Saturday, September 8, 2012

பச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு

பறத்தலையும் தாண்டி
அளவிலா இவ்விண்ணிலும் பெரிதான
அன்பினைக் கண்டு விட்டவர்கள்போல
இருந்தது
அவர்கள் அமர்ந்திருந்த கோலம்!

பேச்செல்லாம் முடிவிற்கு வந்து விட்ட மவுனத்தில்
ஒருவர் அழகு மற்றவர் அகத்தில்தான்
உள்ளதென்பது போல
அருகருகே இருந்தும்
ஒருவரை யொருவர் பார்க்காதவர்களாய்;
பார்க்காதவர்களாயிருந்தும் பிரியாதவர்களாய்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!

தனித் தனியே தம்மைத் தாமே
ஆழப் புரிந்து கொண்டதனால் பூத்த மவுனத்தில்
அதுவே எங்குமாய் எதிரொளிக்கும்
வெளி பார்ப்பவர்களாய்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!

தம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையினைக்
கண்டு கொண்டதனால் பூத்த மவுனத்தில்
தம்மையே மறந்துபோனவர்களாய்
அவர்கள் அமர்ந்திருந்தார்கள்,
அவ்வப்போது அனிச்சையான
சிறுசிறு உடலசைவுகள் தவிர
ஏதொன்றும் செய்யாத
அதிசயமாய் இருந்தார்கள் அவர்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP