Wednesday, May 11, 2011

ஓடும் இரயில் வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும்
அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது?

புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை
நேர்நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.

உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள்போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?

இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுயாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?

வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டியும்
திரும்பி ஓர்நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக்கொண்டோடாதா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP