய் அமர்ந்திருந்தனர்

திடீரென்று
ஒரு பேரழிவின் எச்சமாய்
தாம் மூவர் மட்டும் உயிர் பிழைத்தது போன்ற
தனிமையில் சிக்கித் துவண்ட
அவர்களை விடுவிக்கவெனவே
வேகமாய் வந்து தோன்றியது
கீழ்வானில் ஒரு முழு நிலவு;
எண்ணங்களற்ற பேரியக்கமொன்றின்
ஒளிப்பருஉரு

Read more...

புத்த பூர்ணிமா

சித்தார்த்தா!

வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு
வெளியே இருளைத்தான் வீசும்.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு
போர்க்குரல் ஒன்றே தெரியும்.
உன் இளவரச வாய்ப்பும் சுகபோகமும்-
விரிந்துகொண்டே போகும் வறுமை, கொடுமைகளை
நிறுத்த அறியாது

உன் ஆருயிரும் இன்பமுமே போன்ற
வீட்டினையும்
ஆன்மிகப் பெருமைகளும் பற்பல பவிஷுகளுமிக்க
உன் நாட்டினையும்
நாளை அதனை ஆளப் போகும்
இளவரசன் நான் எனும் வாய்ப்பினையும்
வெளியே யாருக்குமே தெரியாதபடி
இவ்விரவில் நடந்து முடிந்துவிடும் ஒரு காரியம் போல்
இதய ரகசியமாய்
நீ இப்போதே உணர்ந்து துறந்து
விட்ட பின்னே-

பார் மகனே!
இம் முழுநிலவொளியில்
சாந்தி மிளிரும் இப் பூமியின் பேரெழிலை!

Read more...

Tuesday, November 27, 2012

சுத்தோதனம்

என் குற்றவுணர்வையும் கண்ணீரையும் ஒளித்துக்கொண்டு
இன்முகம் காட்டி நாளும் இன்பக் காட்சிகள் நடித்தேன்
பொல்லாத இவ்வுலகின் புன்முகங்கள் தெரிந்து விடாதபடி
பொத்திப் பொத்தித்தான் வளர்த்தேன் உன்னை

இயற்கையின் அற்புதங்கள் எல்லாமே உன்னை மகிழ்விக்க
யாரோ உனக்குக் காட்டும் கிலுகிலுப்பைதானோ என்றிருந்தது
கைக்குழந்தை உனக்குக் கிலுகிலுப்பை காட்டிக்கொண்டு
சுற்றமும் சூழலும் வந்து அழகழகாய் நடித்தார்கள்

எனது காபந்துகளெல்லாம்
எவ்வளவு நாளுக்குச் செல்லுபடியாகும்?
ஒவ்வொன்றுக்கும் தலையில் இடி விழுந்தாற்போல்
அதிரும் என் துயரும்தான் மடிந்தொழியாதா?

உனது அம்மா-அதுதான் எனது பங்குதாரிணி-இனிய பாதி-
ஒத்துழைக்காததால் நடந்துவிடுகிற
முதல் வாக்குவாதத்தின்போதே நான் அழுதேன் உனக்காக
பீதி உன் மனதில் உள்நுழைந்திருக்குமோ என்று அஞ்சி

உன் புத்துணர்வும் கூர்மையான விழிகளும்
என் கண்ணே, என் ஆருயிரே!
எத்தனை முறை அவை என்னைத் துவம்சித்திருக்கின்றன
என்பதற்குக் கணக்குண்டா?

அப்படி என்னைப் பார்க்காதே குழந்தாய்!
என்னை மன்னித்துவிடு! இப்போது
வேதனையுடன் உன்முன் தலைகவிழ்ந்து நிற்பதைத் தவிர
வேறொன்றும் செய்வதற்கில்லையே என் கடவுளே!

Read more...

மாற்றப்படாத உலகம்

தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கல்யாணமாகி வருடங்கள் சில கழிந்தும்
குழந்தை உருவாகாத்தெண்ணிக் குமைந்த துயர் நடுவே

குற்றவுணர்ச்சியால்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
இந்த உலகைச் சரி செய்வதற்குள்
காத்திருக்கப் பொறுமையின்றி
குழந்தைகளைப் பெற்றுப்
பரிதவிக்க விட்டுவிட்டோமே என்று

துயரம் அகன்று
இன்மை கனன்றுகொண்டிருந்தது அந்த மாலை,
’உங்களுக்காக
இவ்வுலகைச் சரி செய்வதற்காகவே
நான் பிறந்துள்ளேன்’ என்பதுபோல் சிரித்த
ஒரு குழந்தை உதித்ததைப் பார்க்கச்சென்ற இடத்தில்

மீண்டும்
தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கண் முன்னே குழந்தைகள் வளர்ந்து
தங்கள் பெற்றோர்களைப் போலவே
உருமாறிக்கொண்டிருந்த நிதர்சனத்தைக்
கண்ணீர்மல்கக் கண்ணுற்றபடி

Read more...

Monday, November 26, 2012

அம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்

இருள் மெல்லக் கவியத் தொடங்குகையிலும்
அம்மா, உங்களிடம்தான் எத்தனை நிதானம்!
பதற்றமேயில்லாப் பேரமைதியுடன் எழுந்து சென்று
சிம்னி விளக்கையும்
மண்ணெண்ணெய் மணம் வீசும் துண்டுத் துணியையும்
விளக்கைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டபின்
மண்ணெண்ணெய்ப் புட்டியையும்
மெல்லசைவால் சோதித்தபடியே தீப்பெட்டியையும்
சாம்பல் பொடியையும் எடுத்துக்கொண்டு
அம்மா, நீங்கள் தார்சாவில் கால் மடித்து அமர்ந்தபோது
அந்த அதி உன்னதச் செயலால் ஈர்க்கப்பட்டவனாய்
நானும் உங்களோடு அமர்ந்தேன்

விளக்கைத் துடைத்து முடித்து
அதைத் திறந்து எண்ணெயிட்டு
திரியினைத் தொட்டுத்தடவிச் செம்மைப்படுத்தி
சாம்பல் பொடிகொண்டு சிம்னியைத் துலக்கியபின்
உங்கள் தீக்குச்சி உரசலில் நிகழ்ந்த உச்ச அனுபவத்தையும்
மாறாத நிதானத்துடனேயே
நீங்கள் கை கூப்பித் தொழுததையும்
நான் வியந்து போய்ப் பார்த்திருந்தேன்

அதைத் தூக்கிக்கொண்டு எழுந்து
காற்றில் அது நடுங்கி அணைந்து விடாதபடி
உள் வீட்டுக்குள் பக்குவமாய் எடுத்துச செல்ல
நீங்கள் முன் நடக்கையில்
அதே வேகத்துடன் இருள் உங்கள் பின்னாலேயே
பொல்லாத வக்கணைத் திமிருடன் தொடர்கிறது!
உங்கள் முன்னுள்ள இருளும் அதே வேகத்துடன்
அச்சமோ குற்றவுணர்வோ இரக்கமோ
கிஞ்சித்தும் இல்லாத எதிரியின் எகத்தாளத்துடன்
உங்களையும் உங்கள் நடையையும் நையாண்டி செய்தபடியே
கால்களைப் பின்னே பின்னே வைத்து நடந்து
நீங்கள் நின்றதும் சற்றே தள்ளித்
தானும் நிற்கிறது

அம்மா,
அகற்றப்படாத இருளிடையேதான்
நீங்கள் இயற்றிய எளிய விளக்கு அற்புதம்
உங்களைப் போலவே அமைதியுடனும்
அடக்கத்துடனும் தன்னியல்பான பீடுடனும்
எவ்விதத் துக்கமுமின்றி
தன் செயலே தானாகச்
சுடர்ந்து கொண்டிருக்கிறதம்மா இன்றும்
என் இதயத்தில்

Read more...

சொற்களும் நம் பசிகளும்

இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பில்
எவ்வளவு நேரம் பால் சுரக்கும்?
மடிந்து போன பிணத்தின் மவுனம்
எவ்வளவு காலம் வழிகாட்டிக்கொண்டிருக்கும்?

பிணங்களைத் தூக்கிப் புதைப்பதற்கு
யார் சொல்லித் தர வேண்டும்?
பிணத்தைப் பிணமென்று காண்பதற்கு
தேவைப்படுவதுதான் என்ன?

தெரிய வேண்டியவை தெரிகையில்தான்
நடக்க வேண்டியவை நடக்கின்றன.
நடக்க வேண்டியவை நடக்கும் போதுதான்
நம் பசிகள் தணிகின்றன

பசியுள்ள நமக்கு வேண்டியது உணவு.
சொற்களல்ல; சொற்களெனில்
வெற்றாரவார முழக்கங்களாக அன்றி
இருக்க வேண்டும் அவை:
மரணத்தையும் உயிர்ப்பிக்கக்கூடிய
குழந்தைமை வேகம் மற்றும்
நுண்பெருக்கிக் கருவிகளாய்!
அல்லது தரிசனங்களாய்!

Read more...

Sunday, November 25, 2012

தன்னந் தனியே வெகுநேரமாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது...

இந்த நிராதரவையும் அச்சத்தையும்
தோற்றுவித்தது யார்? ஏன்?

போ போ என்று விரட்டுகிறாய் யாசகனை
அல்லது முகம் திருப்பிக் கொள்கிறாய் அவன் ஊனத்திற்கு
அல்லது ஒரு சில்லறை எடுத்து ஈகிறாய்
அல்லது எந்த ஒன்றினாலும் திருப்தியடையாது
மிகப் பெரியதோர் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டதுபோல்
அமைதியின்றிக் காணப்படுகிறாய்

காலங்காலமான
அநீதிகளின் சவுக்கடிகளால் விளைந்த
வறுமையின் மனச்சிதைவும் வக்கிரங்களுமான
மனிதமுகக் கோரத்தின் கைநீளம் கண்டு
உன் படைப்புச் சக்தி
மருண்டு மவுனமாகியதென்ன பரிதாபம்!

தனித்திருந்து உணர்ந்து
தன் புனைவுகளால் வனைந்து வனைந்து
வெளிப்படுத்தியது-தன் எழிலே ஆகிவிட
தானே முகர்ந்து முகர்ந்து களித்ததிலேயும்
பெருகியிருக்க வேண்டாமா அந்தத் தணல்?
புனைவுகளின் திரைமறைவிற்குள் முகம் மூடி
ஒளிந்து மக்கி மடிந்து
அணைந்து போக வேண்டுமோ அந்த நெருப்பு?

முழுக்கக் குழந்தைகளாய் நிறைந்திருக்கும்
பேருந்தொன்று
உன்னைக் கண்டும் நிற்காமல்
கையசைத்துச் செல்கிறதுதான்
எத்தனை பெரிய அவலம்!

Read more...

இதோ இந்த அரிய பழம்

எந்தாயும் வாயடைத்து நிற்க
எந்தை எனக்குக் கொடுத்தது
அதாவது
எப்போதும் என் கையிலிருக்கும் கனிதான்

இது, கைப் பிடியளவு கடல்;
சமுத்திரத்தின் ஒரு துளி;
ஓடும் நதியில்
நக்கும் நாய்க்குக் கிடைத்த
ஒரே பேறு;
கானலெங்கும் மூச்சிரைக்க ஓடி
வேர்த்துக் கசகசக்கும்
உன் உள்ளங் கையிலும்-
கருணை கொண்டு
பிசுபிசுத்து நெளியும் ஓர் ஈரம்;
மின்னற்பொழுதே தூரத்தின்
சிருஷ்டிக் கனல்

நமக்குக் கிட்டாத இக் கனியன்றோ மயில்வாகனனே,
நம்மிடமுள்ள விஷமனைத்திற்கும் காரணம்!
நம்மிடமுள்ள விஷமன்றோ, என் செல்லத் தம்பீ,
இக் கனி நமக்குக் கிட்டாமைக்குக் காரணமும்!

Read more...

Saturday, November 24, 2012

இந்த அழகான பூமியை…

நன்றாக நிறைத்தவாறு
கட்டிவிட்டோம் நாம்
மிகப்பெரியதொரு விபச்சார விடுதியை
அல்லும் பகலும் ஓய்வின்றி
ஆடல் பாடல் சரசம் சல்லாபம் கொண்டாட்டம்
கேளிக்கைகளின் நீச்சல் குளக் கும்மாளம்
ஓர் எளிய மனிதனுக்கும்
அதுவும் வாழ்வின் ஒரு பகுதியானதால்
அதனுள் நிகழும் விழாக்களனைத்துமே
சவச் சடங்குகளாகி விட்டன வெனினும்
அன்பும் ஆனந்தமும் அங்கே
அறவே அகற்றப்பட்டு விட்டனவெனினும்
அவன் அதனுள்ளே நுழைய இயலாத துயரம்

அடிக்கடி அவனுக்குக்
கதவு அடைக்கப்படுவதை எண்ணியோ
அடிக்கடி அவனும்
அக்கதவருகே வந்து நிற்பதை எண்ணியோ
கவலைப்படுவாரில்லை

அப்பெரும் விடுதியின் ஆரோக்யமின்மை குறித்தும்
அது ஏற்படுத்தும் அழிவுகள் குறித்தும்
அதற்குள் நுழையவே விழையாத மனிதனைக் குறித்தும்
சிந்திப்பவரே இல்லை

எனினும்
சூரியனும் நிலவும் பூமியும் காற்றும்
அவ்விடுதியை வெறுத்து ஒதுக்குவதில்லை
எனினும்
அதி சுரணைமிக்க அவற்றின்
பேரொழுங்கு நடவடிக்கை என்று
ஒன்றுண்டெனவே அஞ்சுகிறேன்

Read more...

வரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்

1.
’ஓ, கடவுளே! எத்தனை பிரகாசம் இந்த உலகம்!’
கனகாலம் மருத்துவமனைப் படுக்கையிலிருந்துவிட்டு
வெளியே வந்து
விக்கித்து நின்ற வேளை நான் சொன்னது அது
நண்பர்கள் புன்னகைத்தார்கள்
வீதியில் போவோர் வருவோர் மற்றும்
இப் பூமியெங்கும் உறைவோர்
எவரிடமும் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியாது
வருந்தினேன்

2.
அப்பா,
எதற்கெடுத்தாலும்
’பெரிய இவன் மாதிரி’ பேசுகிறாய் என்று
நீங்கள் காதைத் திருகி வலிக்கும்போதெல்லாம்,
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
’பெரிய இவன்’ ஒருவரையும் நீங்கள்
பார்த்திருக்கவில்லை என்ற உண்மைதான்
என்னை அழவைத்தது

3.
கோயிலைச் சுற்றி உலகமே கூடியிருந்த
ஒரு கொண்டாட்ட தினத்தில்
இரத்தம் சொட்ட வானிலிருந்து
விழுந்தது ஒரு பறவை.
நீதி வெறிகொண்டு ஓடிவந்தவன்
வலி தாங்கியபடி முட்டி நின்றான்
கருவறையில் ஒரு வெற்று நாற்காலியைக் கண்டு
பின்னும் தணியாத-வேக வெறியில்
அவன் அங்குபோய் அமர்ந்தான்
வேறு ஒரு வழியும் காணாததால்
நான் ஒருவனே வழி, ஒரே வழி என்றபடி
எவர் ஒருவராலும் நிரம்பாதபடி
வெறுமை தாங்கி
ஒவ்வொருவருக்குமாய்க் காத்திருந்தது
அந்த நாற்காலி

4.
எந்த ஒரு தீவிரம்
விளையாட மனமற்றவனாய்
அவனை அடித்து நிறுத்தியது?
இன்னதென்றறியாத வியாகூலத்தால்
தனித்துப் போய்
பாய் விரிக்காத வெறுந்தரையில்
கண்ணிமைக்காது படுத்திருந்தான்,
(அன்று பள்ளிக்கூடம் இல்லையோ,
அவன்தான் போகவில்லையோ)
வரிசை மாறாமல் ஊர்ந்துசெல்லும்
எறும்புகளைப் பார்த்தபடி
தன் கண்ணீரை வெளிக்காட்டாது
சிறு உணவுத் துண்டுகளையும் இனிப்பையும்
அவற்றிற்கு வழங்கி
அவை மொய்த்துத் தின்பதையும் இழுத்தபடி செல்வதையும்
பார்த்தபடி இருந்தான்
மகிழ்ச்சியோ துக்கமோ அற்ற
ஒரு விளையாட்டாகத்தானிருந்தது அதுவும்
பல காலம் உடன் வாழ்ந்து
அவர்களை நன்கறிந்தவன்போல்
பெருமூச்செறிந்தான்
ஒரு பிரமாண்ட உருவத்தோடு அங்கிருந்தபடி
அவர்களோடு அவன் விளையாடியதையும்
இமைக்காமல் அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்ததையும்
அவர்கள் அறியாதவரோ?
காலம்காலமாய் ஒரு மாற்றமுமில்லாமல்
ஒருவர் பின்புறத்தை ஒருவர் முகர்ந்தபடி
வரிசை குலையாமல்
அவர்கள் சென்றுகொண்டிருப்பதைக் காணக்
கண்ணீர் பொங்கிக் கொண்டுவந்தது அவனுக்கு

Read more...

Friday, November 23, 2012

அறிமுகம்

விழிகள் விரிய இப் புவியைக் கண்ட
அந்தக் குழந்தைக்கு
ஓர் அய்யம் தோன்றியது:
தன் கண்வழி தான் காணும் காட்சிகள்தாம்
பிற மனிதர்களாலும் காணப்படுகிறதா?
இத் தேடல்தானோ வாசிப்புலகிற்குள்
ஒரு நீண்டபயணம் போகத் தூண்டியது?
அங்கே அது கண்ட ஓர் அருமைதானோ
அதனைத் தற்கொலையினின்றும் காத்தது?
நிகழ்வொன்றைக் கண்ட இருவர் கண்கள்
ஒருவரையொருவர் பார்த்தும் புன்னகைத்தும் கொண்டதில்
அதன் தேடல் நின்றது

கலைகளால் அது ஆகர்ஸிக்கப்பட்டது
முடிவற்ற ஒரு கடற்கரை நடையில் ஒரு நாள்
கடல் தன் அழகுப் பொருள்கள் சிலவற்றை மாதிரியாய்
அதன் கால்களில் இடறும்படியும்
கண்களில் படும்படியும் அதனிடம் வீசியது
தான் ஒருக்காலும் புனைவுகளில் ஈடுபடும்
கலைஞனாகப் போவதில்லை எனும் ஒரு தீர்மானம்
தலைதாழ்த்தி மண்டியிட்டு அங்கே நிறைவேறியது

உன்னதக் கலைஞர்களை அது இனம் கண்டது
ஞானிகளுக்கு அடுத்தபடியாக
அவர்கள்மீதே அது ஆர்வம் கொண்டது
அவர்களது அருமை அதன் துக்கமாயிற்று
அன்னவர் நீங்கலான எண்ணற்ற கலைஞர்களின்
இரைச்சல்களுக்கு நடுவே அது வாழ்ந்தது

அது மனிதர்களோடு உரையாட விரும்பியது
உரையாடியது
கவிதை என்றும் கவிஞன் என்றும் அழைக்கப்பட்டது
கவிஞன் ஒரு நாளும் கலைஞன் அல்லன் என்பதை
அது உரத்துக் கூறியது. எச்சரித்தது.

குழந்தைமையும் மேதைமையும்
இணைபிரியா இரட்டையர்கள் எனக் கண்டது
மரணத்திடமிருந்து மவுனத்தையும்
வாழ்விடமிருந்து சிறு குரலையும் பெற்று
தன் சுரணையுணர்வையும் பரவசப் பாட்டையும்
மொழிவழி பொழிந்தது
பேரறிவையும் பெருங்கருணையையும்
ஒரு பார்வையாய் ஈந்தது
ஈடு இணையற்றதோர் தொழிலில்
ஈடுபடுவதுபோல் செயல்பட்டது
அதன் செயல் கவிதையாகவும்
செயலின்மையே
மாபெரும் கலையான வாழ்வாகவும்
சுடர்ந்தது

அது தன் இறுதியாகக் கூறியது:

கடவுளுக்கு எதிரான முயற்சியில்
ஒருகணமும் சோர்வுகொள்ளாது,
வரும் குழந்தைகளுக்கெல்லாம் பூணூலை
மாட்டிக்கொண்டேயிருக்கிற மனிதன்,
காடுகள் அழிந்துவிட்டன என்றும்
மனித உறவுகள் நசிந்துவிட்டன என்றும்
சூழல் மாசுபட்டு
போரும் வறுமையும் பெருகிவிட்டன என்றும்
கவலைப்படுவதில்லை உண்மையில்

Read more...

மேடை

திடீரென்று துண்டிக்கப்பட்டு
அமர்ந்துவிட்டது அவனது பேச்சு
(எத்தனை வருத்தத்திற்குரியது!)

அம்மேடை கவுரவத்தின் பீடமாய்க் கட்டப்பட்டிருக்கையில்
மேடை சுற்றிகளும்,
புகழையும் அதிகாரத்தையும்
நிராசையுடன் ஏறிட்டுப் பார்க்கும் வறிய முகங்களும்,
அந்தரங்கமான ஓர் உரையாடலுக்குச்
செவி பழகியிராத பரிதாப முகங்களும்,
எக்குழுவையும் அனுசரிக்காத உண்மைநிலையை
வெறுப்புடனும் பதற்றத்துடனும் பார்க்கும்
அம்மேடை மனிதர்களுமே குழுமி நிறைந்து...
அசவுகரியமான இரைச்சலாகி இருப்பதுதானே விதி
(பின்னர் பேசிய அம்மேடை மனிதர்களும்
அவன் பேச்சினைக் குதறியும்
அவன் மவுனத்தை நகையாடியும்
கெக்கலிப்பதுதானே விதி)

ஆழ்ந்த அக்கறை கவனமெனும் அன்பு
தேவைப்படுகிற
ஓர் உரையாடலை மட்டுமே விழையும் நாம்,
இசைவு தெரிவிக்குமுன்
அல்லது பேசத் தொடங்குமுன்னாவது
இம் மேடை பற்றி அறிந்திருக்க வேண்டியதுதானே
முக்கியமானது?

Read more...

Thursday, November 22, 2012

மேடை

காரில் சென்றனன் பேச்சாளன்
எழுந்து நின்று பின்புறம் தட்டிக்
கலைந்து சென்றது பொதுஜனம்
உடன் கிளம்பத் தோது என்று
ஓரமாய் அமர்ந்தவரும்,
மிதிவண்டியை நிறுத்திவிட்டு
புழுதி அப்பிக் கொள்ளுமென்று
ஒதுக்கமாய்
இடுப்பில் கையூன்றி, பின்
சிந்தனையாய் முகம் வருடி
மிகக் கவனம் – கைகட்டி,
’பார்க்கலாம்!’ என்றாற்போல்
கால் மாற்றி மாற்றி, இவர்தான்
அனுமதிக்கிறவர் போன்று
இடையிடையே கைக்
கடிகாரம் பார்த்து
நின்றுகொண்டே கேட்ட
ஒயிட்காலர்களும்
வேகமாய்ப் போய்விட்டார்கள்
பால்கனிகள் மேல் அமர்ந்து
கீழ் நோக்கி... செவி சாய்த்தவரும்
மாயமாய்ப் போனார்கள்
வீட்டினுள் இருந்துகொண்டே
எட்டிக் கேட்டவர்கள்
ஜன்னலை அடைத்துக்கொண்டு
பத்திரமாய்ப் படுத்துக்கொண்டார்
காடா விளக்கேற்றி
கடலை விற்றவனும்
கூடை தூக்கித் தேனீயாய்
அலைந்து விற்றவனும்
அப்போதே போய்விட்டார்கள்
ஒலிபெருக்கிக்காரனும் விளக்கணைத்துக்
கழட்டிக் கொண்டுபோய்விட...
அப்பாடா...! எனப்
பொட்டலக் காகிதங்கள் மட்டுமே
உருண்டு உருண்டு
சிரிக்கும் மைதானம் பார்த்து
நெடுமூச்செறிந்து
நிமிர்ந்தது மேடை நிம்மதியாய்!
வீட்டுத் துயரங்கள் தாளாத ஓர் ஏழை
’இன்றைக்கு இங்கேயா?’ என்ற சலிப்புடன்
முண்டாசுச் சுருள் அவிழ்த்து
மேடைப் பலகைமேல்
தூசு தட்டி விரித்துப் படுத்தான்
மேடை மீண்டும் சஞ்சலமாக

Read more...

திருநீறு

உன் நெற்றித திருநீறு, என் நெஞ்சில்
ஒரு புத்துணர்வுப் பொழுதின்
பசுமையைத் தோற்றுவிக்கிறதுதான் என்ன!
அது உன் முகமலருடன் இணைந்து
விண் தவழும் ஒரு வெண்மேகமாய் உயிர்க்கிறதெப்படி?

மங்களகரமானதெனவும்
’நீறில்லா நெற்ற பாழ்’ எனவும்
குறிப்பிட்டதொரு மதத்தின் அடையாளமாகவும்

முகிழ்க்கும் எண்ணங்களின் இயக்கம்
தாம் உதறித் குதறியவை எவையெனும் தன்னறிவற்று
உலகை இரத்தக் களறியாக்கிக் கொண்டிருப்பதும்தான் எப்படி?

Read more...

Wednesday, November 21, 2012

மேடை

இங்கிருந்து
எங்ஙனம் உறவுகொள்வது
நான் உங்கள் எல்லோரிடமும்?
எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்,
நம்மை நாம் முழுவதுமாய்?
என் இதயம் உடைந்ததே
சுக்குசுக்கலாய்
பல்லாயிரம் துண்டுகளாய்க் காணும் நீங்களாய்

எனது அருமை மக்களே!
இப்போது நான் உங்களுக்குச் சொல்லவும்
இதுதான் இருக்கிறது என்னிடம்:
அதாவது, ஒரு பரிபூரண மவுனத்தின் முன்
உங்களை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா,
காலமற்ற ஒரு பரிபூரண மவுனத்தின்முன்

Read more...

யாகம்

நம் உயிர் காக்கும் நெருப்பை
உலர்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு தொடங்கி
உலர்ந்த மரக்கட்டைகளாலேயே பேணிக்கொண்டிருந்தோம்
இரவு தொடங்கிவிட்ட வனத்தில்

உலர்கட்டைகளுக்குப் பதிலாய்
ஆடு மாடு குதிரைகளில் தொடங்கி
மெல்ல மெல்ல மனிதர்களையே
ஆகுதியாக்கத் தொடங்கிவிட்டது எந்தப் பிசாசு?
ஏன்? எப்படி? எதற்காக? எப்போது?

இன்று மனிதர்கள் தங்களைத் தாங்களே
அழகாய் மண்ணெண்ணெயில் முக்கிப் பொரித்துக்கொண்டும்
கூட்டமாய்ச் சேர்ந்து கூட்டமாய்ப் பிறரைப் பொரித்தும்
தங்கள் ஆருயிர் பேணிக்கொள்ளும் அழகைத்தான்
நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இல்லையா?

Read more...

Tuesday, November 20, 2012

உறுதிமொழி

கருவறை பிதுங்கி வெளிவந்தபோதோ
தாமதமாய் எழுந்த ஒரு காலையின்போதோ
கண்டேன் நான்
என் கண்களை அகல விரித்த அந்த ஒளியை!
வீட்டின் சிறுஇருளுக்குள் அடைபட்டிருந்த என்னைச்
சாளரங்கள் காட்டி, பறவை ஒலி காட்டி
வெளியே அழைத்துவந்த அதே ஒளி!
அன்று அதை உணர்ந்தேன்:
என் கை பற்றியிருக்கும் கட்புலனாகாத வாள் ஒன்றின்
பளபளப்புத்தான் அந்த ஒளி என்பதை!

ஒரு சிறு நடுக்கமுமின்றி
இப் போர் வாளினைப் பற்றி இருக்கும்
எனது இக் கைவலிமை!
எங்கிருந்து வந்த்தென வியக்கிறேன்
எனது இக்கோலம் கண்டோ
’தந்தை!’ என்றபடி
உறுதிமொழிக் குழந்தைகள் ஓடிவந்து
என் கால்களைக் கட்டிக்கொள்கின்றன?

இனி, இந்த உலகு குருடாகுமாறு
ஒருக்காலும் நான் இந்த வாளை
உறையிலிட மாட்டேன்
அதிகாரம் தழைத்து
மனிதகுலம் வாடும்படிக்கு
இனி ஒருக்காலும் நான் இந்த வாளை
உறையிலிட மாட்டேன்
ஆட்கொல்லி விழிகள்
இவ்வொளிப் பெருக்கிலே மிரண்டோட
ஏந்திநிற்பேன் எப்போதும் இவ்வாளினை நான்
பேதமிலா மக்கள் கூடிக்கூடிக்
குளிர் காய்ந்து உளங் களிப்பர்
வயது முதிர்ந்தோர்க்கும் குழந்தைகட்கும்
வெந்நீர் ஆக்கிக் கொடுப்போம்
இன்பத்தில் குளியல் முடித்து
முற்றங்களில் முளைத்தும்
மொட்டைமாடிகளில் மலர்ந்தும்
கூந்தலுலர்த்துவர் எம் மக்கள்
புல்லில் சாய்ந்து கிடந்தபடி
இவ்வொளி வெம்மையின் மின்சாரம் பெற்றல்லவா
உயிர் நிமிர்ந்து நிற்கிறது!
வாழ்வின் இவ்வின்பங்களெல்லாம்
இவ்வாளினை நான் உறையிலிட்டுவிட்டால்
என்ன ஆகும்?

ஓ... உன் சந்தேகம் புரிகிறது.
ஈடு இணையற்றுப் பற்றிநிற்கும் இக்கைக்கு
இதை வீசும் வலு இருக்காதா?
இம்மியளவு அசைவையும் நிகழ்த்தத் துடிக்காத
திடசித்தமும் வந்த்தெப்படி இக் கைக்கு?

Read more...

தெய்வீகம்

அதென்ன பெரிய - கோயில் திருவிழா?
அதென்ன ஆண்டுக்கு ஒருமுறை
ஒவ்வொருவர் வாசலுக்கும் – ஜாதி பார்த்தும் மதம் பார்த்தும்தான்
கொட்டுமேளத்தோடு வரும் கோயில் சப்பரம்?
அதென்ன பெரிய – வாசனாதி – பூஜைப் பொருட்கள்
பழம் – தேங்காய் உடைப்பு – பிரசாதம் –
புத்தாடையுடன் கண்விழிக்கக் காத்திருப்பு?
நம் வாழ்வும் பிரச்னைகளும்
வழமை போலவேதானே தொடர்கின்றன?

இதோ பார், ஒவ்வொரு நாளும்
வாழ்வெனும் கோயிலின் பெரிய திருவிழா!
ஒரு சிறு வெண்கல மணியோசையுடன்
ஒவ்வொரு வாசலுக்கும் வரும் கோயில் சப்பரம்!
சிறப்புத் தேர்வான ஆடைகள் வேண்டாம்
உங்கள் புன்னகை முகங்களே போதுமன்றோ!
வாசனைப் பொருட்களோ தேங்காய் பழங்களோ
அல்ல வேண்டுவன
நீங்கள் கவனமாய்க் கூட்டிவைத்திருக்கும்
கழிவுகளும் குப்பைகளுமே வேண்டுவன
மறக்காமல் நாம் திரும்பப்பெரும் வெற்றுக்கூடைகளே
நமக்குக் கிடைக்கும் பிரசாதமன்றோ!

Read more...

Monday, November 19, 2012

சாத்தானின் சுவடுகள்

நல்ல மனிதர்களுக்கு
நிறுவனம் இரண்டாம் தேவை
மற்ற மனிதர்களுக்கோ
அது முதல் தேவை
அலைகடல், பெருமழை மற்றும்
கவியுளத்திற்கோ இவ் விசாரமேயில்லை

முகிழ்க்கும் என் எண்ணங்களை அவதானித்தபடி
இதந்தர அசையும் மரச்செறிவையும் மனசை
அமைதியிழக்கச் செய்யும் குயில் கூவல்களையும் கேட்டபடி
பெரிய மனிதர் ஒருவரின் வரவேற்பறையில் காத்திருந்தேன்

புகழும் செல்வாக்கும் அதிகாரமும் உள்ள ஒருவரிடம்
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
அவர் உண்மையின் பாதையைச் சுட்டும் மொழிகளை
சுய மையமற்ற தகிப்போடுதான் சொல்கிறாரா?
இல்லை, சும்மா அறிந்து வைத்துக்கொண்டு
உலகை ஏமாற்றுகிறாரா? எனில் ஏன் அப்படி?

நல்ல மனிதர்களின் ஞான மொழிகள்
மற்ற மனிதர்களின் பேராசைக் கைகளில்
சாத்தான் ஓதும் வேதங்களாகின்றன
மனம் நொந்த அச்சொற்களோ நன்றியுடன்
அசல் மனிதர்களை நோக்கித் திரும்பி
அக்கறையுடன் போதிக்கின்றன
”நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்,
நீ பேசாத சொற்களைப் பேசு!” என்று
சாத்தான்களின் வேலை எப்போதுமே
காலத்தை அபகரித்துத் தன்னாட்சி செய்வதுதான்.
காலச்சுவடோ, சாத்தான்களின் காமச் சுவடோ...
காலத்தின் வெற்றிக் கள்ளச் சிரிப்பே தொடர்ந்து ஒலிக்கிறது
அலைகடலோ பெருமழையோ கவி உளமோதான்
அழிக்கிறது காலச்சுவடுகளை!
ஏமாற்றமும் தெளிந்த நல்லறிவும் கனக்க
அந்த வரவேற்பறையை விட்டு எழுந்து சென்றேன்.
கடவுளுக்குச் சற்றும் குறையாத விழிப்புடன்
சாத்தான் ஒன்றின் காட்சி–ஒலிப்-பதிவுக் கருவியும் எழுந்து
என்னைக் கண்காணித்தபடியே தொடர்கிறது,
ஏதாவது ஒரு மல உணவு தனக்குக் கிடைக்காதா என்று

அதுவும்தான் எத்தனை அழகு!
எவ்வாறு நாம் அவனை வெறுக்க முடியும்?
நன்மையை நோக்கியே மிக அழுத்தமாய்
நம்மை விழிப்புடன் நடக்க நிர்ப்பந்திக்கும்
அவனும் நம்முடனேதானே வாழ்கிறான்!

Read more...

வீழ்த்தப்பட்டு...

...வெட்டுண்டதுபோல்
கட்டிலில் கிடக்கும் நோயாளி
எழமுடியாமல் எழுந்து நடக்கமுடியாமல் நடந்து
அவனை நெருங்குவதற்குத்தான்
எத்தனை பாடு!

உயிர் தீண்டி உலுக்கும்
அவனது பலவீனமான குரலின் தீவிரமான
அந்தக் கேள்விகளைக் கேட்ட பின்னே,
இரண்டு இட்லிகளாக மாற முடியாததும்
மருந்தாக மாற முடியாததும்
அவன் நிமிர்ந்து நிற்க
ஊட்டமளிக்க முடியாததுமான ஓர் ஓவியத்தை
இனியும் ஒருவனால் எப்படி வரைந்துகொண்டிருக்க இயலும்?
சரி, இந்த நினைவு இருக்கும்வரை ஒருவன்
எப்படி தூரிகையைத்தான் தூக்க முடியும்?
மறதி மூடிய வாழ்விலிருந்து
ஆர்வத்தினாலும் தியானத்தினாலும் உந்துதல் பெற்ற மனம்
வரையும் ஓவியங்களின் உள்ளுறைவான குறிக்கோளும்
வேறென்னவாக இருக்க முடியம்?

Read more...

Sunday, November 18, 2012

அய்யர் சாமி

எளிதில் பெயர்த்தெடுக்க இயலாதபடி
கான்க்ரீட் முளையிட்டுப் பதித்த கனஇயந்திரமோ என
அள்ளி முடித்த குடுமியும், மேலாடை கழற்றிப்
பூணூல் காட்டும் மேனியுமாய்
இன்னும்
அக்னி மூட்டி அமர்ந்திருப்பதேனோ
அய்யர் சாமி?

அரணிக் கட்டைகள் தூண்டி
அக்னியை நன்றாய் வளர்த்தபின்னே
ஆகுதிப் பொட்டலத்தை நிதானமாய்ப் பிரிக்கின்றீர்,
வாழ்வை எமக்கு வழங்கும் மேதமையைத்
தாமே கொண்டவர்போல்.
அது உண்மைதானோ, அய்யர் சாமி?

மெதுவாய்
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குதிரைகளைக் கடித்து
மனிதரையும் கடித்த அந்த அக்னி மீது
எந்தத் தேவர்களை மகிழ்விக்க
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
நெய் வார்த்து வருகின்றீர், அய்யர் சாமி?

நீரில் முழுக்காடி, முளைவிட்டு,
வான் காணத் துடித்து நிற்கும்
பச்சைப் பயிர்விதைகள்
மண் தொடுமுன்னே
கருகிச் சாம்பலாகிக்
கரும்புகையாய் வானில் அழவோ
இப்போதும் நெய் வார்க்கின்றீர்
என் உயிர் அய்யர் சாமி?

பேராசையின் அருவருப்பாய்
நெளியும் தீநாளங்களின் ஒளியில்
குரூரமாய்த் தன் முகம் கனல
திடீரென்று
தன் ராட்சசக் கைவிரல்களுக்கிடையில்
கைம்பெண் உடல்கள், குடிசைகள்
புழுவாய்த் திமிறித் துடித்துக்கொண்டிருக்க
அள்ளி அள்ளி அவர்களை உடன்கட்டையில் போட்டபடி
எத் தர்மம் காப்பதற்கோ நெய் வார்க்கின்றீர்
என் உயிர் அய்யர் சாமியே?


யாகத்தை விமர்சித்தவர்களும்
தாமரை மலரை ஒரு கையிலும்
பிட்சா பாத்திரத்தை மறுகையிலுமாய்ப் பிடித்தபடி
அமைதியாய் நடந்து கொண்டிருந்தவர்களுமான
புத்தர்களைப் பிடித்து அதிலே போட்டது மட்டுமின்றி
மலர்வதற்கு முன்னான
தாமரை மொட்டுக்களையெல்லாம்
முன் ஜாக்கிரதையாய்ப் பறித்துக் கொண்டுவந்து
அவற்றை அவசர அவசரமாய் அக்னியிலே கொட்டி
இன்று இவ்வுலகு உய்யவோ
நெய் வார்க்கின்றீர், என் உயிர் அய்யர் சாமி?

விவேகம் பொருந்திய
மின் விசிறிகள் நிறுத்தப்பட்டிருப்பதும்
கண்மூடித்தனமான வெக்கை
நம்மைத் தீண்டுவதும்
விழி கரிக்கும் புகைமூட்டம்
இம்மண்டப வெளியெங்கும் பரவுவதுமே
நவிலவில்லையா, அய்யர் சாமி?

Read more...

கவிப்பாடு

வெறும் புலம்பல்கள் என் நான் சீறுகையில்
நேர்மையும் உக்கிரமுமான அப் புலம்பல்கள்
செவிகள் திருப்பும் இல்லையா
எனத் தாழ்மைப் பதிலளிக்கிறாய்

இரத்தத்தை மசியாக்கும் சக்திவிரயங்கள் என
அலட்சியம் கனல்கையில்
இரத்தம் கொடுக்க விழையும்
கருணை இல்லையா என இறைஞ்சுகிறாய்

நீ காண்பதெல்லாம் உன் மூஞ்சியைத் தானன்றி
உண்மையையல்ல எனச் சுட்டுவிரல் நீட்டுகையில்
நானும் என் மூஞ்சியுமான இவ்வுலகமும் ஓர் உண்மைதானே
எனக் கெஞ்சுகிறாய்

சரி. பிழைத்துப் போ.
ஆனாலும் எக் கவிதைகள் உனக்குக்
கவி யெனும் மகுடத்தைச் சூட்டுகிறதென யோசி
அங்கங்கே உன் கவிதைகளில்
உன்னை மீறி ஒலிக்கும் உன் அதிகாரக்குரல்
உன்னை மீறி ஓய்ந்து விடுவதைக் கவனி
இக் கவனப்பார்வை ஒன்றே மீட்குமன்றோ உன்னை!

Read more...

Saturday, November 17, 2012

விசித்திரமானது நம் உறவும் வாழ்வும்!

போர்வெறியுடன் வட்ட வியூகமாய்ச்
சூழ்ந்து நிற்கும் இந்த நாசகார உலகிலிருந்து
தம் நல்லுயிரைக் காத்துக்கொள்ளும்
கடுமையான போரிலிருக்கிற-
முதுகோடு முதுகாய் ஒட்டிப் பிறந்து வாழும்
இரட்டையர் நாம்

விசித்திரமானது நம் உறவும் வாழ்வும்!

என் முன்னால்அரைவட்ட வியூகத்தில் நின்றுகொண்டு
என்னை அழிக்கத் தாக்கிக்கொண்டிருக்கும்
உன் ஆதரவுச் சக்திகளை
நான் சுட்டுத் தள்ளி அழிக்கிறேன்
அதேபோல்
நீ சுட்டுத் தள்ளி அழிக்கிறாய்
உன் முன்னால் வியூகமிட்டு
உன்னை அழிக்கத் தாக்கிக்கொண்டிருக்கும்
என் ஆதரவுச் சக்திகளை

Read more...

நவராத்திர கொலு

இந்த வருஷக் கொலுவில் – அசத்துவதற்காக
வாங்க வேண்டிய புது பொம்மை குறித்து
யோசித்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா

அவன் அஞ்சினான் அவனையும் ஒரு பொம்மையாக
அதில் அமர்த்திவிடுவாளோ என்று

கொலு அவளுக்கு அழகு
அதைக் காண்பதும் காண்பிப்பதுமான மகிழ்ச்சியே
அவளது கொண்டாட்டம்
அப்பொம்மைகளை வணங்கி
பாடி துதித்து உண்டு உபசரித்து களிப்பதே
புண்ணியம் தரும் நற்செயல், வழிபாடு
புத்தாடை உடுத்து நல்லநாள் வழக்கமென்று
அவள் அவன் காலில் விழுந்து அவனை வணங்குகையில்
அவன் அச்சம் கூடிற்று

அந்த நவராத்திரி இரவுகளில்
கொலுவும் பூஜையும்
விருந்தினர்களும் குழந்தைகளுமாய்
விழாக்கோலத்தில்
வீடு கலகலவென்றிருப்பது யாருக்காவது கசக்குமோ?

இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
நீங்கள் ஒரு பக்கத்தில் பேசாமல் அமைதியாய்
உட்கார்ந்திருந்தால் போதும் என்றாள் அவள்
அவன் அவளிடம் தோற்று
மடிந்துவிட்டவனே போலானான்

உதட்டில் புத்தரின் புன்னகையையும்
உள்ளே கிறிஸ்துவினது போன்ற துக்கத்தையும்
வைத்துக்கொண்டோ அவன் அமர்ந்திருந்தான்
பொம்மையாகிவிட முடியாக் கனவினால்?

Read more...

Friday, November 16, 2012

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

புரிபடாத பிணியொன்றால்
நலிந்து துவண்டிருந்த என் குழந்தையை
என் செல்லத்தை –
யாரோ உற்றறிந்து குணமாக்கவல்ல
மருத்துவன் மருத்துவன் எனச்
சளைக்காமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்
ஊர் ஊராய், தேசம் தேசமாய், காலம் காலமாய்

சற்றே இறக்கிவைத்து
மூச்சு வாங்கி நின்றதோர்
பூந்தோட்டத்தின் குளிர்நிழலில்...
சோர்வுற்ற என் துளிரின் கண்மலர்த் திறப்பு. ஆ!
வெடுக்கென்று துடித்து மடிந்துவிட்டவளே போன்று
அவளை மயங்கிவிழச் செய்த காட்சி என்னவோ? ஏன்?
கழுகின் கொதிக்கும் பாதநகங்களோ எனக்
கூடையுடன் மலர் கிள்ளும் ஒரு பூசாரியின் கைவிரல்கள்!

Read more...

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

வழக்கமான மொட்டைமாடியில்
மாலை நான் வந்தமர்ந்தவுடனே
ஏறிட்ட என் கண்களில் – சில நாட்களாய்
அகலாது பட்டுக்கொண்டே இருந்தது
அந்தக் காட்சி:
மலர்ச்செண்டை நீட்டும் ஒரு காதல் கரம்போல்
வான் நோக்கி நீண்ட ஒரு தனிப் பூங்கிளை...

மனிதர்களிடமிருந்து நாம் கற்றறிந்ததைத்தானோ
இங்கே இப்பேரியற்கையிடமும் காண்கிறோம்?
இல்லை, இத் தரிசனத்திலிருந்துதான்
மனிதர்கள் கற்றுக்கொண்டனரோ
ஒரு காதல் வெளிப்பாட்டை?

பூ அலங்காரங்கள், பஷ்பாஞ்சலிகள்
பூ வைத்தல் பூ கொடுத்தல் என்று
பூக்களோடுதான் தொடர்கிறது நமது பண்பாடெனினும்
காதல்தான் கடுகளவும் இங்கே
காணமுடியாத்தென்ன? எப்படி?

ஆசையுடன் கொய்து
தன் தலையில் சூடும் ஓர் உயிரை
தமக்குள் பரிமாறிக்கொள்ளும் இரு உயிர்களை
தன் மேஜையை அலங்கரிக்கும் ஒரு குடும்பத்தை
பூக்கோலத் திருவிழாவாய்க் கொண்டாடும் ஒரு ஜனவெள்ளத்தை
நாம் புரிந்துகொள்கிறோம்

காலையில் மலரும் ஒவ்வொரு மலரும்
கூறுகின்றனவே கடவுளின் செய்தியை! காதலை!

எந்த எண்ணங்களால் மலர்ந்தது இம்மலர்?
எந்த நம்பிக்கைகளால்?
எந்தப் பண்பாடு உருவாக்கிற்று இம்மலரை?

பூத்த சிறுபொழுது நேரத்திற்குள்
இளம் விதவைகளைப் போலும்
ஏழைகளைப் போலும்
தாழ்த்தப்பட்டவர்களைப் போலும்
பொட்டுக் கட்டப்பட்ட தேவரடியார்களைப் போலும்
உயிரற்ற பிரதிமைகள் மீது
சாற்றப்படவும் வீசி எறியப்படவும் –

அஞ்ஞானத்தின் குரூரமும் குருட்டுத்தனமுமான விரல்கள்
அருவருக்கத்தக்க கூர்மையுடனும் வேகத்துடனும்
திருகித் திருகிக் கொய்து-
துவளத் துவளச் சேகரிக்கப்பட்ட காட்சி கண்டு

அந்த அதிகாலைச் சூரியனும் வானும்
அமைதியிழப்பதனைக் கண்டோமா நாமும்?

Read more...

Thursday, November 15, 2012

நான் யாரா?

சொல்கிறேன் கேள்
நானே எல்லா இடங்களுக்கும் வந்து நிற்க
இயலாதென்பதற்காவே
ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணையும்
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆணையும்
என் பிரதிநிதியாய் அனுப்பியுள்ளேன்

ஆனால்
ஈருடல் இணைவில்
பேரின்பம் காணுதற்கு வேண்டிய
அந்த அபாரமான சுரணையும் எழுச்சியும்
உங்களுக்கு இருக்கிறதா என்பதில்
எனக்கு அய்யம் வந்துவிட்டது
காரணம்:
வெளிர் நிறம் முன்
தன் கறுப்பு நிறம் அசுத்தம் என்றும்
அவர் மூத்திரமும் பன்னீர் என்றும்
எளிதில் தீராதநோயினால்
எப்போதுமிருமிக் கொண்டேயிருக்கிறாய் நீ

எளியதோர் தேநீர் விருந்தொன்றில்
எண்ணெய் படிந்த காரப் பொட்டலத் தாளை
செத்த எலியின் வாலைப் பிடித்துத் தூக்குவதுபோல்
சொல்லொணா அருவருப்பை
முகத்திலே இயற்றிக்கொண்டு
அனைவரும் பார்க்க குப்பைக்கூடை நோக்கி
நீ நடந்த நடையழகையும்;
முன்னாள் அக்ரஹாரத்திற்குள்ளும்
இன்னாள் அக்ரஹாரத்திற்குள்ளும்
எப்போதும் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும்
உன் முகவழகையும்;
பாதையிலுள்ள கல்லெடுத்து
ஓரமாய்ப் போடக் குனிவதும்
படுக்கையாகிவிட்ட நோயாளிக்குக்
கழிவு போக்கிச் சுத்தம் செய்ய உதவுவதும்
அடுக்காது நம் ஜாதிக்கு என
நீ உள்விறைப்பதும்; கண்டு
உண்மையிலேயே எனக்கு அய்யம் வந்து விட்டது,
நீங்கள் இருவருமே ஒழுங்காகக்
குண்டி கழுவுவீர்களா என்று
எனக்கு அய்யமாகவே உள்ளது

Read more...

மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்

வாழ்வு, எங்கும் வியாபித்துள்ளதின் தரிசனமோ
மெய்மையின் தீண்டல்பட்டு
உள்-வெளி-எங்கும் மலர்ந்துள்ள இக்கோடி மலர்கள்?
உயிரற்ற பிரதிமைகளுக்காக வேண்டி
திருகித் திருகிக் கொய்து
துவளத் துவளச் சேகரிக்கப்படாத மலர்கள்!
(உயிரற்ற அப்பிரதிமைகளை நாம் உருவாக்கியது ஏன்? எதற்காக?)

முரண்கொண்ட பிரதிமைகளின் அழியாட்டம்!
எல்லா மலர்களையும் பிய்த்தெறிந்து
காலடியில் போட்டுச் சவட்டிச் செல்கின்றன
இன்றுவரை போர்வெறியின் குரோதம் தீராத
காரணமறியாத
பூர்வகுடிப் பிரதிமைகள்!
நம் அகங்காரமே தாமாய்க் கோயில் கொண்டமர்ந்து
ஆணையிட்டுவிட்டுக் கொக்கரிக்கின்றன
தம் ஆட்சி அதிகாரத்திற்குத் தடை நிகழ்த்தக்கூடும்
மலர்கள் அனைத்தும் தம் காலடியில் சமர்ப்பிக்கப்பட!

மலர்கள் ஒருபோதும் பிரதிமைகளைச் சாடி அறைவதில்லை;
மலர்ந்து மலர்ந்து மடிகின்றன அவை,
குரோதமின்றி வெறுப்பின்றி
வாழ்வின் ரகசியத்தை, மெய்ம்மையை, இறைமையை
நம் வாழ்வாலே பேசியபடி

Read more...

Wednesday, November 14, 2012

அங்குலப் புழுவும் உப்புப் பொம்மையும்

முன்னொரு காலத்தில்
தன் முழு உடல் கொண்டு
அகப்பட்ட பொருட்களையெல்லாம்
சதா அளந்துகொண்டிருப்பதிலேயே
உற்சாகம் கொண்டு திரிந்து, பின்
இப்பூமியிலுள்ள எல்லாப் பொருட்களையும்
அளந்துவிட முடியுமெனும் கர்வம் கொண்டிருந்த
அங்குலப் புழுவொன்று,
ஒருநாள், குயிலின் பாடலினை அளக்கமுயன்று
தோற்றுத்
தன் கர்வம் அழிந்த
கதையினைக் கேட்டிருப்பீர்கள்*

அந்தப்புழு, அதே புழுதான்
அதே பச்சை நிறம், பவள வாய்.
பின்னங்கால்களை ஊன்றித்
தன் தலை உயர்த்தி
விழிகளை மூடி நிமிர்ந்தவாறு
அசையாது அமர்ந்திருந்தது ஒரு கிளையினில்

அதைத் தின்ன வந்த குருவி ஒன்று
பார்த்துத் திகைத்தது

”அட! நீயா? விநோதமாயிருக்கிறதே
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?” என்றது

ஒன்றுமில்லை; சும்மாதான் இருக்கிறேன்”
என்றது புழு

”இல்லை; குயிலின் பாடலை அளக்க முனைந்து
தோற்றுப் போனதிலிருந்து நீ ரொம்ப மாறிவிட்டாய்
நான் உன்னைச் சாப்பிட வந்துள்ளேன்
நீ அஞ்சாமல் அமைதியாயிருக்கிறாய்
என்ன ஆயிற்று உனக்கு என்றுதான்
சொல்லேன்” என்றது குருவி

”சொல்கிறேன்” என்றபடி தொடங்கியது புழு

”குயிலின் பாடல்
பிரபஞ்ச ரகசியத்தை உள்ளடக்கியது.
ஓர் உப்புப் பொம்மையால்
கடலின் ஆழத்தை அளக்கமுடியாதது போன்றே
அப்பாடலும் அளக்கப்பட முடியாததென்று
நான் அறிந்துகொண்டேன்

ஆனால் நாம் இந்தக் காட்டை
அளந்துவிட முடியும்
நம்மால்தான் இக்காடும்
இக்காட்டால்தான் நாமும்
உண்டாகியுள்ளோம்
இக் காட்டின் வறுமை, அநீதி, போர்
அனைத்தின் காரணங்களையும் நாம்
நமக்குள்ளே உணரமுடியும்.
ஆகவே அதைச் சரிசெய்துவிடவும் முடியும்
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்” என்றது புழு

_____________
*நன்றி: இந்திய ஆங்கிலக் கவி ஏ.கே.ராமானுஜன் கவிதை: அங்குலப் புழு.

Read more...

நீள் நெடுங் கருங் கூந்தல்!

அதன் ஒரு நுனியோ
பாதாளக் கரண்டியின் கொக்கி
பாதாளத்துள் படிந்து கிடக்கும்
அந்தப் பொருள்? கடவுளே, நானா?
இதயம் துடிக்க அண்ணாந்து நோக்குகையில்
அங்கே ஒளிர்ந்தது ஒரு முழு நிலவு

மறுநுனிகளெல்லாம் சேர்ந்தாற்போல்
இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அந்த முகம்!
என்ன ஆச்சரியம்! எத்தனை கருணை!
என்னைக் கண்டுகொள்வதற்காகவே
எத்தனை விசாலமான கண்களிருக்கின்றன அதற்கு!
என்னைச் செவிமடுக்கவே உண்டான செவிகள்!
இரு துளை நாசி, என்னைப் போலவே
இங்கொரு வாழ்க்கை வாழ
என்னோடு உரையாடுவதற்கென்றே மலர்ந்துள்ள இதழ்கள்!

காதல் என்பதே கண்டுகொள்ளல்தானோ?

உப்பரிகையிலிருக்கும் காதலியை நோக்கி
வீசித் தொங்கவிடப்பட்ட நூலேணியாய்,
பாதாளக் கரண்டியாய், கருநெடுங் கூந்தலாய்
மின்னி நெளிந்துகொண்டிருக்கிறது எப்போதும்
மனிதர்க்கு முன்னே அவர் துயர்

Read more...

Tuesday, November 13, 2012

தோட்டக்காரன்

கொஞ்சும் இயற்கையின்
மஞ்சு தவழும் அரவணைப்புக் குளுமை.
எங்கு பார்த்தாலும் மலர்க்கண்காட்சிகள் போலவே
மனிதர்களும். மருந்துக்கும்
காய்ந்த புல் காணக்கிடைக்காத பசுமை
அங்கேயே ஒரு பூந்தோட்டமும்
நர்சரிச் சந்தையும் இருந்த்தென்றால்
அது எப்படி இருக்கும் என்று
ஊகித்துப் பாருங்கள்

அங்கே ஓர் இளைஞனை நான் கண்டேன் அப்பா

என் தவிப்பினைப் பார்த்த
அந்த நர்சரி இளைஞனும்
தானும் எனக்கு ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்துக் காட்டி உதவி செய்தான்
அப்புறம் மற்றவர்களையும் கவனிக்க வேண்டி
விலகிச் சென்றான்

என் நிலையிலோ ஒரு மாற்றமுமில்லை

முடிவாய் ஒன்றையும் எடுக்காமலேயே
தயங்கியவாறே நான் வெளியேறப் போனபோது
அந்த நர்சரி இளைஞன்
’ஒன்றுமே வாங்கவில்லையா’ என்று
சிரித்தபடியே கேட்டபோது –

அப்பா! அவன் எத்தனை அழகாய்
எத்தனை அன்பாய் இருந்தான் தெரியுமா!

Read more...

பால்ய கால சகோதரி

சகோதரி,
குழந்தைப் பருவத்திலேயே
ஒரு பேரிடித் துயராகப்
பிரிந்துபோன சகோதரனை
நாற்பது நாற்பத்தைந்தாண்டு காலம் கழிந்து
இன்று சந்திக்க வாய்த்ததுபோல
பேசறியாப் பிரியம் உந்த
கடைத் தெருவுக்கும் அடுக்களைக்குமாய் ஓடி ஓடி
உன் ஆர்வ நரம்புகள் அதிர அதிர
அவனுக்காக நீ சமைத்ததையெல்லாம்
வந்து வந்து பரிமாறிக்கொண்டேயிருக்கிறாய்

அவனோ காலத்தின் சம்மட்டி அடியால்
ஓர் எளிய நாடோடியாய் மாறிவிட்டிருப்பவன்
வழிப்போக்கன். பிறர்முன்
தன் முக்கியத்துவத்தைத் தாங்க முடியாதவன்
தகுதியில்லாதவன்போல் சங்கடப்படுபவன்
எளிமையும் சிறிதுமான உணவுகொள்வோன்
உன் அன்பளிப்புகளின் வண்ணங்களையெல்லாம்
ஏற்கப் போதிய பாத்திரங்களில்லாதவன்
நன்றியாகத் திருப்பித் தருவதற்கும் ஏதுமில்லாதவன்
இவை எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமலேயே
நீ பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறாய்
அவனது சுவைநரம்புகள் மீதுதான் உனக்கெத்தனை நம்பிக்கை!
சுவை ஒவ்வொன்றையும்
தவறாது அவன் உணர்வது கண்டு பூரிக்கிறாய்

கானகம் ஆறு மலை
நித்ய கார்மேகம் தவழும் சிகரம் – என்றான
அவனது யாத்திரைகளின்போது
ஆற்றங்கரைப் புடவுகளில் ரா முடித்து
பொங்கும் காலையிளம் பரிதியின்
ஒளிப்பேரின்பம் காணுகையிலும்
வண்ணங்களும் சுவைகளும் நிரம்பிய
தேன்கனிகளில் பல் பதிந்து அவன் பரவசமடைகையிலும்
சகோதரி,
அவன் உன்னையும் உன் பிரியத்தையுமே கண்டடைகிறான்

Read more...

Monday, November 12, 2012

நல்ல வாலைப் பருவம் அந்நாளிலே

அவனுள் கனன்ற காமம்தான்
எத்தனை இரகசியம்!
(இன்று வெளிப்படை)

நெடிது நீண்ட இரவின் தனிமைக்காடு கடக்கையில்
அச்சமூட்டும் கதைகளில் அழகும் இரத்த தாகமுமாய் உலவும்
அந்த மோகினிகளில் ஒருத்திதான் அங்கு வந்து
அவனை எதிர்கொள்ளக்கூடாதா என ஏங்கினான்

தீபாராதனையை வெறித்தபடி-
இந்தக் கடவுள் மீனாட்சிதான்
அவனைக் காதலித்தும் கட்டிக்கொண்டும்
இன்பம் காண வேண்டுமெனும் பிடிவாதத்
தீவிரத்தால் கனன்றான்

அருளுமிழும் விழிகளுடை
கன்னிகாஸ்திரீகளையே
அவன் மனம் நாடியதை உணர்ந்தான்

தன் மனம் மொத்தமும் கரைந்து அழிந்துபோகக் கண்டான்
மருத்துவமனையுள் இயங்கிக்கொண்டிருந்த
பெண் செவிலியர்கள் கண்டு

Read more...

செல்வி அம்ருதா

பாப்பா என விளிக்கப்படுவதை
ஆட்சேபிக்க வேண்டும்போல் கிளர்ந்தேன்
முழு வளர்ச்சியொன்றின் பூப்பையும் கனிவையும்
உள் உணர்ந்தவள்போல் பொங்கி நின்றேன்
அற்புதமொன்றின் வெளிவிளக்கமோ என் உடல்?
ரசித்து ரசித்து மாளவில்லை

உணர்ச்சிப் பெருக்கினால்
அழகான ஆடைகள் எண்ணற்றன உண்டாக்கிவிட்டேன்
ஆடைகளின் விதங்கள் கூடின எனினும்
எந்த ஒரு ஆடையும் என் அழகைக் குறைத்துவிட
அனுமதிக்கவில்லை என் கவனம்
சிக்கென உடையணிந்தேன்

இப் பெண்ணுடல் அழகு
ஆணுடலை ஈர்க்கும் பொறியோ தந்திரமோ அல்ல
தானே தனக்குள் நிறைந்த முழுமை
பேரெழில், உன்னதப் படைப்பு
கவனி:
பாலிலி இனப்பெருக்கம் செய்யும் ஓருயிரியாய்
மனிதன் படைக்கப்பட்டிருந்தால்
இன்றிருக்கும் ஒற்றை மானுட உடல் எதுவாயிருக்கும்? சொல்

’அள’ என்று நிமிர்ந்துநிற்கும் என் உடலை
நெருங்கி அளவெடுக்கக் கூசும் தையற்காரா...
வீதியில் போகும்போது
என்னை விநோதமாய் உறுத்துப் பார்க்கும் அசடே!
அச்சம் அசூயையினால் சிதைவுண்ட வேட்கையின்
கழிசல் பார்வைகளே!
எம் அழகையும் சிரிப்பையும்
விளம்பர சாதனமாக்கும் சாமர்த்தியங்களே!
இன்னும் கூர்ந்து பாருங்கள்:
உம்மை விலக்கி நடக்கிறது இவ்வுடல்
எத்தனை அழகுடன்! எத்தனை தீரத்துடன்!
எத்தனை கம்பீரத்துடன்! மற்றும்
எதனின் விளம்பரமாய்?

Read more...

Sunday, November 11, 2012

தங்க லெட்சுமி

இச் சந்திப்பிற்காகத்தானோ
இந்தப் பணியிடைப் பயிற்சி?
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்
என் இளமையிலும் நான் உன்னைச் சந்தித்திருக்கிறேன்
இதே போலவே என்உள்ளங் கொள்ளை போகக்
கவரப்பட்டிருக்கிறேன்.
அதே மாறாத ஈறு-பல்-இதய முழுச்சிரிப்பு!
காலத்தால் சிதைக்கவே முடியாத ரகசியமாய்
நிலைபெற்றிருக்கும் உன் குழந்தைமையின்
இரகசியம் யாது தேவி?

நிகழும் உன் உடலின் ஒவ்வொரு அசைவிலும்
உயிரின் பரவசம் தரும் அதே மின்னல்!
பொங்கிப் பொங்கித் ததும்பும் ஓர் ஆனந்தம்
உன் உள்ளில் எப்போதும்
உயிரின் பாடலை
முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறதெப்படி?
படைப்பின் பூரண நிறைவை
உயிரின் அணையாத ஆனந்தச் சுடரை
போர்க்களத்தூடும் புயல் வெளியூடும்
நீ தொடர்ந்து பாதுகாத்து வந்து நிற்கும்
சாகசம் கண்டு விக்கித்து நிற்கிறேன் நான்!

உன் அண்மை அருவி பாய்கிறது என் மேல்.
பாறை விலக்கம் தண்ணொளி மாறா நதியாய்
விலகிச் செல்கிறது

பெருமழை பொழிவதற்கு
அரைக் கணம் முந்திய மேகம்போல்
மனம் விம்மிக் கண் ததும்ப வைத்துவிட்டது
உன் இறை வணக்கப் பாடல்.
உனக்குப் புலமை போதாத மொழியானதால்
வீட்டில் எழுதிக் கொடுத்த அறிக்கையை
நன்றியுரையை அவைக் கூச்சமற்ற
உன் மாறாத பொலிவின்
கம்பீர மின்னலொளிர வாசிக்கிறாய்!

பெண்கள் குழுவிலிலேயே புலமை மிக்கவளாய்த் தோன்றிய
பெண்மணி ஒருத்தியும் உனக்கருகேதானிருக்க
சிறுபான்மை ஆண்களிலொருவனாயிருக்கும் என்னிடம் வந்து
உன் சந்தேகத் – தெளிவை நீ தீர்க்க வந்து நிற்கையிலும்
என் மகிழ்ச்சியையும் மீறி, நான் அதைக் கேட்கையிலும்
உன் பதிலை நான் எதிர்பாராதவன் போலும்
நீயும் அதை அறிந்து வந்த காரியத்தை முடித்துச் செல்ல
கடந்து சென்ற அந்த நிமிஷ வெள்ளத்தில்
உன் மாறா இளமையினதும் அழகினதும்
இரகசியத்தை அறிந்தேன் தேவி

தங்கக் கழுத்தணி ஒன்று
இத்தனை காதலுடனும் அர்த்தத்துடனும்
ஒரு கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்ததை
இதுவரை நான் எங்கும் கண்டதில்லை, தாயே!

Read more...

வள்ளியம்மா

கருநீலப் பூ என்ற ஒரு சொல் உதித்ததுமே
என் கடல் ஆழத்திலிருந்து மேலேறி வந்தது
உன் நினைவு. வள்ளியம்மா…
கருமை நிறமுடைய பெண்மணியே…

குடும்பப் பொறுப்பற்ற குடிகாரக் கணவனும்
மாசிலாத இரு குழந்தைகளின் முகமும்
உன்னைச் சோர்விலா உழைப்புக்கு உந்தினவோ?
வீடுகள் இரண்டொன்றின் தூய்மைப் பணியினை
மாயமான ஒரு மகிழ்ச்சியோடு செய்துவந்தாய்

முடிவிலாத தூய்மைப் பணியினால்
அழிவிலாத ஒரு பெண்ணானாய் நீ எனக்கு
உன்னைக் காணும் தோறும் அலட்சியப்படுத்த முடியாத
ஒரு மரியாதை கனன்றது என்னுள்
உன்னைப் போன்ற ஒரு நல்லுறவை
எங்கள் குடும்பம் ஒரு நாளும் அடைந்ததில்லை

பணி செய்தபடியே
வீட்டம்மாவோடு உன் ஓசைமிக்க உரையாடல்
நம்மைத் துயரணுகாதபடித் தற்காக்கும் ஒரு யத்தனமோ
இளைப்பாறலோ என்றுதானேயிருந்தது?
துயரொழிக்கும் மார்க்கத்தை
நாம் இன்னும் கற்றோமில்லையோ தோழி?

கணவனது பிரிவும்
அவன் இன்னொருத்தி மற்றொருத்தி என்று
திசை தேறாது சென்ற வாழ்க்கையும்
உன்னைச் சுட்டதின் காயங்களையும் வலியையும்,
தனித்திருந்து ஊரார் மெச்சத்
தன் கவுரவம் பேணிக்கொண்ட
உன் வாழ்வையும் நான் அறிவேன்

இவை அனைத்துமே தளைகளென
ஒரு நாள் நீ உணர்ந்தாயோ?
இல்லையெனில் வேறென்ன?
அன்று நீ பணி செய்யத் தொடங்கியிருந்த விடுதியில்
விடுதியறை ஆண்களோடு விளையாடும் வனிதையாக
மாறிப்போனதாய்க் கேள்விப்பட்டோம்
கட்டறுந்த வெள்ளமும் புயலுமான
உன் விடுதலையின் மகிழ்ச்சியும் உண்மையில்லையா?
ரகசியமான ஒரு மவுனத்தின் பொருளை
நாம் அறியவில்லையா?

ஒரு நாள் அதிகாலை விடுதி முன் நடுரோட்டில்
கடப்பாரையால் ஓங்கி மண்டை பிளக்கப்பட்டு
இரத்தம் தோய்ந்த கருநீலப் பூவாய் நீ கிடந்ததை
ஓடோடி வந்து பார்த்தோம்.
எம் இதயத்தைப் படபடக்க வைக்கும் எத்தனை அமைதி தோழி,
எத்தனை அமைதி அங்கு நிலவியது!

காவலில் சரணடைந்த உன் கணவனின்
அனாதை ரிட்ஷாவிலே அனாதைப் பிணமாய்,
உன் உடல் மண்மூடிப் போகுமுன்
பிணப் பரிசோதனை அறை முற்றத்து இருளில்
இரவெல்லாம் நட்சத்திரங்களை வெறித்தபடி கிடந்தனவே
எறும்புகளுடனும் ஈக்களுடனும் இமையாத உன் விழிகள்!

இத்தகைய உக்கிரமான முடிவை வேண்டித்தான்
ஒரு திசைமாற்றத்தை நீ மேற்கொண்டாயோ?
துயரறுக்கும் மார்க்கத்தை நாம் இன்னும்
கண்டடையவில்லையே தோழி…

Read more...

Saturday, November 10, 2012

அலுவலகத்தில் அவசரமான வேலைகள்

தன் உச்சபட்ச வேகத்தில்
விரையும் குதிரைக் குளம்பொலிக்க
இருக்கை புகைய, ஈரமெலாம் ஆவியாக,
தூசுப்படலத்தால் அறை மறைய,
அவள் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள்

எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
இனம் கண்டு – பிடித்து- அறைந்து நிறுத்தப்பட்ட
எதிரியின் முகத்தில் – குத்துச் சண்டை வீரன்
ஆத்திரத்துடன் மொத்தும் குத்துக்களாய் விழுந்தன

முடிந்ததும் கைக்குட்டையால் முகம் ஒற்றுகையில்
உடம்பெங்கும் பொங்கி விரலெங்கும் வழியும் கருணையுடன்-
இரத்தம் வழியும் எதிரியின் முகத்தை அவள் துடைத்தாள்

உடனடியாகக் குருதியில் கலக்கக்கூடிய மருந்தை
ஊசியின்றி உடலுக்குச் செலுத்த முடியாது
சற்று நேரம் இவனைக் கொன்று கிடத்தாமல்
அறுவை மருத்துவம் பண்ண முடியாது...

விரல் நுனிகளில் குத்திக் கொள்ளாமல்
ஒரு குண்டூசியை எடுக்க அவளுக்குத் தெரிகிறது
கூர்மைக்கு மறு நுனியிலிருக்கும் மழுங்கை
கூர்மைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தவும் தெரிகிறது
இரு புறமும் கூரான வாளையும் தெரியும் என்கிறாள்
நறுக் நறுக்கென்று
அதைப் பயன்படுத்தும் கருவியையும்
தன் மேஜைமேல் வைத்திருக்கிறாள்

Read more...

மகள் வரையும் அம்மாவின் முகச் சித்திரம்

தலையை ஒழுங்காக்க் காட்டித் தொலை, பிசாசே!

ஒழுங்காகத்தானேம்மா காட்டிக் கொண்டிருக்கிறேன்
நீங்கள் எனக்குத் தலைவாருவது ஏன் இப்படி வலிக்கிறதம்மா?
உங்கள் விரல்களிலும் முகத்திலும் ஏனம்மா இத்தனை கடுமை?
அறியாத சிறு தவறுக்கும் ரத்தம் வந்துவிடும்போல்
மண்டையில் குட்டுகிறீர்கள்

வேலை செய்து முரடேறிய உங்கள் விரல்களில்
அன்பின் இதம் தரும் மென்மையை
நான் அனுபவித்த வேளைகளை எண்ணி
ஏங்குகிறேன் இன்று.
அன்பு கொஞ்ச வேண்டிய வேளையிலும்
இந்தக் கோபம் உங்களுக்கு
எங்கிருந்துதான் வருகிறதோ?

எந்தப் பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலும்
ஒன்று, உங்களை அவலட்சணமாக்கும் கடுகடுப்பை
அல்லது எனது மனம் இருளும்படியான துயரத்தையே
நான் உங்கள் முகத்தில் காண்கிறேன்.
ஆனால் அம்மா, நீங்கள் சிரிக்கும்போதோ
உங்கள் முகத்தின் அற்புதமான அழகுக்கு
அத் துயரமே பின்சாரமாயிருப்பது கண்டு
பிரியம் பொங்குகிறதம்மா
இன்னதென்றறியாத அத்துயர்மீது

சரியம்மா, இப்போது என்ன யோசிக்கிறீர்கள்?

எனது அழகான அம்மா,
இப்போது நீங்கள்தான் என் மகளாம்.
இப்படி உட்காருங்கள்,
நான் உங்களுக்குத் தலை வாரப் போகிறேன்.
முதலில் நன்றாய்க் கழுவித் துடைத்து வாருங்கள்
உங்கள் முகத்தை

கடுகடுப்பு நீங்கிய முகத்தின் தெளிவில் – மின்னும் –
திசை தவறாத ஒரு கடுமையிலும் துயரிலும்தான்
நீங்கள் எவ்வளவு அழகாயிருக்கிறீர்கள்!
கொஞ்சம் பொறுங்கள் அம்மா,
இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் முகத்தை
எப்படி பளிச்சிட வைக்கிறேன் பாருங்கள்!

உங்கள் விழிகளுக்கு மைதீட்டவே வேண்டாம் அம்மா
ஒரு சின்ன தொடுகையால்
விழிகளைக் கூர்மைப்படுத்தப் போகிறேன்
நீங்கள் ஒன்றும் பேசக்கூடாது
அசையாமல் சும்மா இருக்க வேண்டும்
இடையூறு செய்தால் மண்டையில் குட்டுவேன்
(கோபம் தவறில்லை அம்மா;
அது திசை தெரியாமல் அலைவதுதான் தவறு)

இந்த வயதிலும் கூந்தலில்
ஒரு நரை இல்லை; பெருமையாயில்லையா உங்களுக்கு?
அம்மா, நான் தலைவாரிச் செய்த அலங்காரம் இது
அந்திவரை இப்படியே இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்

இப்போது இந்தக் கண்ணாடியில்
உங்கள் முகத்தைப் பாருங்கள்
என்மீது கோபம்வந்தால் குட்டுங்கள்
அன்பு பொங்கினால் கொஞ்சுங்கள்

Read more...

Friday, November 9, 2012

அகால மரணங்களும் தூய-தன்-எழுச்சியும்

கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே
அது இதுதான் என்பதுபோல்
வியத்தகு அழகுடன் அவள் பிறந்தாள்

அடர்ந்த கருங்கூந்தலும் பிறை நுதலும்
அகண்ட கரிய விழிகளும்
சிற்பி வடித்ததுபோன்ற நாசியும்
இன்ப ஊற்றுப் போன்ற செவ்விதழ்களுமாய்
செவ்வியல் அழகின் இலக்கணச் சிலையோ
எனும்படி அவள் திகழ்ந்தாள்
அவள் பேச்சிலும் மூச்சிலும்
உடலின் ஒவ்வொரு அசைவிலும்
பொங்கி வழிந்தது உயிரின் கொந்தளிப்பு
மண்ணின் துயர் தீண்டியிராத
தேவதா காலமோ அது?

அகால மரணம்போல்
எங்குபோய் ஒளிந்துகொண்டது
இன்று அந்த அழகெல்லாம்?
யாரோ திருடியது?
’நீ பிறந்திருக்க வேண்டிய இடமே வேறு’
எனும் சுயவதைகள் விடையாமோ?
திருடப்பட்ட எல்லா அழகுகளும்
அந்த வேறு இடத்தில்தான் கொலுவிருக்கிறதாமோ?
பொறாமையோ? அல்ல; பகைமையற்ற
துயர்க் கனலோ? வேகமோ?
சுரணையற்ற உலகின்
அன்பில்லாத இதயத்தால்
யாது செய்திட முடியும் எனும் புரிதலோ?

Read more...

ஒளி

தன் ஒவ்வொரு அணு இலையும் பளபளக்க
ஒளியின் பாலாபிஷேகத்தை அனுபவித்தபடி
தன் எல்லாக் கைகளையும் நீட்டி அசைத்து
கிறங்கி பரவசித்துக் கொண்டிருந்தது
புதுக் குழியில்
ஒரு குழந்தை உயரம்
வளர்ந்திருந்த அந்தச் செடி

பொருள்களைத் துலங்கச் செய்யும் இந்த ஒளியே
உயிர்க்குள் புகுந்து அதனைப் பேணுகிறதும்
மூளைக்குள் புகுந்து அறிவாகச் செயல்படும் இந்த ஒளியே
மூளையின் செயல்பாட்டை முற்றுமாய் அணைப்பதும்
ஞானத்தின் வடிவாக எங்கும் விரிந்து நிற்கும் இந்த ஒளியே
அரிதான பார்வையை நல்குவதும்

ஒளியின் பாலாபிஷேகத்தில்
அனைத்து உயிர்களும் திளைத்து மகிழ்கையில்
தன் மகனைப் பற்றிய
ஒரே மனக்குறையை உடைய தாயாக
பார்வையற்ற மனிதனின்
விழிகளை வருடி அழுகிறது ஒளி

Read more...

Thursday, November 8, 2012

இன்று இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

உடல் களைத்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவேனேயன்றி
இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

பகலெல்லாம் வேலைகளில் கழித்து
அருகருகாய் அவரவர் வேலைகளில்
மவுனமாய் ஈடுபட்டபடி
நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள
நேரமில்லாமலாகி விட்டதால்
உன்னோடு உரையாடுவதற்காக
இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

இவ்வேளை செய்வதற்கும்
அரிய பல பணிகள் பாக்கியுள்ளன எனினும்
அவற்றை அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டுமெனும்
உத்வேகம் போய்
ஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ
எனும் அச்சமோ பதற்றமோ இன்றி
அமைதியான...
இந்த இரவு முழுக்க உன்னோடு
உரையாட வேண்டி
விழித்திருக்கவே விழைகிறேன்

இந்த இரவினுள்ளும் என்னுள்ளும்
இதுகாறும் ஒளிந்திருந்து
இன்று சந்தித்துக்கொண்ட
மா மவுனம் நீ
பெரு விழிப்பு
பேரறிவின் ஊற்று
பெருகி
இப் பிரபஞ்சமாய் விரிந்த
வெள்ளம்
வீடு

Read more...

அன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்

என் சிறிய பூமியின்
பாறை இறுக்கம் நெகிழ்ந்து உருகி
குளிர்ந்த நீர்த் தடாகமாகிவிட்டதும்
வேரோடு மிதக்கத் தொடங்கியது எனது வீடும்.
வீட்டின் சுவர்கள்
பறக்கவோ சமன்நிலை காக்கவோ,
இல்லை, மிக நன்றாய் மிதக்கத்தானோ
மலரிதழ்களாய் விரியத் தொடங்கின?

அவ்வேளைதானோ
கூரை இடிந்து நொறுங்கி விழும்
அந்த உற்பவம் நிகழும் வேளையும்?

Read more...

Wednesday, November 7, 2012

நாற்காலி

வெறுமையான நாற்காலியைக் காணும்போதெல்லாம்
துயருற்றதுண்டு ஒரு காலம்!
அப்புறம், அதன் வெறுமையின் மகத்துவம் கண்டு
வியப்பில் மனம் நெகிழ்ந்து போனேன்
அதன்பின் ஒரு நாற்காலி வெறுமை
கண் பனிக்க என்னை வசீகரிப்பதே வளமையாயிற்று
தன் மீது அமர்பவனை அது கடவுளாகவன்றோ ஆக்குகிறது!

எத்தனை தீவிரமாய் முழிக்கிறது இன்று அந்த நாற்காலி!
வந்தமர்ந்த அனைவரையும் – அமர அமர
பொசுக்கிச் சாம்பலாக்கி ஊதிவிடும் அதன் மின்சாரக் கனல்!

Read more...

மீண்டும் அந்தக் குருவி

1.
என்னைக் கண்டு ஒரு சிறு குருவி
பதறி விலகி ஓடியது கண்டு
துயருற்றேனே அதை மறந்து
எதையெதையெல்லாமோ தேடி
எங்கெங்கெல்லாமோ அலைந்து விட்டதெண்ணி
மீண்டும் துயருற்ற வேளை…

மீண்டும் அதே போலொரு வேளை
அதே போலொரு இடம்
அதே போலவே நடந்துகொண்டிருந்தவன்
சட்டென்று நின்று விட்டேன். எட்டும் தூரத்தில்
அதே போலவே இரை கொத்திக்கொண்டிருக்கும்
அதே போலொரு சிறு குருவி

காலூன்றி எழுந்து
தளர்நடை பயின்றபோது
குதித்துக் குதித்து என் கைக்கெட்டாது விலகி விலகி
நான் மகிழ விளையாட்டுக் காட்டிய
அதே தோழிதானே நீ?

2.
கூடு, கூடு பிரிந்த தன் உயிரைக் காண்கிறதோ?
வெறுமையான கூட்டின் ஆறாத வெப்பமும்
கூடு துறந்த விண் திரியும் கனலும்
ஒன்றேதானோ?

3.
பூமியில் காலூன்றி
அது தன் இரையைப் பசியோடு
கொத்தித் தின்றுகொண்டிருந்த்து
வெகு ஜாக்கிரதையாக
மூச்சிரைக்கும் வேகமே தெரியாதபடி
அதனருகே புல் நுனிகளில்
துளிகள் நீட்டிக் காத்திருந்தேன்
அதன் அடிவயிற்றின் மென்மையையும்
கிள்ளும் கால்களையும்
என் கன்னத்தில் உணர்ந்தபடி
மெய் சிலிர்த்திருந்தேன்
ஏக்கத்துடன் சிவந்திருந்த என் உதடுகளை
அதன் தீண்டலே வந்து முத்தமிடும்வரை
பொறுமையோடிருந்தேன்
பெருமிதமான என் உயிர்மூச்சில்
அது என் அன்பைத் தொட்டுணரும் அண்மை!
என் ஆருயிரே என் முன் தோன்றி
என் கண்ணீரைத் துடைத்து நிற்கும் அற்புதம்!

Read more...

Tuesday, November 6, 2012

குயில் கூவும் மரச்செறிவின்...

குயில் கூவும் மரச் செறிவின் நிழலுக்கு வரச்சொல்லி
உன்னோடு உரையாடக் காத்திருந்தேன்
உன் தாமதத்தில் நான் படுவதோ
ஆயிரமாயிரமாண்டு காலப் பாலைத் துயர்
பதற்றத்தோடு நீ வந்து பேசிவிட்டுச் செல்வதிலோ
நம் இதயத் துடிப்பின் நிறைவேறாத பரிவர்த்தனையின்
கொடுநொருப்பே அதிகரிக்கிறது
அறிவு எனும் வினை உக்கிரமான அமைதியும் உரமாகி
மரித்துப் பிறந்த புத்துணர்வின் மணம் வீசியபடி
கண்ணெதிரே
பூக்கள் மலர்ந்து மலர்ந்து உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
அவசர அவசரமாக வந்துபோகும் உன் காலடியில் மிதிபட்டு
அவை உன்னை சலிக்காமல் வரவேற்றபடியிருப்பதையும்
நீ அறியவில்லை
இரண்டு ஆன்மாக்கள் ஒருக்காலும் சந்திக்க முடியாத
கலியில் நாம் வாழ்கிறோமோ எனச்
சோர்ந்து மடியும் முடிவுக்கும் ஒரு நாளும் வரமாட்டேன்
என்றென்றோ நிகழ்ந்துள்ள சந்திப்புகளின்
வாசனைகளை நுகர்கிறேன்
இக் கடுங்கோடையில் வெள்ளமாய்ப் பூத்துப்
பேசும் இம்மலர்களின் மணமும் ஒளியும்தான் என்ன?
இரண்டு ஆன்மாக்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம்
கோயில் கோயில்களாய் மலர்கின்ற
இப்பூமியெனும் கோயிலிலன்றோ நாம் வாழ்கிறோம்!

Read more...

இன்றைய ஒரே ஆசுவாசம்

அமைதியின்மையின் குட்டிப் புயலோ
அமைதியினைத் தாங்கிக்கொள்ள இயலாத
சஞ்சல வேகத்தின் பூதப் பெருக்கமோ
மனச்சிதைவின் ஆட்டமோ
பைத்திய வெறியோ
கெட்ட கோபமோ
என்ன தீவினை இது?

முருங்கை மரத்தை முறித்துச் சிதறியாயிற்று
விளையாடும் சிறார்களின் தலைகளைக் கலைத்து
கண்களில் தூசியை அள்ளித் திணித்தாயிற்று
வசவுகளைக் காதில் வாங்காது
குடிசைகளின் கூரைகளைப் பிய்த்தாயிற்று
போகும் வழியில் சில மரங்களைக்
குப்புறப் பிடித்துத் தள்ளியாயிற்று
மரங்களின் உச்சியைப் பிடித்து ஆட்டோஆட்டு என்று
ஆட்டித் தீரவில்லை
தளிர்களுக்கும் பூக்களுக்கும் பிஞ்சுகளுக்கும்
அகால மரணத்தை வழங்கியாயிற்று
காக்காய்க் கூட்டைக் கீழே உதைத்துத் தள்ளியாயிற்று
இடையிடையே சற்று மூச்சு வாங்கிக்கொண்டு
நிற்கும் பயங்கர மவுனத்தைத் தூக்கிக்கொண்டபடியே
மீண்டும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது
உடலையும் மனதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
வெயிலைவிடக் கொடூரமான
வறட்சியை உண்டாக்கும் இத் தீவினை!

மேலே சில பறவைகளோ
இச் சலனத்தைச் சமன்செய்ய விழைபவையாய்
வளைந்து வளைந்து சிறகடிக்கின்றன

மொட்டை மாடியில் நின்றபடி
உல்லாசமாய்ப் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது
களங்கமில்லாத குழந்தையொன்று

Read more...

Monday, November 5, 2012

நான் என்பது பற்றி

மனிதனின் முதல் பிரக்ஞையைக்
குறிக்கும் சொல்

ஆதி முதல் வார்த்தை

சொல்லில் விளக்கப்படமுடியாத
ஓர் அனுபவ நிலை. அதாவது
தன் பொருளை மறைக்கத்
தானே திரையாகி நிற்கும் விசித்திரச் சொல்
இந்த விசித்திரச் சொல்லின் வேறுவேறு பெயர்களே
அனைத்துச் சொற்களும்!

இக் கவிதையை எழுதுகிறவன் நான் அல்ல
எழுதுவிப்பவனே நான்
அது தனிமையை உணரும் ஒரு சொல் அல்ல;
தனக்கு வெளியே என்று ஒன்றுமில்லாத
முழுமையைக் குறிக்கும் ஒரு சொல்
எளிதில் துன்புறுத்தப்பட்டுவிடக் கூடிய
ஆளுமை அல்ல; ஆளுமையின்மையெனும்
பேராளுமையின் நற்பெயர். இவ்வாறு
இருப்பும் இன்மையுமான அனைத்தையும் குறித்துவிடும்
உன்னதமானதோர் ஒற்றைச் சொல்

நானே கடவுள்; ஆம்

மாபெரும் பொறுப்பிற்கு
நாம் சூட்டியுள்ள பெயர்

சுயநலப் பொருமலோ சகமனிதப் போராயுதமோ
மடியோ மந்தமோ அறிவீனமோ அல்ல;
நான் என்பது பேரன்பு, எழுச்சி, நுண்ணறிவு
சுரணை மற்றும்
அச்சமறியாத அறச் சீற்றமேயாம்

நானே சத்தியமும் ஜீவனும்
நானே வழியும் ஒளியும்
ஆகவேதான்
நானெனும் தன்னைப் பற்றிய அறிவே
ஒருவனுக்கு வேண்டப்படுவனவற்றிலெல்லாம்
மிகப் பெரியதாய் இருக்கிறது

இச் சொல்லை அதன் பொருள்பட
உச்சரிக்கத் தெரிந்தவனே கவிஞனாகி விடுகிறான்

Read more...

வருகையாளர்கள்

வாயில் கதவின் தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்
ஆளை விசாரித்து
”மேலேதான் – போங்கள்” என்னும்
பதில் பெற்றுக்கொண்டு
மாடிப் படிக்கட்டுகளில்
நடந்துவரும் ஒலியும் கேட்டன
வரும் அந்த நபர்
ஏற்கனவே நம்மைச் சந்தித்தவர்தான் எனில்
இன்று மீண்டும்
அவர் நம்மைக் காண வருவதன் நோக்கமென்ன?

பக்கபலத் துணை தேடியா?
தன்னறிவிலாத் தப்பித்தலின் வடிகாலாகவா?
ஓர் உயர்தரமான பொழுதுபோக்கா?
ஆறுதல் வேண்டியோ?
சிறு இளைப்பாறலுக்கா? எதையாவது
பெற்றுக்கொள்ளலாமெனும் ஆசையினாலா?
தன்னிடமுள்ளதையெல்லாம் அள்ளி அள்ளி வழங்கி
மற்றவர்முன் தானே தன்னை வியந்து
வீங்கிக் கொள்வதற்கா?

அது-
நோக்கமற்ற ஓர் அளவளாவலாய்
பகிர்தலாய்
தீவிரமானதோர் விசாரணையாய்
ஒரு புன்னகையாயிருக்கலாகாதா?

நேசமெனும் போர்வைக்குள்தான்
எத்தனை எத்தனை இரங்கத்தகு பாத்திரங்கள்!

Read more...

Sunday, November 4, 2012

புத்த பூர்ணிமா

தப்பிக்க வழி காணாது
நாளெல்லாம் நடுங்கியபடி
கிலி பிடித்து
உள்ளோடி ஒளிந்துகொண்ட எலியே
உன் விழிக்குள்ளிருந்த
ஒளிப்புள்ளிதான்
புத்தமாய்த் தோன்றி
உன்னையே மிரட்டுகிறதோ?

Read more...

புத்த பூர்ணிமா

காட்டின்
ஆறாத ஒளி நிழல் வடுத் தாங்கிய புலியே
உன் விழியாழத்திலிருந்தோ
வெளியேறி நின்று
இவ்வுலகைக் காண்கிறது
இம் முழுநிலா?

Read more...

புத்த பூர்ணிமா

எங்கே,
பிறை நிலவை நெருங்கி
இமைக்காமல்
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த
அந்த விண்மீன்?

Read more...

Saturday, November 3, 2012

அப்படியென்றால்...

இக்கவிதைகள் ஒவ்வொன்றுக்கும்
ஓரோர் கோயில்-
கல்லும் மண்ணும் இரும்பும் சிமென்டும்
குருதியும் கொண்டு-
கட்டிக்கொண்டேயிருப்போமா?

க+விதைகள் முளைக்குமோ
கட்டிடங்களுக்கு அடியிலிருந்து?

Read more...

செவ்வாய்க் கிரகத்தில்

நீர்ச்சுவடு கண்டால்
போய்க் குடியேறிவிடலாமே எனத்
துடிதுடிக்கும் அரைகுறை ஞானத்
திமிர்கனலும் விஞ்ஞானிகளே,
தாகத்துடன் இங்கே
ஒரு குவளைத் தண்ணீரைப் பருகும்போது
இந்த பூமியினது
அருமையினை நீவிர் உணர்ந்ததுண்டா?

மழையை
வான்தரும் கொடை, பேரருள்
எனப் பொங்கிப் பரவசிக்கிறவர்களும்
மழை பொய்க்கும்போதும்
வெள்ளம் நிலநடுக்கம் என்று
இயற்கை சீறும்போதும்
அன்பில் நாம் தவறியதுதான் காரணமோ
என்று பதறுபவர்களுமான
எளிய மனங்கள் குறித்து
உங்கள் விஞ்ஞானம் உரைப்பதென்ன?
அதாவது,
கவிதை குறித்தும்
இப்பூமியினைப் பேணத் தவிக்கும்
தாய்மை குறித்தும்?

Read more...

Friday, November 2, 2012

ஜன்னல் திரைச்சீலை

பொன்னோமரகதமோ என மின்னுகின்றது,
எத்தனையோ பத்தாண்டுகளாகிய பழம்சேலைக் கிழம்,
முத்தமிடும் ஒளிக்கதிரோன் ஊடுருவும் பேறுபெற்ற
ஜன்னல் ஒட்டி, எழுந்து வந்து நிற்பதனால்!

Read more...

வீணா கானம்

உணர்நரம்புகளால்
ஒன்றிணைக்கப்பட்ட
யாளி முகம், மனிதமுகம், வெற்றுக்குடம்-

விலங்குமுகம் கொக்கரிக்க;
மனிதமுகம் கெஞ்ச;
வெற்றுக்குடம் எதிரொலிக்க
கணிதப் பிரபஞ்சத்தின்
மனித விரலசைவில்
பிறக்கத் தவிக்கிறது,
அலகுமீறிப் பரவிநிற்கும்
பேரிசை

Read more...

நிகழாமை

கதாநாயகன் வில்லனை
நேருக்குநேர் சந்திக்கவேயில்லை
அந்த எளிய நாடகத்தில்
கதாநாயகனே வில்லன் பாத்திரத்தையும்
ஏற்க நேர்ந்ததால்

Read more...

Thursday, November 1, 2012

காலை நடை

சூரியன் உதித்து உறைக்கத் தொடங்கியிருந்த வேளையிலும்
வெளிப்பூட்டுக்கள் தொங்கும் ஒரு வீட்டின்
மொட்டைமாடியில் எரியும் ஒரு விளக்கை-
ஓடிப்போய், ஏறிக்குதித்து
மாடிப்படிக்கட்டுகள் தாவி
அதன் சுவிட்சைத் தேடிப் பிடித்து
அணைக்க வேண்டும்போலிருந்தது
நடவாததால்
அது அவன் மனசுக்குள் சிக்கிக்கொண்டது

அவனைக் கடந்து சென்ற சிறுமியின்
ஈர உச்சந்தலை வகிட்டின்
கச்சிதம் பிழைக்கச் செய்த மயிரிழைகளும் அப்படியே

தெரு ஒழுங்குக்கு மத்தியில்
ஒரே ஒரு இடத்தில் குத்திட்டிருந்த குப்பையும்
ஒரு முள் செடியும்-
அந்தச் சிறு வேலையைச் செய்யாமல்
நடை தொடர முடியாதபடி ஒரு பரபரப்பு

வந்து உட்கார்ந்த இடத்தில், சற்றதிக நேரமாய்
அழுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருந்த
ஹோட்டல் மேஜையினை- ஒரு துடைப்பான் தென்பட்டால்
தானே எழுந்து துடைத்துவிடலாம்போல்
ஒரு நிம்மதியின்மை

நெக்குருகச் செய்தது
யாரோ மேஜைமீது விட்டுச் சென்றிருந்த
காலி சிகரெட் பெட்டியின்
வடிவவியல் நேர்த்தி

Read more...

நான் யாரா? -2

மனித சமூகத்தினிடையே
சுயாதீனமாய் நடமாடமுடியாதபடிக்கு
மிதித்துச் சவட்டித் தாழ்த்தப்பட்டோன்

ஆற்றாமைகளின் சிதறல்களாயிருந்தவன்

ஊமையாயிருந்தவன்
எனினும் அச்சத்தின் அளவுகோல் காட்டுவதுபோல்
ஒருநாளும் கோழையாகிவிட முடியாதவன்

இன்று தன் துயர்அளவு காரணமாய்
பெருந்தனியன் ஆனவன்

எல்லா நம்பிக்கைகளையும் துறந்தவன்

எல்லாவற்றையும் சந்தேகிப்பவன்

கேள்வி கேட்பவன்

ஜாக்ரதையானவன்

துணிந்துவிட்டவன்

தன்னைத் தானே கடைத்தேற்றிக்கொள்ளும்

மீமிகைப் பெருங்கனலால்

கடவுளானவன்

முழுமையானவன்

மெய்ம்மையுணர்ந்தோன்

புனிதமானவன்

பேரருளாளன்

புத்தன்

தலித்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP